வைகை காற்று ! நூல் ஆசிரியர் கவிஞர் தமிழினியன் ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வைகை காற்று !

நூல் ஆசிரியர் கவிஞர் தமிழினியன் ! cholaitamileniyan1975@gmail.com

அலைபேசி 9840527782.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


சோலை பதிப்பகம் 6.பழனியாண்டவர்  கோவில் தெரு, பெரம்பூர்,சென்னை .600011 விலை ரூபாய் 30.

நூல் ஆசிரியர் கவிஞர் தமிழினியன் அவர்கள் இலக்கியச் சோலை மாத இதழ் ஆசிரியர் ,பல்வேறு தொகுப்பு நூல்களை திட்டமிட்டபடி குறிப்பிட்ட நாளில் வெளியிட்டு வருபவர் .தொகுப்பு நூலில் பங்குப் பெற்ற கவிஞர்கள் அனைவருக்கும் நூலும் , பாராட்டு சான்றிதழும் வழங்கி வருபவர் .நானும் பல நூலில் பங்கு பெற்றுள்ளேன். முதலில் இவர் கவிஞர் பிறகுதான் எழுத்தாளர் , பதிப்பாளர் , தொகுப்பு ஆசிரியர்,  நூல் வடிவமைப்பாளர் ,வெளியீட்டாளர்,தொலைக்காட்சி நிகழ்ச்சி தயாரிப்பாளர்  என்று பல முகங்கள் உண்டு .ஆற்றல் மிக்கவர். சென்னையில் இவரை  அறியாத இலக்கிய வட்டம் இல்லை என்று சொல்லும் அளவிற்கு  பிரபலமானவர் .அன்பானவர் .கவிப்பேரரசு என்ற பட்டதை வைரமுத்து அவர்களுக்கு வழங்குவதற்கு  பல வருடங்களுக்கு முன்பே பெற்றிட்ட அருமை நாதன் என்ற வேடந்தாங்கலில் வளர்ந்த கவிப்பறவை கவிஞர் தமிழினியன்.அருமையாரின் அருமையான வாழ்த்துரையும் நூலில் உள்ளது .என்னுய முதல் நூலை வெளியிட்டவரும் கவிப்பேரரசு அருமையார்தான் .

இந்த நூலில் மரபுக்கவிதை புதுக்கவிதை ,ஹைக்கூ  கவிதை என மூன்று கவிதைகளும்  உள்ளன .பல்சுவை கவி விருந்தாக நூல் உள்ளது .பாராட்டுக்கள் .இந்த நூலை காணிக்கை ஆக்கி விதத்தில்நூல் ஆசிரியர் கவிஞர் தமிழினியன்  வித்தியாசப் படுகிறார் .பெற்றோர் பாசத்தை வெளிப்படுத்தி உள்ளார் .

" இந்நூல் என்னைப் பெற்றெடுத்து வ்றுமையிலும் படிக்க வைத்து என் உயர்வுக்கு வழிகாட்டிய அப்பா அம்மாவிற்கு ...

முதல் கவிதையிலேயே முத்திரை பதித்து உள்ளார் .

அம்மா !

அன்புத்தாயே !
மனிதப்பிறப்பில்
மறுபிறவி உண்டா ?
இருந்தால்
அப்போதும்
என்னையே பெற்றிடு !  

தமிழ் மொழியியன் சிறப்பை மேன்மையை உணர்த்தும் விதமாக உள்ள கவிதை மிக நன்று .தமிழ் மொழி பற்றி வித்தியாசமாக சிந்தித்து எழுதி உள்ளார் .

வல்லினத்தில் வசந்தம் உண்டு !
மெல்லினத்தில் மென்மை  உண்டு !
இடையினத்தில் இனிமை உண்டு !
தமிழினத்தில்தான் தாயுள்ளம் உண்டு !

மகாகவி பாரதியார் பற்றி , புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் பற்றி ,தமிழ்த் தென்றல் திரு.வி .க .பற்றி, பாட்டுக் கோட்டை பட்டுக் கோட்டை கல்யாண சுந்தரம்  பற்றி அன்னை தெரசா பற்றி , இப்படி பல்வேறு ஆளுமைகள் பற்றி அருமையாக கவிதைகள் வடித்துள்ளார். அருமையார் சீடர் கவிஞர் தமிழினியன்.

சுருங்கச் சொல்லி விளங்க வைக்கும் , உருவத்தில் சிறிதாய் உணர்வில் பெரிதாய் உள்ள, இன்று பலரால் மிகவும் விரும்பப்படும் ஹைக்கூ கவிதைகள் நன்றாக உள்ளன .

எதற்கு சுயநலம்
நாமென்ன மனிதர்களா ?
காக்கைகள் !

