ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல .. நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி . நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

ஆதாம் எலும்பில் ஏவாள் அல்ல ..

நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி .

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி  .

கந்தகப்பூக்கள்  பதிப்பகம் .குட்டியணஞ்சான் ,தெரு சிவகாசி .626123.

செல் 9843577110

விலை ரூபாய் 60.

நூலின் தலைப்பும் , அட்டைப்படமும் வித்தியாசமாக உள்ளது .நூல் விமர்சனம் எழுதுவதில் தனி முத்திரை பதித்து வரும் இனிய நண்பர் சேலம் கவிஞர் பொன் குமார் அவர்களின் அணிந்துரை நூலிற்கு அழகு சேர்ப்பதாக உள்ளது .இந்நூல், எங்க வீட்டுச் செல்லங்களுக்கு என்று பதிவு செய்து இருப்பது சிறப்பு .

நூல் ஆசிரியர் சிற்றிதழ் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி தொடர்ந்து இயங்கி வரும் படைப்பாளி .திருமணத்திற்கு மொய் செய்வதை நினைத்தாலே பலருக்கு வெறுப்பு வரும் .ஒரே நேரத்தில் ஒரே நாளில் பல திருமணங்கள் வந்து சிரமப்படுவதும் உண்டு .செலவு பெருகி வருகிறது .வரவு பெருக வில்லையே என்று வருந்துவதும் உண்டு .அவர்களது மன நிலையை படம் பிடித்துக்காட்டும் புதுக்கவிதை ஒன்று .

அழைப்பிதழ்களை வரவேற்பதில்லை ..
என்ன செய்வது
தேய்பிறைகளிலும் முகூர்த்தங்கள் !
முகூர்த்தங்கள் அதிகரித்த அளவிற்கு
வருமானங்கள் ?

காதலியைப்  பார்த்துக் கேட்கும் கேள்வி போல ஒரு நுட்பமான கவிதை .

காதல் விருட்சம் .
வெறும் சதை என்று
வியாக்கியானம் பேசித் திரியும் என்னுள்
எப்படி நீ விதையானாய் ?

அமெரிக்கா என்ன சொல்கிறது அதனை உடன் நிறைவேற்றும் அடிமைகளாக மத்தியில் ஆள்வோர் இருக்கும் அவலத்தை எள்ளல் சுவையுடன் சுட்டும் கவிதை நன்று .

நவீன இராமாயணம் !
இந்திய சீதை
அழுது  கொண்டே இருக்கிறாள் !
அமெரிக்க அசோக  வனத்தில் !

போலிகள் நிஜத்தை வெல்லும் அளவிற்கு தோற்றம் அளிக்கும் .சிலர் போலிகளைக் கண்டு ஏமாந்து விடுவதும் உண்டு .

அதனை உணர்த்தும் கவிதைகள்  .

பொய் மான் கூட்டம் !

புகைப்படச் சட்டத்துள்
சலசலத்து  வழியும்
நீர் வீழ்ச்சி !

குளிர்பதன பெட்டி மேல்
பறப்பது போல் நிற்கும்
வண்ணத்துப் பூச்சி !

தொலைக்காட்சிப் பெட்டி மேல்
வாசமற்றுச் சிறுக்கும்
பூ ஜாடி !

நாம் கண்ட சில போலிகளைக் காட்சிப் படுத்தி நூல் ஆசிரியர் வெற்றி பெறுகின்றார் .போலிகளைக் கண்டு ஏமாறாதீர்கள் என்று எச்சரிப்பது போல உள்ளது .

.உனக்கான கவிதை !
எனக்கான கவிதையாய்
நீ இருக்கையிலே
கவிதைக்கே கவிதையா ?
சிந்தை சிதறுகிறது !

புதுக்கவிதையில் காதலியை கவிதையாக்கி படிக்கும் வாசகர்களுக்கு அவரவர் காதலியை நினைவூட்டி  விடுகிறார் .

பெயரிடாதீர் !
ஆயிரம் முறை
உன்னை மறக்க நினைத்தாலும்
பாடாய்ப் படுத்தும்
உன் பெயரோடு கூடிய
சில கடைகளின் பதாகைகள் !

காதலியின் பெயரை கடையின் பாதகையில் பார்த்து உணர்ந்த உணர்வை கவிதையாக்கி நமது உணர்வையும் நினைத்துப் பார்க்க வைத்துள்ளார் .

அர்த்தனாரியின் இடபாகமும் !
ஆதாம் எழும்பும் !
கருப்பு அங்கியும் !
ஆதிக்கத்தின் சின்னங்கள் !

அதிகம் பற்றி நம்மை சிந்திக்க வைக்கிறார் .நூல் ஆசிரியர்
வித்தியாசமான இதுவரை யாரும் வழங்காத காதல் பரிசு தருகிறார் பாருங்கள் .

காதல் பரிசு !
உனக்கு அனுப்ப
ஒரு பரிசு தேடுகிறேன்
எந்தனது எண்ணத்தை
எதுவுமே நிறைவு செய்யவில்லை !
உனக்கு எப்போதும் பிடிக்கின்ற
மௌனத்தையே  இப்போதும் !

மனசு !
என் மனசு
மாடாய்ப் போனது !
எப்போதும் அவளை
அசை போட்டுக் கொண்டே ..

காதலி பற்றி , காதல் பற்றி பல சுவையான கவிதைகள் நூலில் நிறைய உள்ளது .பதச் சோறாக சில மட்டும் உங்கள் பார்வைக்கு .

ஏ ஞாபக மறதியே !

என் பிரியமான ஞாபக மறதியே !
ஏன் நீ அவள் விசயத்தில் மட்டும்
என்னோடு ஒத்துழைக்க மறுக்கிறாய் ?

காதல் பற்றி பல கவிதைகள் இருந்தாலும் ,சமுதாயம் பற்றியும் சில கவிதைகள் நூலில் உள்ளது .

அப்பன் சொல்லும் பாடம் கேளு !

தப்பைக் கண்டால் எதிர்த்து நில்லு !
பாதகம் செய்வோரை
பாதையில் கண்டால்
பாரதி மீசையாய் !

நூல் ஆசிரியர் கவிஞர் கந்தகப்பூக்கள் ஸ்ரீபதி அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் தொடர்ந்து எழுதுங்கள் .

கருத்துகள்