குறையொன்றுமில்லை ...!நூல் ஆசிரியர் கம்பம் புதியவன்.விமர்சனம் கவிஞர் இரா .இரவி

குறையொன்றுமில்லை ...!

நூல் ஆசிரியர் கம்பம் புதியவன்   செல் 994200080277 மின் அஞ்சல் mpputhiyavan@gmail.com

விமர்சனம் கவிஞர் இரா .இரவி


வெளியீடு சொல்லங்காடி 2/35 அறிஞர் அண்ணா சாலை,தெரு மாட வீதி ,திருவொற்றியூர் ,சென்னை .19 sollangadi@gmail.com
விலை ரூபாய் 50
.

குறையொன்றுமில்லை நூலின் தலைப்பை படித்தவுடன் நம் நினைவிற்கு இசைஅரசி எம் .எஸ் .சுப்புலட்சுமி பாடிய பாடல் நினைவிற்கு வந்தது. மிக நல் தலைப்பு .அட்டைப்பட வடிவமைப்பு மிக நன்று .மண் வாசனை இயக்குனர் இமயம் பாரதிராஜா ,கல்வித் துறை இணை இயக்குனர்,இனியவர் ,முனைவர் இராம .பாண்டுரங்கன் ஆகிய இருவரின் அழகிய வாழ்த்துரையும் ,தமிழ்த்தேனீ முனைவர் இரா.மோகன் அவர்களின் அற்புத அணிந்துரையும் நூலின் சாரத்தை பிழிந்து வழங்கி உள்ளார்கள் .
போதிமரம் என்ற முதல் நூல் தந்த நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் அவர்களின் இரண்டாவது படைப்பு குறையொன்றுமில்லை.இந்த நூலிலும் குறையொன்றுமில்லை எல்லாம் நிறைதான் .இவரது ஹைக்கூ கவிதைகளை பல்வேறு சிற்றிதழ்களில் படித்து ரசித்து உள்ளேன் .பிரசுரம் செய்த சிற்றிதழ்களுக்கு மறக்காமல் நன்றியை  பதிவு செய்துள்ளார் .நூலாக வாசித்தபோது கூடுதல்  மகிழ்ச்சி .

எந்த ஒரு கவிஞரும் அம்மாவை பாடாமல் இருப்பதில்லை .இவரும் அம்மாவை பாடி உள்ளார் .

துயரமே
துயரப்ப
ட்டது
சுமைதாங்கி அம்மா !
ஏழை ,பணக்காரன் ,கருப்பு ,வெள்ளை, தாழ்ந்தவன் , உயர்ந்தவன் , என்ற எந்தவித ஏற்றத் தாழ்வும் இன்றி மனிதநேயத்தோடு ஒற்றுமையாக வாழ வேண்டும் என்ற உயர்ந்த கருத்தை நம் கைகள் மூலம் விளக்குகின்றார் .

குட்டை நெட்டை
செயலில் ஒற்றுமை
விரல்கள் !
தீபாவளி பண்டிகை வரும் முன்பே ஏழைகளுக்கு கவலையும் வந்து விடும் .கந்து வட்டிக்காரர்களுக்கு மகிழ்ச்சி பொங்கி விடும் .கடன் வாங்கி குடும்ப உறுப்பினர்களின் ஆசையை நிறைவேற்ற வேண்டிய நிலைமை குடும்பத் தலைவருக்கு வந்து  விடும் .இந்த தீபாவளி பண்டிகை ஏன் ? தான் வருகிறதோ ? என்று நொந்து நூலாகி விடுகின்றனர் ஏழைகள் .

மனதில் இருட்டு
கையில் வெளிச்சம்
கடன் காசில்
தீபாவளி !

கணினி யுகத்திலும் சாதி மாறி ,மதம் மாறி காதலித்து திருமணம் புரிந்தால் வெட்டு, குத்து ,கலவரம், வன்முறை நினைத்து பார்த்தால் வேதனையே மிஞ்சும் .அயல் நாடுகளில் இது போன்ற செய்தியால் கேள்விப்பட்டால் சிரிப்பார்கள் .