காகம் உணவைக் கண்டதும் உறவுகளை அழைத்து உண்ணும். ஆனால் மனிதனோ தானாக உண்ணும்  சுயநலவாதியாகி விட்டான் என்பதை காகங்கள் சொல்வதுபோல சொல்லிய ஹைக்கூ நன்று .

வறுமைக்கு உரத்த குரல்
குளு குளு அறையில் தஞ்சம்
நடிகன் !

கோடிகளை ஊதியமாகப் பெறும், தொழிலாளர்களின் தோழன் , ஏழைப் பங்காளன் , கோடம்பாக்கத்து  வாய்ச் சொல் வீரன் நடிகன்  பற்றி   ஹைக்கூ நன்று .

மூட நம்பிக்கையில் ஒன்றாகி விட்ட தேர்தல் பற்றி,அரசியல்வாதிகளின் பித்தலாட்டம் பற்றி உணர்த்தும்  ஹைக்கூ  நன்று .  

கையில் மை
காதில் பூ
தேர்தல் !

காதலைப் பாடாத கவிஞர் இல்லை .காதலைப் பாடாதவர்  கவிஞரே இல்லை என்று சொல்லும் அளவிற்கு பெரும்பாலான கவிஞர்கள் காதலைப் பாடி உள்ளனர் .இவரும் காதலைப் பாடி  உள்ளார் .

நீ எனக்கு ..
பூமியில்
நடத்து வரும் நிலவே !
செவ்வாய் கிரகத்தின்  வரவே  !
செந்தமிழ் நாட்டின் உறவே !

காதலைப்  பரிந்துரை செய்து எழுதியுள்ள கவிதை நன்று .

காதலிக்கக் கற்றுக் கொள் !

காதலிக்கக் கற்றுக் கொள் !
பூக்களைப் போல விழிப்பாய் !
பூமியில் பறப்பாய் !
புத்தம் புதிதாய் சிரிப்பாய் !
புன்னகையில் பூரிப்பாய் !

காதலித்த அனைவரும்  உணரும்  அற்புத உணர்வை கவிதையில் வடித்து ,சொற்களால் சொக்க வைத்து படிக்கும் வாசகர்கள் அனைவருக்கும் அவரவர் காதல் நினைவுகளை மலர்வித்து உள்ளார். காதலுக்கு உரம் சேர்த்துள்ளார் .

மரம் வெட்டுவது குற்றம் என்று சொன்னாலும் பலரும் அது பற்றி பொருட்படுத்தாமல் மரங்களை வெட்டி வீழ்த்தி மழையை  பொய்க்க காரணமாகி வருகின்றனர்.மரத்தின் மாண்பை விளக்கும் மரநேயம்
மிக்க கவிதை நன்று .

உலகின் 8 வது அதிசயம் !

செழிப்பை வெட்டுகிறாய் !
ஆரோக்கியத்தை வெட்டுகிறாய் !
மரம் என்ன செய்தது  உன்னை !
என்ன கேட்டது உன்னிடம் !
ஓட்டுக் கேட்டதா ?
சீட்டுக் கேட்டதா ?
உடை கேட்டதா ?
காசு கேட்டதா ?
என்ன செய்தது  உன்னை !

தலைக்கவசம் அணிய வேண்டியது அவசியம் என்பதை நன்கு உணர்த்தி உள்ளார் .அனைவரும் அணிவது நலம் .நீண்ட தூரம் பயணிப்பவர்கள் தலைக்கவசம் அணிவது அவசர  அவசியம் .

உயிரின் குடை !
தலைக்கனம்
ஆளைக் கவிழ்க்கும் !
தலைக்கவசம்
ஆயுளைக் காக்கும் !

தமிழன் நிலையை  ,தமிழரின் நிலையை  கவிதையில் படம் பிடித்துக்காட்டி விழிப்புணர்வை விதைத்து உள்ளார் .புரட்சிக்கவிஞர் பாரதிதாசன் பாடலை நினைவூட்டும் விதமான கவிதை இதோ !

பள்ளியிலே தமிழில்லை !
பணியினிலே தமிழில்லை !
பாட்டினிலே தமிழில்லை !
பிள்ளைப் பேரினிலே  தமிழில்லை !
வீட்டினிலே  தமிழில்லை !
நாட்டினிலே தமிழில்லை !
திருமண அழைப்பினிலே தமிழில்லை !
தொலைக்காட்சியிலே தமிழில்லை !


நூலின்  இறுதியில் உள்ள அப்பாவிற்கான இரங்கல் கவிதை சிறப்பாக உள்ளது .மொத்தத்தில் கவிதை விருந்து .நோய் தீர்க்கும் மருந்து. அவர்களுக்கு பாராட்டுக்கள் . 

கருத்துகள்