உயிர் திருடும் உனக்கு ! நூல் ஆசிரியர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் .. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

உயிர் திருடும் உனக்கு ! 
நூல் ஆசிரியர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் . செல் 9840806724.
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
வெளியீடு ;நக்கீரன் பதிப்பகம் ,105.ஜானிஜனா கான் சாலை ,இராயப்பேட்டை ,சென்னை .14.விலை ரூபாய் 80.

இவை கவிதைகள் அல்ல ,எழுத்து வடிவம் தரித்த இதயத்தின் ஈர ஆலாபனைகள் என்கிறார்  நூல் ஆசிரியர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன்.தபூ சங்கர் நூல்கள் போல கையடக்கப் பதிப்பாக வந்துள்ளது .நக்கீரன் பதிப்பகம் அழகிய வண்ணப் புகைப்படங்களுடன் தரமாக அச்சிட்டு உள்ளனர் ,பாராட்டுக்கள் .நூல் முழுவதும் திகட்ட திகட்ட காதல் கவிதைகள் .காதல் ! காதல் !காதல் தவிர வேறு இல்லை . கலிலியோ கண்டுபிடித்த அறிவியல் கண்டுபிடிப்பை காதலியோடு ஒப்பு நோக்கி மெய்யே என்று ஒப்புதல் வாக்கு மூலம்  பதிவு செய்துள்ளார் .

உலகம் உருண்டை
என்றான் 
கலிலியோ ..
உன்னிடமே ஆரம்பித்து 
உன்னிடமே முடியும் 
என் உலகம் 
உருண்டைதான் !

.கவிதை படிக்கும் போது படிக்கும் வாசகர்களுக்கு அவர்களது காதல் அனுபவங்களை அசைபோட்டுப் பார்க்கும் அனுபவத்தைத் தந்து கவிதை வெற்றி பெறுகின்றது .

உன் வீட்டில் 
இருப்பவர்களும் 
என்  வீட்டில் 
இருப்பவர்களும் 
கோயிலுக்குப் போனார்கள் .
அவர்கள் புண்ணியத்தில் 
திருவிழா வந்தது 
நமக்கு !

காதல் வந்தால் கவிதை வரும்  !கவிதை வந்தால் கற்பனை வரும் ! கற்பனை வந்தால் ரசனை வரும் ! ரசனை வந்ததன் பாதிப்பால் பிறந்த கவிதையைப் பாருங்கள் .

வம்பனாய் இருந்த என்னைக் 
கபனாய் ஆக்கியது 
உன் கண்கள் !

தாண்டும் கால்களுடன் 
வெளிதசனாய் இருந்த என்னை 
மகாகவி 
காளிதசனாய் ஆக்கியது 
உன் காதல் !

கிண்ணதாசனாய் மட்டும் 
கிறங்கிக் கிடந்த என்னை 
கவிதை ததும்பும் 
கண்ணதாசனாக  
நிறம் மாற்றியது 
உன் இதழுட்டிய மது !

எனக்குத் தான் 
எத்தனை அவதாரம் தருகிறாய் நீ !

காதலுக்கு கண் இல்லை என்பார்கள் .கண் இல்லதவர்களுக்கும் காதல் வரும் .காதலுக்கு கண்ணே முன்னுரை எழுதுகின்றது .காதலியின் கண் பார்வைப் பற்றிய கவிதை நன்று .

உன் பார்வைகள் பட்டால் 
சாத்தான்களும் 
தேவதைகளாகிவிடும் !
பின்னர் ..
அவையே ...
உன் அழகைக் கவரும் 
வெறியில் 
சாத்தான்களாகி விடும் !

காதலுக்கு மதம் முக்கியம் இல்லை .சம்மதமே முக்கியம் .மதங்களுக்கு அப்பாற்பட்டது காதல் .

என் மதமும் 
உன் மதமும் 
மன்மதம் என்பதை 
எப்போது 
புரிந்துகொள்ளப் போகிறாய் !

காதலிக்கு கவிதை எழுதுவது அன்று .காதலியையே கவிதை என்பது இன்று .நூல் ஆசிரியர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன்வித்தியாசமாக எழுதுகிறார் பாருங்கள் .

சிலருக்கு 
கவிதை பிடிக்கும் ,
ஒரு கவிதைக்கு 
என்னைப் பிடித்திருக்கிறது .
அடடே ...!
வெட்கத்தைப் பாரேன் !

காணும் கனவுகள் பற்றி ரசிக்கும்படி வேறு விதமாக எழுதி உள்ளார் .

நான் கண்களை மூடும் போதேல்லாம் 
யாரோ திறந்து வைக்கிறார்கள் 
எனக்கான 
உன் உலகத்தை !

தனக்குப் பிடித்தமானவள் அவள் .அவளே அவளை வாங்கித் தர இயலாது என்பதை சுற்றி வளைத்து எழுதி ரசிக்க வைத்துள்ளார் .

ஒரு அங்காடிக்குள் 
நுழைந்த நீ 
என்ன வேண்டும் 
எதையாவது உங்களுக்கு 
பிரியமாய்த் தர வேண்டும் 
என்கிறாய் ..
பலமணி நேரம் தேடியும் 
நான் கேட்கும் நீ 
அங்கு 
விற்பனைக்கு இல்லை .
என்ன செய்வது !

காதலியே தூரத்தில் இருந்து துயரம் தராதே ! நெருங்கி வா ! என்பதை ரசனையுடன் எழுதி உள்ளார் .

உனது நான் 
இங்கிருக்கும்போது ..
எனது நீ மட்டும் 
அங்கிருந்து 
தனியே 
என்ன செய்து விட முடியும் ?
நமது தூரங்களை உடைத்தேறியடி 
உடைத்து ..

பல காதல் தோல்வியில் முடிகின்றது .சில காதல் மட்டுமே வெற்றியில் முடிகின்றது .வெற்றியில் முடிந்தசில காதலும்  பின் தோல்வி  அடைகின்றது .எல்லா உண்மைக்  காதலும் வெற்றி அடைய வேண்டும் என்பதே என் விருப்பம் .நூல் ஆசிரியர் காதலும் தோல்வி அடைந்த சோகத்தில் பிறந்த கவிதை .

என் கடிதங்களை நீ 
கிழித்துக் கிழித்துப் 
போட்டாலும் 
உன்னால் 
கிழித்தெறிய  முடியுமோ 
உன் மீதான 
என் காதலையும் 
என் மீதான 
உன் காதலையும் !

காதலை பலர் பாடி உள்ளனர் .காதல் மட்டும் யார் பாடினாலும் படித்தால் இனிமையாகவும் புதிதாகவும் உள்ளது .நூல் ஆசிரியர் கவிஞர் ஆரூர் தமிழ்நாடன் அவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .

-- 
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி
www.eraeravi.com
www.kavimalar.com
www.eraeravi.blogspot.com
http://eluthu.com/user/index.php?user=eraeravi
http://www.noolulagam.com/product/?pid=6802#response*
இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !



கருத்துகள்