சுட்டும் விழி ஹைக்கூ நூல் திறனாய்வு கவிஞர் சி .விநாயக மூர்த்தி

சுட்டும் விழி ஹைக்கூ நூல் திறனாய்வு கவிஞர் சி .விநாயக மூர்த்தி .செல் 9791562765

நூல் ஆசிரியர்  கவிஞர்  இரா .இரவி .

பொதிகை மின்னல் 118.எல்டாம்ஸ் சாலை சென்னை .18. செல் 9841436213  விலை ரூ 40

   மகாகவி பாரதியார் அவர்கள்  வசன கவிதை வடிவில் புதுக்கவிதையை அறிமுகப்படுத்தியது போல் ,ஜப்பான் மொழியின் ஹைக்கூ கவிதைகளையும் அறிமுகப்படுத்தியுள்ளார் .எதிலும் முதன்மையாய் நின்ற பாரதி வழியில் இன்று   சிறப்பாக ,செழிப்பாக வளர்ந்துள்ளது .
 ஜப்பான் மொழியில் இருக்கும் சீர்க் கட்டுப்பாடுகளை ஒதுக்கிவிட்டு ,மூன்று வரிகளை மட்டும் நாம் ஏற்றுக்கொண்டு   இதுவே ஹைக்கூ என்று   எழுதி வருகிறோம் . இலக்கணப் புலவர்கள் எழுதிய மரபுக்கவிதைகள்   பெரும்பாலும் , அரைத்த மாவையே அரைத்து இலக்கியத் தரம் குறைந்ததால் ,
முதாயத் தாக்கம் மிகுந்த புதுக் கவிதைகளும், ஹைக்கூ கவிதைகளும் மக்கள் மனதில் இன்று நீங்கா இடம் பிடித்தன .
ஹைக்கூ கவிதைஎன்றால் மதுரைக்கவிஞர் இரா .இரவி அவர்களுக்கு தனிச் சிறப்பிடம் உண்டு .இலக்கியத்திற்காக இணைய தளங்கள் உருவாக்கி .உலக அளவில் அறிமுகம் ஆனவர் .எல்லாச் சிற்றிதழ் களிலும்  அவரது படைப்புகள் தொடர்ந்து பதிவாகி உள்ளன .ஹைக்கூ நூல்கள்,மற்றும் திறனாய்வு நூல் எழுதி உள்ளார் .
 சுட்டும் விழி என்னும் பெயர் சூடிக் கொண்ட இந்நூலில் ,அழகியல் ,சமுதாயச் சிந்தனைகள் ,இலக்கிய நயம் உள்ளன .

பறக்கும்
நட்சத்திரம்  
மின்மினி !

அருமையான அழகியல் ஓவியம்
நாம் குழந்தையாக இருக்கும்போது தாலாட்டுகிறாள் தாய் .நாம் வளர்ந்த பிறகும் தாலாட்டுவது யார் ? இதோ கவிதையில் கூ றுகிறார் .

உருவம் இன்றியே
தாலாட்டியது
தென்றல் !

வானவில் மின்னும் ஏழு வண்ணங்களை வண்ணத் தமிழில் வர்ணிப்பதே நம் வழக்கம் .ஆனால் ,வானவில்லும் பாடம் போதிப்பதாக கவிதை வரைந்துள்ளார் .

உணர்த்தியது
நிரந்தரமற்றது
அழகு !
 
 கம்பீர மாளிகை இடிந்து நொறுங்கிய கதையை ,எஞ்சி நிற்கும் குட்டிச் சுவர் கூட வரலாற்றுப் புத்தகமே என்று புதிய கண்ணோட்டத்தில் பாடுகிறார் .

கூறியது
வரலாறு       
 
குட்டிச் சுவர் !   


உடலின் மச்சங்கள் அழிவதில்லை .அதுபோல ஒவ்வொருவர் மனதிலும் அழியாத மச்சம் இருப்பதாகவும் ,அதுவே   காதல் என்று கவிதை பாடுகிறார் .

மனத்தில் மச்சமென 
நீங்கா நினைவு
காதல் !

அற்புதமான கற்பனை .
வளர்த்திட்ட மண்ணிற்கு  நன்றி சொன்னது .மரம் .எந்த வகையில் ? கவிதையில் விடை தருகிறார் .

வளர்த்திட்ட மண்ணிற்கு
நன்றி சொன்னது .மரம்
பூ உதிர்த்து !

பளிங்கால் அமைந்த தாஜ்மகாலை உலக அதிசயம் என்று எல்லோரும் புகழ்கிறோம் .கவிஞரோ வேறு கோணத்தில் கவிதை தருகிறார் .

