கவிதைச்சாரல் ! நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .

கவிதைச்சாரல் !
நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ 
முனைவர் இரா .மோகன் !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி .
வானதி பதிப்பகம் 23.தீனதயாளு தெரு .தியாகராயர் நகர், சென்னை .600017.விலை ரூபாய் 100.

மின்னஞ்சல்vanathipathippagam@gmail.com


நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன் அவர்கள் தமிழ் கூறு நல்லுலகம் போற்றும் வண்ணம் தொடர்ந்து தமிழன்னைக்கு அணி சேர்க்கும் வண்ணம் சளைக்காமல் ஓய்வின்றி நூல்களை எழுதி வருகிறார் .

அவர்க்கு வாய்த்த நல்  பதிப்பகம்  வானதி பதிப்பகம் .244 பக்க நூலை ரூபாய் 100 விலையிட்டு மலிவாகவும் , தரமாகவும் , மிக நேர்த்தியாகவும் பதிப்பித்து உள்ளனர் .பாராட்டுக்கள் .
விமர்சனத்திற்காக நூல் வெளியிடும் முன்பே எனக்கு நூலை வாடிக்கையாக வழங்கி வருகிறார்கள் .பெருமையாகக் கருதுகின்றேன் .

இனிய நண்பர் எழுத்து வேந்தர் இந்திரா சௌந்தர்ராஜன் அவர்களின் அணிந்துரை மிக வித்தியாசமாக உள்ளது .அணிந்துரை படித்தவுடன் அவரை அலைபேசியில் அழைத்துப் பாராட்டினேன் .பிறகுதான் நூல ஆசிரியரைப் பாராட்டினேன் .திரு .இந்திரா சௌந்தர்ராஜன்  ஆன்மிக வாதி என்பதால் நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ முனைவர் இரா .மோகன்அவர்களுக்கு பெரியாழ்வார் என்ற பட்டமே வழங்கி உள்ளார் .4 மணி நேரம் நூல் முழுவதும் படித்து விட்டு அழகுரையாக அணிந்துரை எழுதி உள்ளார் .இந்த நூலை கவிவேந்தர் பாரதிக்கு காணிக்கை ஆக்கி இருப்பது நல்ல பொருத்தம் .

 மகாகவி பாரதியார் ,புரட்சிக்கவிஞர்  பாரதிதாசன் ,பட்டுக்கோட்டை கல்யாண சுந்தரம் என்று புகழ் மிக்க கவிஞர்கள் மட்டுமன்றி புகழ் பெற வேண்டிய ,வாழும் கவிஞர்களான்  பிரதாப் ,ஜெயபாலன் ,விநாயக  முர்த்தி  ,கோவிந்தர் ராஜன் உள்ளிட்டோர்  படைப்புகளை யும் ாரபட்சமின்றி சமநிலையில்  ஆய்ந்து , அறிந்து கட்டுரை வடித்து உள்ளார்கள் . 

மொத்தம் 20 கவிஞர்களின் கவிதைகளின் ஆய்வுக் கட்டுரைகள் அற்புதம் .அருமை .கவிஞர்களுக்குப் பெருமை .
கவிதை அலைவரிசை ,கவிதைக்  களஞ்சியம் வரிசையில் தற்போது கவிதைச்சாரல் ! வந்துள்ளது .இலக்கியத்தில் கவிதைக்கு தனி இடம் என்றும் உண்டு .இந்த நூல் படித்தால்  இலக்கியத்தில் கவிதைக்கு  சிறப்பிடம் தருவீர்கள் என்பது உண்மை .மழைச்சாரல் பிடிக்கும் மனசுக்காரர்கள்  அனைவருக்கும் இந்த  கவிதைச்சாரல் நூல் பிடிக்கும் என்று அறுதி இட்டுக் கூறலாம்  . 

இதயத்தை இதமாக்கும் விதமாக உள்ளது நூல் .கவலை இருந்தால் இந்த நூல் படித்தால் காணமல் போகும் .நூல் வாங்கிப் படித்துப் பாருங்கள் .உண்மை என்பதை உணருவீர்கள் . மகாகவி பாரதியாரின் நல்லதோர் வீணை செய்தே கவிதையை வரி வரியாக ஆராய்ந்த விதம் அருமை .கவிதை எழுதிய போது  பாரதியாருக்கு தோன்றாத கருத்துக்கள் எல்லாம் நூல் ஆசிரியர் பேராசிரியர் தமிழ்த் தேனீ 
முனைவர் இரா .மோகன்அவர்களுக்குத் தோன்றி உள்ளன .மகாகவி பாரதியார் இருந்தால் இந்த நூல் படித்தால் மனம் மகிழ்வார்  பெருமை கொள்வார்  .

பதச்சோறாக சில மட்டும் உங்கள் ரசனைக்கு இதோ !

நித்தம் நவம்  எனச் சுடர் தரும் உயிர் !

' நவம்  '  ' சுடர் ' என்னும்  இரு சொற்கள் மீதும் பாரதிக்கு ஆழ்ந்த ஈடுபாடு உண்டு .சுவை புதிது , பொருள் புதிது  ,வளம் புதிது , சொற் புதிது ,சோதி மிக்க நவ கவிதை எந்நாளும் அழியாத மகா கவிதை 
( ப 276) எனத் தம் கவிதையைச் சுட்டுவார் அவர் .அது போல ' சுடர் மிகு அறிவைக் குறிப்பிடுவதும் மனங்கொளத்தக்கதாகும் 
.
மு .வ .வின் செல்லப்பிள்ளை மோகன் என்பது உண்மை . புரட்சிக்கவிஞர்  பாரதிதாசன் அவர்களைப் பற்றிய கட்டுரை தொடங்கும்போது புரட்சிக்கவிஞர்  பாரதிதாசன்  பற்றி இலக்கிய இமயம் மு .வரதராசனார் எழுதிய கருத்தோடு தொடங்கி  உள்ளார் .
ஒரே ஒரு நூலில் 20 கவிஞர்களின் படைப்பை ஆய்வு செய்து நூலாக வழங்கி உள்ளார் .20 நூல்கள் படித்த திருப்தி ஒரு நூலில் கிடைத்து  விடுகின்றது .

