மின்னல் துளிப்பா ! நூல் ஆசிரியர் கவிஞர் மன்னை பாசந்தி ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

மின்னல் துளிப்பா !

நூல் ஆசிரியர்  கவிஞர் மன்னை பாசந்தி !

நூல் விமர்சனம்  கவிஞர்  இரா .இரவி !

யாழினி வெளியீடு 30/8 கன்னிக்கோவில்  முதல் தெரு ,அபிராமபுரம் ,சென்னை .600 018. விலை ரூபாய் 20.

திறனாய்வுச் செம்மல் எம் .எஸ் .தியாகராஜன் அவர்களின்   அணிந்துரை நூல்  ஆசிரியர்  கவிஞர் மன்னை பாசந்தி அவர்களின் தன்னுரை ,பதிப்பாளர் கவிஞர் கன்னிக்கோவில் இராஜா அவர்களின் பதிப்புரை ,நூல் முகப்பு அட்டை உள்  அச்சு வடிவமைப்பு யாவும் மிக நேர்த்தியாக உள்ளன .

.படிக்கின்ற வாசகரையும் படைப்பாளியாக்கும் ஆற்றல் ஹைக்கூ கவிதைகளுக்கு மட்டுமே உண்டு .இந்த நூலைப் படிக்கும் வாசகர் படித்து  முடித்ததும் ஹைக்கூ எழுதி விடுவார் என்று அறுதி இட்டுக்
கூறலாம்  .கருப்பு தின்னக்கூலி   வேண்டுமா ?  ஹைக்கூ படிக்க யோசனை வேண்டுமா ? படிக்கப்  படிக்க சிந்தனை மலர்விக்கும் ஹைக்கூ கவிதைகள் நூலில் உள்ளன .

மூன்றாவது வரியில் விடை இருக்கும் .வாசகர் நினைக்காத விடை இருக்கும் .நுட்பமான ஹைக்கூ இது .

கொட்டும் மழை
நனையவில்லை
கனவு !

திருநங்கைகள்  வாழ்க்கையில் சந்திக்கும் போராட்டம் மிக அதிகம் .அதனை உணர்த்திடும் ஹைக்கூ ஒன்று மிக நன்று .

ஆணுமில்லை பெண்ணுமில்லை
அங்கீகாரமுமில்லை
அரவாணி (   திருநங்கைகள்  )

சாலையில் பலர் கவனக் குறைவுடன் செல்பேசியில் பேசிக் கொண்டே நடந்து விபத்தை சந்திக்கும் நிகழ்வைக்  காட்சி படுத்தும் ஹைக்கூ .

அலைபேசியோடு நடந்தான்
விழுந்தான்
படுகுழியில் !

சாமியார் என்ற பெயரில் மோசடிகள் செய்யும் ஆசாமிகள் பெருகி விட்டார்கள் .மக்களும் விழிப்புணர்வு இன்றி  ஏமாறும் அவலுமும் தொடர்கின்றது .சாமியாராக இருக்கத் தகுதி அற்ற , முகத்திரை கிழிக்கப்பட்ட ஆசாமியெல்லாம் தொலைக்காட்சியில் தோன்றி அறிவுரை சொல்லும் அவலம் நம் நாட்டில் அரங்கேறி வருவது கொடுமை .

வேலியைத் தாண்டாமலே
பயிரை மேய்ந்திடும்
போலிச் சாமியார்  !

படைப்பாளிக்கு படைப்பு எண்ணம் எப்போது  வரும் என்று சொல்ல முடியாது .எப்போதும் வரலாம் .வரும்போது குறித்து வைத்துக் கொள்வார்கள் .தூக்கம்  வராமல் சிந்திக்கும் போதும் ஹைக்கூ வரும் .உணர்ந்து எழுதியுள்ள ஹைக்கூ .
     
தூக்கம்   இல்லை
துளிர்விட்டது
துளிப்பா !

சாப்பாட்டை சண்டையிட்டு வயிறு முட்ட சாப்பிட்டு வருகின்றனர் . இரவு தூக்கமிழந்து  தவிக்கின்றனர் . அதிகம் சாப்பிடுவது   உடல்நலனுக்கு கேடு என்பதை உணர்த்திடும் ஹைக்கூ நன்று .மிக எளிமையான சொற்கள் மூலம் எல்லோருக்கும் எளிதில் புரியும் விதமாக எழுதி இருப்பது சிறப்பு .

அளவான சாப்பாடு
நிறைவான தூக்கம்
ஆரோக்கியமான வாழ்வு !
.
மனிதநேயம் மறந்து மனிதர்கள்  விலங்காக  மாறி
சாதியின் பெயரால் , மதத்தின் பெயரால்  மோதி உயிரை இழக்கும் மடமையைச் சாடி வடித்த ஹைக்கூ நன்று .

உயிரே
உன் விலை என்ன ?
சாதிக் கலவரம் !

தடுக்கி விழுந்தால் மதுக்கடை.  மாணவர்கள்  குடிக்கும் அவலம் .மாணவர்கள் பிறந்த நாளை மாறி மாறி மதுக்கடையில் குடித்துக் கொண்டாடும் புதிய கொடிய பழக்கம் தொற்றிக் கொண்டது.இளைய சமுதாயம் சீரழிந்து வருகிறது .மனித நேய ஆர்வலர்களின் நெஞ்சம் பொறுக்கவில்லை .குடியின் கேடு உணர்த்தும் ஹைக்கூ ஒன்று .

குடும்பமே
குட்டிச்சுவர்
குடிப்பழக்கம் !

ஈழத்தில் நடந்த படுகொலைகளை நெஞ்சம் என்றும் மறக்காது .போர்க்  குற்றவாளிகள் தண்டிக்கப்படும் நாளே தமிழர்க்கு திருநாள் .ஈழத்துயரை நினைவூட்டும் ஹைக்கூ  .

பிறந்து வளர்ந்த இடம்
பிணக்காடனது
 ஈழப் படுகொலை !

பலர் படித்தவர்களாக இருக்கிறார்கள் ஆனால் பகுத்தறிவைப் பயன்படுத்துபவராக  இல்லை .மூட நம்பிக்கையில் மூழ்கித்  தவிக்கிறார்கள் .பகுத்தறிவு இன்றி படிப்பறிவு இருந்தும் பயன் இல்லை என்பதை உணர்த்தும் ஹைக்கூ .

படித்தறிவைவிட
பகுத்தறிவு
சமுதாய  முன்னேற்றம் !

இப்படி நூல் முழுவதும் சிந்திக்க வைக்கும் ஹைக்கூ கவிதைகள் உள்ளன .நூல் ஆசிரியர்  கவிஞர் மன்னை பாசந்திஅவர்களுக்கு பாராட்டுக்கள் .வாழ்த்துக்கள் .தொடர்ந்து எழுதுங்கள் .

கருத்துகள்