வாழ்ந்தவர்கள் இறந்தனர்
இறந்தவர்களுக்காக வாழ்கின்றது
தாஜ்மகால் !

தமிழ் மொழி உணர்வோடும் ,இன உணர்வோடும் பல கவிதைகள் படைத்துள்ளார் .

தமிழ் என்ற சொல்லின்றி
தமிழுக்கு மகுடம்
திருக்குறள் !

இக்கவிதை தமிழுக்கு புகழ் மகுடம் சூட் டுகின்றது  .
பள்ளிக் கல்வி ,ஆங்கிலத்தைத் திணித்தாலும்  ரத்தத்தில் கலந்துள்ளது தமிழ்தான் .அதனால்தான்

தடுக்கி விழுந்ததும்
தமிழ் பேசினான்
அம்மா !

என்று முதல் கவியில் ,முதல் தரமான கவிதையில் மொழி உணர்வை வெளிப் படித்திள்ளார் .எல்லோரும் தமிழில் பெயர் வைத்தால் ,இனிமையாகத்தான் இருக்கும் என்பதை உணர்த்த

இனிது இனிது
தமிழில் இனிது
அவள் பெயர்     ... என்கிறார்

யுகங்கள் கடந்தும்
இளமை குன்றவில்லை
தமிழ் !

உலகின் முதல் மொழி
மொழிகளின் தாய்மொழி
தமிழ் !

செய்தி வாக்கியம் போல் இருந்தாலும் சிறந்த கருத்தை அழுத்தம் திருத்தமாக கற்கண்டு சொற்கொண்டு கவி வடித்துள்ளார் .
கவித்துவம் மிகுந்த கவிதைகள் நிறையவே உள்ளன .

நிலம் விற்று
பெற்ற பணத்தில்
அப்பாவின் முகம் !

பரம்பரை நிலம் பறிபோன சோகத்திலும் அப்பாவை பாசத்துடன் நினைப்பது அருமை .

பொம்மை உடைந்த போது
மனது   உடைந்தது 
குழந்தை !

மலரினும் மெல்லியது குழந்தை மனம் .சிலரதன் செவ்வி தலைப்படுவார்.என்று புதுக்குறளை ,    புதுக்குரலாக ஒளிகிறது இக்கவிதை .

ஏங்கியது குழந்தை
கதை கேட்க
முதியோர் இல்லத்தில் பாட்டி !

பாட்டி மட்டுமல்ல ,பாட்டியைப் பிரிந்த குழந்தையும் அனாதையாய் தவிப்பதை கவித்திதுவமுடன் கூறுகிறார் .

ஆயிரம் பேர்
தனியாகத் தெரிந்தது
அவள் விழிகள் !

ஓர் ஆயிரம் பார்வையிலே
உன் பார்வையை நானறிவேன் என்ற கண்ணதாசன் திரை இசை நினைவுக்கு வருகிறது .

நடமாடும் நயாகரா
நடந்து வரும் நந்தவனம்
என்னவள்     .....                                                 
துவும் அழகியல் படைப்பே  

 எந்த நூற்றாண்டுக்கும்   தேவையான காந்தியின் கருத்து
க்களை ,பல பாக்களில்  பதிவு செய்துள்ளார் .

மனித உரிமைகளின்
முதல் குரல்
மகாத்மா ! 

மதுவால் தள்ளாடுவது
குடிப்பவன் மட்டுமல்ல
அவன் குடும்பமும் !

 நல்ல படப் பிடிப்பு .
காவிரி நீர் அரசியலாகி விட்டது போல் ,கல்வியும் அரசியலாகி விட்ட அவலத்தை கவிதையில் சுட்டுகிறார்.

காவிரி போல்
அரசியலானது
சமச்சீர் கல்வி !

அம்மாவைப் பாடாதவர் யாருமில்லை  . இவரும் பாடுகிறார் .

உருகிடும் மெழுகு  
உறைந்திடும் அழகு
அம்மா !

என்று உருகிப் பாடுகிறார் .
மனைவியைப் பற்றியும் மறவாமல் புதிய கோணத்தில் கவி புனைந்துள்ளார் .

மாதா பிதா குறு
ஒரே வடிவில்
மனைவி !

பெரியாரின் பகுத்தறிவுக் கருத்தையும் ,பறை கொட்டி முழக்குகிறார்.

எலி மீது யானை
எப்படி ? சாத்தியம்
பிள்ளையார் !

ஈழத்தமிழர் அவலத்தையும் இதய வலியோடு எழுதியுள்ளார் .

வீடு மாறியபோது
உணர்ந்தேன்
புலம் பெயந்தோர்  வலியை !