புரட்சிக்கவிஞர்  பாரதிதாசன் , மனிதனின்  ஆணவத்தை   அகற்றி வாழ்வியல் கற்பிக்கும் விதமாக எழுதி உள்ள கவிதை மேற்கோள் காட்டி இருப்பது சிறப்பு .  

எத்தனை பெரிய வானம் ;
எண்ணிப்பார் உனையும் நீயே ;
இத்தரை கொயாப்பிஞ்சு ;
நீ அதில் சிற்றெ றும் பே ; 
அத்தனை பேரும்  மெய்யாய் ;
அடிப்படித் தானே மானே   ?
பித்தேறி மேல் கீழ் என்று ;
மக்கள் தாம் பேசல் என்னே ?    ( ப 37 )

பக்க எண்களுடன் மிக நுட்பமாக எழுதுவதில் தமிழ்த் தேனீக்கு நிகர் தமிழ்த் தேனீ அவர்கள்தான் . நாமக்கல் கவிஞர் வெ .இராமலிங்கம் பிள்ளை கவியாற்றலை உண்ர்த்தும் கட்டுரை மிக நன்று  .

சொல்வது எல்லார்க்கும் சுலப மாகும் 
சொன்னபடி நடப்பவர்கள் மிகவும் கொஞ்சம் 
எல்லையின்றி நீதிகளை எழுதுவார்கள் 
எழுதியதை பிறருக்கே தமக்கென் றெண்ணார்  !

இந்தக்கவிதை படித்ததும் எனக்கு எழுதியபடி வாழாத  அரசியல்வாதிகள் நினைவிற்கு வந்தனர் .நாமக்கல் கவிஞர் அன்று பாடியது இன்றும் பொருந்துவதாக உள்ளது .

கவிதை எழுதுபவன் கவிஞன் அல்ல கவிதையாக வாழ்பவனே கவிஞன் .என்ற பாரதியின் வரிகளும்  நினைவிற்கு வந்தன .ஒன்று படிக்கும்போது அது தொடர்பான மற்றொன்று வாசகர்க்கு நினைவிற்கு வருவதே நூல் ஆசிரியர் வெற்றி எனலாம் .

கட்டுரைக்கு தலைப்பு எப்படி என்பதை   நமக்கு கற்பிக்கும் விதமாக தலைப்புகள் உள்ளன .

தமிழ் சூடி தந்த தகைசால் கவிஞர் வ .சு .ப மாணிக்கம் .
அவரது கவிதை ஒன்று !

தமிழ் சூடி வழிபாடு செய்வாய் குழந்தாய் !
தாய்மொழி தவறாது கற்பாய்  குழந்தாய் !
திருக்குறள் கண்போலத் தெளிவாய் குழந்தாய் !
தீமைகள் மனத்திலும் தீண்டாய்  குழந்தாய் !

இந்தக் கவிதைப் படித்தபோது அவர் எழுதிய கவிதை குழந்தைகளுக்கு மட்டுமல்ல பெரியவர்களுக்கும் அறிவுறுத்தும் விதமாகவே உள்ளது .  !

கவிஞர் வ .சு .ப மாணிக்கம் அவர்களின் கவிதைகளைப் படித்து இராத இளைய சமுதாயத்திற்கு அறிமுகப்படுத்தி  உள்ளார்கள் . பாராட்டுக்கள் .

மதுரையின் பெருமைகளில் ஒன்றாகத் திகழும் கவிஞர்  பிரதாப் அவர்களின் கவி ஆற்றலை புலப்படுத்தும் கட்டுரை மிக நன்று. கவிஞர்  பிரதாப் அவர்கள் ஆங்கில மொழி நன்கு அறிந்தவர் 'மாஸ்டர்  வழிக்காட்டி' என்ற ஆங்கில நூலின் ஆசிரியர் அவர் தமிழ் மொழியின் சிறப்பை உணர்ந்து எழுதிய கவிதை மிக நன்று .

அடடா தமிழா உன்மொழி தேன் 
அப்படி இருக்க ஆங்கிலம் ஏன் ?
விடடா பிறமொழி பேசுதல் வீண் 
விந்தைத் தமிழே உயர்ந்த தென்பேன் !   

ஆடுகளம் படத்தில் நடித்த நடிகர் ,ஈழத்துக் கவிஞர்  ஜெயபாலன் எழுதியுள்ள ஹைக்கூ ஒன்று போதும் உலகம் முழுவதும் பரந்து  வாழும் ஒட்டு மொத்த   ஈழத் தமிழர்களின் உணர்வுகளை பிரதிபலிக்கும் கவிதை .

எல்லைகள் நூறு  தாண்டினாலும் 
என்னைச் சூழ எரிகிறதே 
யாழ் நூலகம் !

பேச்சு , எழுத்து இரண்டு வெவ்வேறு துறையிலும் வெற்றிக் கொடி நாட்டி வரும் அவர்களுக்கு பாராட்டுக்கள் .நீங்கள் வாழும் மதுரையில் நாங்களும் வாழ்வது  எங்களுக்குப் பெருமை .  

கருத்துகள்