பெண்பாக்கள் ! தொகுப்பு ஆசிரியர் அருணா சுந்தரராசன் ! அலைபேசி 7871548146. நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !


.
பெண்பாக்கள் !

தொகுப்பு ஆசிரியர் அருணா சுந்தரராசன் ! அலைபேசி  7871548146.

நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !

வளரி எழுதுக்கூடம் ,32 கீழரத வீதி ,மானாமதுரை .630606.
சிவகங்கைமாவட்டம்.

வெண்பா கேள்விப்பட்டு இருக்கிறோம் .பெண்பாக்கள் தலைப்பே வித்தியாசமாக உள்ளது .பெண்கள் பாடி உள்ள பாக்கள்  என்று பொருள் கொள்ளலாம் .எட்டு பெண் கவிஞர்களின் கவிதைகளை வளரி மாத இதழின் ஆசிரியர் திரு .அருணா சுந்தரராசன் தொகுத்து  நூலாக்கி உள்ளார்கள் .பாராட்டுக்கள் .அட்டைப்பட வடிவமைப்பு உள் அச்சு யாவும் நேர்த்தியாக உள்ளன .

முகநூலில் கலக்கி வரும் இனிய நண்பர் கவிஞர் பேனா .மனோகரன் அவர்களின் வாழ்த்துரையும் பின் அட்டையில் உள்ளது  மதுரையில் இந்த நூல் வெளியீட்டு விழா நடைபெற்றது .பேராசிரியர் முனைவர்
யாழ் .சந்திரா வெளியிட கவிஞர் இரா .இரவி நான் பெற்றுக் கொண்டேன் .
.
இலண்டன் சுடரொளி வெளியீட்டுக் கழகம் உலக அளவில் நடத்திய கவிதைப் போட்டியில்  என்னோடு சேர்ந்து பரிசுப் பெற்ற கவிஞர் பன்னீர்செல்வம் அவர்களின் அணிந்துரை முத்தாய்ப்பாக  உள்ளது .

இந்த நூலில் மலர்மகள் ,சௌந்தரி கணேசன் ,,புதுவை சுமதி செ.சண்முகசுந்தரமீனா ,மு .முருகஜோதி ,சுபஸ்ரீ மோகன் ,
எஸ் .ரெஜினா பானு  , சத்தியபிரியா என 8 பெண் கவிஞர்கள் கவிதைகள் எழுதி உள்ளனர் .எட்டு பேருக்கும் தனி நூல் எழுதும் அளவிற்கு ஆற்றல் இருந்தபோதும் ,எட்டு கவிதாயினிகளிடமும் கவிதை பெற்று தொகுத்து நூலாக்கிய தொகுப்பு ஆசிரியர் அருணா சுந்தரராசன் அவர்களுக்கு மீண்டும் ஒரு பாராட்டு.

உலக மகளிர் தினத்தை முன்னிட்டு மகளிர் கவிஞர்கள் வழங்கி உள்ள நூல் .தந்தை பெரியாருக்கு பெரியார் என்ற பட்டம் வழங்கியதே பெண்கள்தான்.எலிகளுக்கு விடுதலை பூனைகளால்   கிடைக்காது.பெண்களுக்கு  விடுதலை ஆண்களால் கிடைக்காது.பிள்ளைப்  பெறும் இயந்திரமா பெண்கள் என்று கேட்டவர்  தந்தை  பெரியார் .இந்த நூலை மிகப் பொருத்தமாக தந்தை பெரியாருக்கு காணிக்கை ஆக்கி உள்ளார்கள் .

இனிய தோழி கவிதாயினி மலர்மகள் அவர்கள் கனரா வங்கியில் பணியாற்றிக் கொண்டே கவிதைப் பணியும் செய்து வருபவர். என்னுடன் கவியரங்கில் கவிதை பாடியவர் .கவிதைக்காக பாராட்டும் , பரிசும் பெற்றவர் .தினமலர் வாரமலரில் கவிதை எழுதியவர் .அவரது கவிதைகளில் இருந்து பதச் சோறாக சிறு துளிகள் .

அற்புத விடியல் !

பெண்ணே !

உருகி வழிய - நீ
எரியும் மெழுகுவர்த்தி அல்ல !

எரித்து அழிக்க
காய்ந்த சருகும்   அல்ல !

உருக்கி வார்க்கப்பட்ட ஆயுதம் !

பெண்ணின் சக்தியை உணர்த்தும் விதமான வரிகள் மிக நன்று .

ஈழத்திலிருந்து புலம் பெயர்ந்து ஆஷ்திரேலியாவின்  சிட்னியில் வாழும் கவிதாயினி  சௌந்தரி கணேசன் அவர்களின் கவிதைகளில் இருந்து சிறு துளிகள் .

நட்பின் தேவை !

நட்பின் பரிமாணத்தை இரசி
பலத்தையும் பலவீனத்தையும் படி
பார்ப்பதெல்லாம் ஒன்றாகத் தோன்றும்
பாரம் கூடப் பஞ்சாக மாறும்
பாசம் மட்டும் மகிழ்வோடு தங்கும்
நட்புலகம் சங்கீதம் போன்றது  !

நட்பின் மேன்மையை மென்மையாக நன்கு உணர்த்தும் கவிதை நன்று .

புதுவை அரசு  கூட்டுறவுத் துறையில் பணிபுரியும் கவிதாயினி புதுவை சுமதி அவர்களின் கவிதைகளில் இருந்து சிறு துளிகள் .

நினைவுகள் !