விவசாயத்தில் வரவேற்பு
வீட்டில் எதிர்ப்பு
கலப்புத் திருமணம் !

தந்தை பெரியார் சொல்வார்
கலப்புத் திருமணம் என்று சொல்வதே தவறு என்று .மனிதனுக்கும் மிருகத்திற்கும் நடந்தால்தான் கலப்புத் திருமணம்.சாதி மறுப்புத் திருமணம் ! மத மறுப்புத் திருமணம் ! என்பதே சரி .

நூல் ஆசிரியர் கம்பம் புதியவன் இயற்கையை ரசித்தும் ஹைக்கூ வடித்துள்ளார் .காரணம் கம்பம் ஊர் இயற்கையின்  பொக்கிசம் .

ஆண்டுக்கொருமுறை
ஆடை  மாற்றும்
இலை உதிர் காலம் !


அரசியல்வாதிகள் தங்கள் கட்சி வென்று  ஆளும்  கட்சியாகி விட்டால்   கட்சிக்கரை வேட்டி தினமும் கட்டுவார்கள் தோற்று விட்டால் கட்சிக்கரை வேட்டி ட்டுவதை நிறுத்தி விடுவார்கள் .இதனை கவனித்து ஒரு ஹைக்கூ .

குப்பையில்
 
கரை வேட்டிகள்
ஆட்சி மாற்றம் ?

பாவாடை,  தாவணி நம் தமிழ்ப்   பண்பாட்டு உடை .மிக மிக அழகாக இருக்கும் .ஆனால் அந்த ஆடை அணியும் நல்ல  பழக்கம் வழக்கொழிந்து  வருகின்றது.இன்று நாகரீகம் என்ற பெயரில் அழகு படுத்துகிறோம் என்று அழகையும் ,ஆடையையும் குறைத்து கொள்கின்றனர் .இது பற்றி கருத்து சொன்னால் பெண் சுதந்திரம் என்று கொடி  பிடிக்கின்றனர் . .

நாகரீக் காற்றில்
காணாமல் போனது
பாவாடை தாவணி !
சில தலைவர்கள் தொன்றகளைத் தூண்டி விட்டு விட்டு தான் சுகமாக இருந்து கொள்வார்கள் .சிந்திக்காத தொண்டனோ வெட்டியும்
குத்தியும் வன்முறையில் ஈடு பட்டு தண்டனை பெறுவார்கள் .இன்றும் நாட்டில் நடக்கும் அரசியல் அவலத்தை உற்று நோக்கி எழுதிய ஹைக்கூ ஒன்று .
ரெல்லாம் கலவரம்
தலைவர்கள் பத்திரமாய்
முதல் வகுப்பில் சிறையில் !

ஆனால் இன்று சில
தலைவர்கள் சிறைக்கும் செல்வது இல்லை  குளு குளு அறையில் இருந்து அறிக்கை, கடிதம் மட்டும் அனுப்புவார்கள் .

ஒரு நடிகர் ஒரு நடிகையை காதலிப்பார் .அதே நடிகர் பின் மற்றொரு நடிகையை காதலிப்பார். நடிகர் முதலில் காதலித்த நடிகை மற்றொரு நடிகரை காதலிப்பார் .இது போன்ற செய்திகள் தான் பல ஊடகங்களுக்கு தலைப்பு செய்தியாக இருக்கும் .கொலை கொள்ளை வன்முறை செய்திகளுக்கு அதிக முக்கியத்துவம் தரும்  அவலத்தையும் உணர்த்தும் ஹைக்கூ .

மின்னலை விடவும்
வேகம்
பரபரப்புச் செய்தி !
சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகள் வடித்துள்ள நூல் ஆசிரியர் கம்பம் புதியவன்  அவர்களுக்கு பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .சமுதாயத்தில் விழிப்புணர்வை  ஏற்படுத்துங்கள் .

கருத்துகள்