போராளி திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி

போராளி

இயக்கம் சமுத்திரக்கனி. தயாரிப்பு ,நடிப்பு இயக்குனர் சசிக்குமார் 


திரைப்பட விமர்சனம் கவிஞர் இரா .இரவி


போராளி  என்ற பெயரை பார்த்ததும் போராளிகள் கதையாக இருக்கும் என்று எதிர் பார்த்து சென்றேன் .ஆனால் இது மன நோயாளிகள் மீது அன்பு செலுத்துங்கள் என்று உணர்த்தும் கதை .வசனம் தன்னம்பிக்கை விதைப்பதாக  உள்ளது  .காட்சியில் பல இடங்களில் நகைச்சுவை உள்ளது .முதல் பாதி நகைச்சுவை.இரண்டாம் பாதி அடி தடி ,சமுத்திரக்கனி சசிக்குமார்  வெற்றிக் கூட்டணி படம் என்றாலே ஓடுவதும் ,விரட்டுவதும் இல்லாமல் இருக்காது என்று மீண்டும் நிருபித்துள்ளனர். ஆபாசம் இல்லாமல்   படத்தை இயக்கிய சமுத்திரக்கனிக்கும், தயாரித்த சசிக்குமாருக்கும் பாராட்டுக்கள் .பின்னணி இசை சிறப்பாக உள்ளது .


மன நலம் நன்றாக இருப்பவர்களையும் சிலர் திட்டமிட்டு பைத்தியம் என்று ,வேண்டும் என்றே பட்டம்  கட்டி வாழ்க்கையை சிதைப்பதை சித்தரித்து உள்ளனர். அதிகம் கேள்வி கேட்கும்   சிறந்த அறிவுத்திறனையும் பைத்தியமாக  இந்த உலகம் பார்க்கின்றது என்பதை படம் உணர்த்துகின்றது . சசிக்குமார்  நடிப்பை பாராட்டலாம் .பாத்திரத்தில் நடித்த அனைவருமே நன்றாக நடித்து உள்ளனர் .கஞ்சா கருப்புக்கு நண்பர்களால் அவதிப்படும் வழக்கமான பாத்திரம்தான். முனைவர் கு .ஞானசம்பந்தன் வீட்டை வாடகைக்கு விட்டுள்ள வீட்டுக் காரராக வந்து வீட்டுக் காரியிடம் முடிவு நான்தான் எடுப்பேன் என்று அடிக்கடி சொல்லி நகைச்சவைத  தருகின்றார் .


சுவாதி நன்றாக நடித்து உள்ளார் .மெல்லிய காதல் உணர்வை நன்கு வெளிப் படுத்துகின்றார் .சசிக்குமார் நண்பராக வரும் அறிமுக நடிகர் மிகச் சிறப்பாக நடித்து உள்ளார் .

சதையை நம்பாமல் கதையை நம்பி படம் எடுத்ததற்குப் பாராட்டலாம் .மசாலா இயக்குனர்கள் இது போன்றப் படங்களைப் பார்த்து திருந்த வேண்டும் . அடிக்கடி திருக்குறள் மூலம் செய்து சொல்வது சிறப்பு .வேலை கிடைக்க வில்லை இன்று முடங்கி விடாமல் கிடைக்கும் பெட்ரோல் பங்க வேலை பார்த்துக் கொண்டே பகுதி  நேரமாக ,விளம்பரம் செய்து செல் மூலம் தொடர்பு கொள்ளச் செய்து வேண்டிய பொருள்களை வாங்கிக் கொடுத்து சம்பாதிக்கும், உழைக்கும்  கருத்தை வலியுறுத்துவது சிறப்பு .மூளையே மூலதனம் என்ற வசனம் நன்று .உழைப்பை உணர்த்துகின்றனர் .
முயன்றால் முடியாதது எதுவுமில்லை என்று உணர்த்துகின்றனர் .