கவிதை படிக்கும் போது நமக்கும் வலிக்கிறது .  .
ஈழத்தமிழர்கள் லட்சக் கணக்கில் ,படுகொலை செய்யப் பட்டுள்ளனர் .இறந்தவர்களின் ஆவி தமிழகத்துள் நுழைந்து பல அரசியல் தலைவர்களை பழி தீர்த்துக் கொண்டதாக பகிரங்கமாய்ப் பாடுகிறார் .

ஈழத்தில் மரித்த உயிர்கள்
இன்று பழி தீர்த்தன
தேர்தல் முடிவு !

கவிதைக்கு சுவை சேர்ப்பதில் ,முரண் தொடை முக்கிய பங்கு வகிக்கிறது இதோ சில கவிதைகள் .

கோடிகளும் லட்சங்களும்
கோயிலின் உள்ளே
வெளியே பிச்சைக்காரகள் !

கூழ்  இன்றி ஏழை
கோடிகளில் அரசியல்வாதி
ஒளிரும் இந்தியா !

யாரும் வாங்காமலே
மலர்ந்தன பூக்கள்
வாடினால் பூக்காரி !

இக்கவிதைகளில்    முரண் தொடை நயம் தூக்கலாக உள்ளது .
ஹைகூவின்  உயிர்த் துடிப்பு ,மூன்றாம் வரியின் திருப்புமுனையே .இதோ உதாரணங்கள் .

யானைப் பசிக்கு
சோளப்பொறி
இது எல்லோரும் அறிந்த பழமொழி .இதற்கு   உதாரணமான குறைந்த கூலியைச் சொல்வதுதான் வழக்கம் .கவிஞரோ வித்தியாசமாக முடிக்கிறார்.

யானைப் பசிக்கு
சோளப்பொறி
அவள் முத்தம்   ... என்கிறார்

மூன்றாம் வரியின் திருப்புமுனையாக ,மேலும் பல நல்ல கவிதைகள் உள்ளன .

மழை வந்ததும்
உடன் வந்தது
மண் வாசனை !

கொன்ற கோபம்
இன்னும் தீரவில்லை
அதிரும் பறை !
\
ராமன் ஆட்சி
இராவணன் ஆட்சி
ஒழியாத வறுமை !

குழந்தைகளுக்கு
குச்சி மிட்டாயாய்
வாக்களிக்கப் பணம் !

இன்னும் இன்னும் ஏராளம் உள்ளன .

சேமிக்கும் எறும்பு
வருகிறது மழைக்காலம்
மனிதன் ?

மூவறிவுடைய எறும்புகளிடம் ஆறறிவு மனிதன் பாடம் படிக்க வேண்டிய அவசியத்தை கவிஞர் உணர்த்துகின்றார் .
 ஊறுகாய்களை   ,சாப்பாடு போல் சாபிடுவது ,எங்கும் நடப்பதில்லை .இங்கு நடப்பதாகக் கூறுகிறார் .பகுதி நேரம் மட்டுமே பயணப் படுத்தவேண்டிய தொலைக் காட்சியில் முழு நேரமும் முழ்கிக் கிடப்பதை அவ்வாறு கூறுகிறார் .

அயல் நாடுகளில்  ஊறுகாய்
நம்  நாட்டில் சாப்பாடு
தொ( ல் )லைக் காட்சி !

கட்சிக் கொடி தவிர்
பச்சைக் கொடி வளர்
பசுமைத் தாயகம் !

கொடி என்ற சிலேடை நயம் ,தேன் சொட்டுகிறது .
தண்ணீரை வீணாக்க கூடாது   என்று எல்லோருக்கும் தெரிந்தாலும் ,  தண்ணீர் கொண்டு செல்லும் லாரிகளும் ஒழுகத்தான் செய்கின்றன .இதைக் கவனித்து கற்பனைத் தூரிகையால் கவிச் சித்திரம் வரைகிறார் .

கோலமிட்டுச் சென்றது  
வறண்ட சாலையில்
 தண்ணீர் லாரி !

சுட்டும் விழி என்ற இந்நூலுக்குள் கற்பனை நயம் ,அழகியல் உருவகம் .முரண் தொடைச் சுவை ,சிலேடைச் செந்தேன், வீரியம் மிக்க கருத்துக்கள் அதனையும் ஒருங்கே அமைந்துள்ளன.
அனைவரும் அவசியம் படிக்க வேண்டிய இலக்கியப் பெட்டகம்  
 


--

நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.wordpress.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi

 இறந்த பின்னும்
 இயற்கையை ரசிக்க

  கண் தானம் செய்வோம் !!!!!

கருத்துகள்