நிலா வனம் ! நூல் ஆசிரியர் கவிஞர் நெல்லை ஜெயந்தா ! நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

நிலா வனம் !


நூல் ஆசிரியர்  கவிஞர்   நெல்லை ஜெயந்தா !

நூல் விமர்சனம்  கவிஞர் இரா .இரவி !

வாலி பதிப்பகம் ,,12/28,சௌந்தர்ராஜன்  தெரு ,தியாகராயர் நகர், சென்னை .17.

மின் அஞ்சல்  vaalipathippagam@gmail.com விலை ரூபாய் 50


இனிய  நண்பர்  நூல் ஆசிரியர்  கவிஞர்   நெல்லை ஜெயந்தா மதுரையில் சில வருடங்கள் வாழ்ந்தார் .அவருடன் கவியரங்கில் நானும் கவிதை பாடியதைப் பெருமையாகக் கருதுகின்றேன் .திரைப்படங்களுக்கு பாடல்களும் எழுதி வருகிறார். தற்போது சென்னையில் வாழ்கிறார் .அரசுப்பணியில் இருந்துகொண்டே இலக்கியத்திலும் முத்திரை பதித்து வருபவர் .நல்ல பண்பாளர் .நிலா வானம் அறிந்த ஒன்று ஆனால் நிலா வனம் யாரும் அறியாத ஒன்று .நூலின் பெயரே வித்தியாசமாக உள்ளது. பாராட்டுக்கள் .காவியக் கவிஞர் வாலி அவர்களின் அணிந்துரையில் குறிப்பிட்டபடி தனித்து நிற்கிறார்.  

ஜனநாயத்தின் தூணான பத்திரிக்கைகள் பற்றிய கவிதை மிக நன்று .
பத்திரிக்கைகள் !

துணைகளைப் போல 
கடைகளில் 
தொங்கிக் கொண்டிருக்கும் 
ஆனால்
இவைதான் 
அடித்துத் துவைத்து 
இஸ்திரி போட்டுவிடும் 
அழுக்குச் சமூகத்தை !

பத்திரிக்கைகளே  பலரின் ஊழல்களை அமபலப்படுத்தி உள்ளன. இன்று கட்சிக்கு ஒரு பத்திரிக்கை என்றாகி  விட்டது வேறு விசயம் . 

தேர்தல்மூட நம்பிக்கைகளில் ஒன்றாகிவிட்டது .ஆட்சியில் கட்சிகள் மாறினாலும் ஏழ்மைக் காட்சிகள் மாறுவதே இல்லை .

தேர்தல் !
நாவில்  
சொட்டு  மருந்து 
மழலைகளுக்கு ..
நகத்தில்
சொட்டு  மருந்து 
மக்களுக்கு ..
இரண்டும் போலியோ ...?
.
உடலால் உலகை விட்டு மறைந்திட்டபோதும்  பாடல்களால் மறியாமல் வாழும் மகாகவி பாரதியார் பற்றிய கவிதை  நன்று .சில வரிகள் மட்டும் பதச்சோறாக உங்கள் பார்வைக்கு இதோ .

பாரதி !
வாழவே இல்லை
என்கிறது 
பொருளாதாரம் !
சாகவே இல்லை 
என்கிறது 
சரித்திரம் !

இன்றைய அரசியல்வாதிகள் வாய்ச்சொல் வீரகளாக இருக்கின்றனர். தேர்தல் நேரத்தில் வழங்கிடும் வாக்குறுதிகளை ஆட்சிக்கு வந்ததும் மறந்து விடுகின்றனர் . அரசியல்வாதிகளின் இயல்பைப் படம் பிடித்துக் காட்டும் கவிதை நன்று .

வாக்குறுதி !

உண்டியிலும் 
சில 
அரசியல்வாதிகளும் 
ஒன்றுதான் 
வாயிருக்கும் 
நாணயமே 
இருக்காது !

உவமை ஒப்பீடு  மூலம் கவிதைகளில் சிந்திக்க வைக்கிறார் .
உலகில் உறவுகள் பல இருந்தாலும் அம்மாவிற்கு நிகரான  உறவு அகிலத்தில் இல்லை என்தது அனைவரும் அறிந்த ஒன்று .அம்மா பற்றிய கவிதை மிக நன்று .

தொப்புள் கொடி!
கர்ப்பத்தில் 
நான் பட்டினி 
கிடக்கக் கூடாது 
என்பதற்காக 
நீ உண்பாய் !
வறுமையில் 
நான்  உண்பதற்காக 
நீ பட்டினி 
கிடப்பாய் !

தொலைக்காட்சிகளில் செய்திகளில் சாமியார்களின் மோசடிகளைக் காட்டி விட்டு தொலைக்காட்சித் தொடர்களில் சாமியார்கள் சகல சக்தி வாயந்தவர்கள் என்று காட்டி பேய்  பிசாசு இருப்பதுப் போல மூட நம்பிகைகளை முட்டாள் தனங்களை விதைத்து வருகின்றனர் .
சாமியார் பற்றிய கவிதை நன்று .

நெற்றிக்கண் !
உச்சி முதல் 
பாதம் வரை 
எரிக்க வேண்டும் !
ஒழுக்கமற்ற சில 
சாமியார்களை !
சாம்பலை மட்டும் 
கடல் எதிலும் 
கரைத்துவிடக் கூடாது .
பிறகு -கடலில் குளிக்கும் 
பெண்களெல்லாம் 
கர்ப்பமாகி விட்டால் 
என்ன செய்வது !

இறுதி மூச்சு உள்ளவரை மனித குலத்திற்கு மானமும் அறிவும் வர வேண்டும் என்பதற்காக உழைத்திட்ட மாமனிதர் தந்தை பெரியார் பற்றிய கவிதை மிக நன்று .

பெரியார் !

முதலில் 
தாடி வைத்திருப்பதாய்தான் 
தகவல் சொன்னார்கள் 
பிறகுதான் 
தெரிந்தது 
அது 
பிடரி என்று .

மூட நம்பிக்கைவாதிகளின் சிம்ம சொப்பனம் பெரியார் என்பது முற்றிலும் உண்மை .  

தொல்லைக்காட்சியாகி விட்ட தொலைக்காட்சியின் இன்றைய அவலத்தை நன்கு உணர்த்தி உள்ளார் .தொலைக்காட்சித் தொடர் போதைக்கு ஆண் பெண் இரு பாலரும் அடிமையாகி விட்டனர். இவர்களை மீட்டு எடுக்க ஒரு இயக்கம் தொடங்க வேண்டும் .

தொலைக்காட்சி !

கணவனும் தொலைக்காட்சியும் 
ஒன்றுதான் 
ஆயுள் முழுக்க 
பெண்களை 
அழத்தான் வைக்கிறார்கள் !

ஒப்பற்ற சிலப்பதிகாரம் பற்றி இரண்டே வரிகளில் வடித்த கவிதை மிக நன்று ., 

பிறந்தது பூம்புகாரில் 
இறந்தது  பொய்ப்புகாரில் !
இப்படி சொல்  விளையாட்டுடன்    சிந்திக்க வைக்கும் கருத்துக்களுடன் உள்ள கவிதைகள் மிக நன்று .நூல் ஆசிரியர் இனிய நண்பர்   கவிஞர்  நெல்லை ஜெயந்தா அவர்களுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள் .

கருத்துகள்