   அப்பா இரண்டாவது மனைவியின் பேச்சை கேட்டு பைத்தியமாகி காணாமல் போன முதல் மனைவியின் மகனைப் படிக்க வைக்காமல் சாணி  அள்ள வைத்து கொடுமைப் படுத்தி,  பைத்திய முத்திரைக் குத்தி விடும் கேள்விப் பட்டப் பழைய கதை என்றாலும்  ,இரக்கம் வரும் படி உயிரோட்டமாகப் படமாக்கிய இயக்குனரைப் பாராட்டலாம் .

சுவாதி சிலோன் பரோட்டா வாங்கிவரச் சொன்னதும் .நமக்கு சிலோனே பிடிக்காது  சிலோன் பரோட்டா வாங்கிச் சொல்றா என்ற வசனத்தை ,சிலோன் அரசைப் பிடிக்காது என்று சொல்லி இருக்கலாம்.இலங்கையில் நமது தொப்பிள்கொடி உறவுகள் சிங்கள  அரசு படுகொலை செய்ததுபோககொஞ்சம் எஞ்சி உள்ளனர். அவர்கள் சுதந்திரமாக வாழ்வதற்கு  இலங்கை நமக்குப் பிடிக்க வேண்டும் .அவர்களின் விடுதலைக்கு நாமும் உதவிட வேண்டும் .இலங்கை அரசின் கத்தரிக்கு இந்த வசனம் இரையாகி இருக்கும் அதன் காரணமாகவே இலங்கையில் வெளியிட மாட்டேன் .என்று பணத்தை விட உரிமையை பெரிதாக மதித்து குரல் கொடுத்த தயாரிப்பாளர் இயக்குனர் சசிக்குமாருக்குப் பாராட்டுக்கள் .


கொலை வெறி என்ற ஒரே ஒரு தமிழ்ச் சொல்லை  மட்டும் பயன் படுத்திவிட்டு ஆங்கிலச் சொற்களைப் போட்டு தமிங்கிலமாக்கி,  தமிழ்க் கொலை புரிந்து தமிழ்ப் பாடல் என்று சொல்லி தமிழ்ப் படத்தில் வைத்து பெரிய சாதனைப்  பாடல் என்று சொல்லிக் கொள்ளும்  அவலம் தரும் படியான பாடல்கள் இந்தப் படத்தில் இல்லை அதற்காக இசை அமைப்பாளருக்கு   நன்றி .


இந்தப் படம் பார்த்து விட்டு வரும் போது தெருவில் கண்ணில் படும் மன நோயாளிகளுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்ற உணர்வை மனிதநேயத்தை விதைத்து வெற்றிப் பெறுகின்றார் இயக்குனர் சமுத்திரக்கனி .

ஆடு மேய்க்கும் பெண்ணை வீரம் மிக்கப் பெண்ணாகக் காட்டியது சிறப்பு .அவரும் மிக நன்றாக நடித்து உள்ளார் .
அப்பா அம்மா எப்பொதும் சண்டைப் போட்டுக் கொண்டே இருந்தால் குழந்தை மனம் நோகும் என்பதையும் உணர்த்தி உள்ளனர் .
மன நோயாளிகள் ஓவ்வருவருக்கும்   பின்னே இருக்கும் சோகத்தை சதியை உணர்த்துகின்றது திரைப்படம் .படித்தவர்களை விட படிக்காதவர்களே உதவும் உள்ளத்துடன் மனித நேயத்துடன் வாழ்கிறார்கள் என்பதை படம் உணர்த்துகின்றது .திரைப்படம் சமுதாயத்தை நெறிப் படுத்தும் விதமாக மனித நேயம் விதைக்கும் விதமாக வர வேண்டும் .என்ற நமது ஆசையை பூர்த்தி செய்யும் விதமாக படம் உள்ளது .சண்டை
க் காட்சி வன்முறை மட்டும் தவிர்த்து இருக்கலாம்.

இது போன்ற படங்கள் வெற்றி
ப் பெற்றால்தான் மசாலா இயக்குனர்களும் தயாரிப்பாளர்களும் திருந்துவார்கள் .    

கருத்துகள்