சிறகுகள் சிறகடித்த
உன் நினைவுகள்
இன்று சிலுவைகளாய் மாறி கனக்கையில்
பாரம் தாங்காமல் வெடித்துச் சிதறும்
என் இதயக் குருதியின் ஓவ்வொரு துளியிலும்
உறைந்திருக்கும்  உன் முகம் !

நினைவுகளின் வலி உணர்த்தும் கவிதை நன்று .

அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளியில் தொழிற்கல்வி  ஆசிரியராகப் பணி புரியும் கவிதாயினி செ.சண்முகசுந்தரமீனா அவர்களின் கவிதைகளில் இருந்து சிறு துளிகள் !

வேண்டாம் இத்தனை பெரிய சின்னம் !

அரையடிக் கம்பை உடைப்பதற்கும் 
அடிமைச் சங்கிலி அறுப்பதற்கும்
அரை நிமிடம் ஆகுமா எனக்கு ?

யானை பேசுவதுபோன்று கவிதை வடித்து உள்ளார்கள் .நல்ல யுத்தி.இந்தக் கவிதையை ஒரு பெண் பேசுவது போலவும் புரிந்து கொள்ளலாம் . 

யோகா ஆசிரியராகக் பணி புரியும் கவிதாயினி மு .முருகஜோதி கவிதைகளில் இருந்து சிறு துளிகள் .

கற்றல் !

அரச இலை முதல் ஆகாய விமானம் வரை
அநேக வினாகளுடன்
என்னிடத்தில் வருகிறான்
எட்டு வயது மகன்
தெரியாது என்று நேர்மையான
பதிலைக்கூட  ஒரு வேளை அவன்
ஏற்றுக் கொள்ளக் கூடும்  !
குழப்பமான பதில்
அவனது மதிப்பிற்குரியோர் பட்டியலில் இருந்து
என்னை நீக்கி விடும் ஆபாயமுள்ளது  .

குழந்தைகள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் சொல்வதற்காவது  படித்து வைப்பது நல்லது என்கிறார் .

சீனா தலைநகர் பெய்ஜிங்கில் வசித்து வரும் கவிதாயினி சுபஸ்ரீ மோகன் கவிதைகளில் இருந்து சிறு துளிகள் .

நட்பா !  காதலா !

நட்பா ? காதலா ? என யோசித்த நான்
நட்புத் தேர்ந்தெடுக்க  !
நீ காதலைத்  தேர்ந்தெடுத்து
விலகிப் போனாய் நட்பை உதறிவிட்டு
என் மனம் மட்டும்
உன் பின்னே சென்று கொண்டிருக்கிறது
நீ இடரும் சந்தர்ப்பத்தில்
உன்னைத் தாங்கி பிடித்துக் கொள்ள
நட்புடன் எப்போதும் நான் .

நட்பை காதல் என்று தவறாகப்புரிந்து  கொள்பவர்களுக்கு புரியவைக்கும்  கவிதை நன்று .

அரசு  மருத்துவத்துறையில் செவிலியராகப் பணி புரிந்து வரும் கவிதாயினி எஸ் .ரெஜினா பானுகவிதைகளில் இருந்து சிறு துளிகள்.

ஆடு அடங்கும் வாழ்க்கையடா !

விலங்கு என்பதை
அறியாமலேயே
அலங்கரிக்கப்பட்டேன்
ஆடிய கால்கள்
அசைவற்றுக் கிடந்தன
பாடிய வாயோ
பலமற்று இருந்தது
வளர்த்தவர்களே
எனக்குப் பெயரிட்டனர்
பிரியாணி என்று
ஆடு அடங்கிய வாழ்க்கையடா !
ஆறடி மனிதரே விந்தையடா !

ஆடி  அடங்கும் வாழ்க்கையடா ! பாடல் கேள்விப்  பட்டு இருக்கும்  ஒரு எழுத்தை மாற்றி ஆடு பேசுவது போல வடித்த கவிதை நன்று

மதுரையில் கவிமாமணி வீரபாண்டியத் தென்னவன் தலைமையில் என்னோடு கவிதை பாடியவர் , முகநூலில் சத்யா என்ற பெயரில் நாள்தோறும் கலக்கி வருபவர் , குஜராத் கவிதாயினி தோழி யாத்விகா மூலம் அறிமுகமான தோழி . நூல் வெளியீட்டு விழாவிற்கு வந்து இருந்தார்கள் .கவிதாயினி சத்தியபிரியா கவிதைகளில் இருந்து சிறு துளிகள் .

புரிதல் !

என் காதலைச் சொல்ல
நான் கவிதையில்
மெனக்கெடும் போதெல்லாம்
கண்ணடித்துக் காட்டியே
ஆயிரம் கவிதைகளைப்
புரிய வைக்கிறாய் !

விழியில் உருவாகும் காதல் பற்றிய கவிதை நன்று .

எட்டு பெண் கவிஞர்களின் தொகுப்பு .கவிதை அணி வகுப்பு .மிக நன்று .அனைத்துக் கவிதைகளும் எல்லோருக்கும் புரியும் படி எளிதாக உள்ளது .புரியாத இருண்மைக் கவிதைகள் இல்லை .பெண் உடல் மொழி சொல்லும் கொச்சைகளும் இல்லை .தரமாக உள்ள நல்ல கவிதைகள் எட்டு கவிதாயினிகளுக்கும் பாராட்டுக்கள் . தொடர்ந்து எழுத வாழ்த்துக்கள் .

கருத்துகள்