திருக்குறளை தேசிய நூலாக்குக ! கவிஞர் இரா .இரவி !

திருக்குறளை தேசிய நூலாக்குக !       கவிஞர் இரா .இரவி !

பாடாத பொருளில்லை சொல்லாத விளக்கமில்லை !
பண்பைப் பயிற்றுவிக்கும் பகுத்தறிவைப் போதிக்கும் !

மனிதன் மனிதனாக வாழ்ந்திட கற்பிக்கும் நூல் ! 
மனிதனின் மகத்துவம் மனிதனுக்கு உணர்த்தும் நூல் !

வாழ்வின் அர்த்தம் விளக்கிடும் அற்புத நூல் !
வசந்தம் அடையும் ரகசியம் கூறும்  நூல் !

தாய் பசித்திருந்தாலும் தவறு செய்யாதே எனும் நூல் !
தரணிக்கு அறநெறி விளக்கிய அறிவு விளக்கு நூல் !.

தமிழென்ற சொல்லின்றி  பெருமை சேர்த்த  நூல் ! 
தீங்கிழைத்த தீயவருக்கும் நன்மைசெய் எனும் நூல் ! 

நன்றி மறக்காமல் நன்றியோடு வாழ்க  எனும் நூல் !
நெறி பிறழாமல் நேர்மையோடு வாழ்க  எனும் நூல் !

ஆள்வோரின் கடமையை அறிவுறுத்திடும் அற்புதநூல் !
ஆணவத்தை அகற்றி அன்பைப் புகட்டிடும் அழகியநூல் !

பயனற்ற சொல் என்றும் சொல்லாதே எனும் நூல் !
பயனுற வாழ்க்கை  வாழ்ந்திட வழி சொல்லும்  நூல் !

வானிலிருந்து வரும் மழை அமிர்தம்  எனும் நூல் !
வானம் பொய்த்தால் வாழ்க்கைப் பொய்க்கும் எனும் நூல் ! 

இனிய முகத்துடன் வரவேற்க வேண்டும் எனும் நூல் !
இனிய சொல்லிருக்க வன்சொல் வேண்டாம் எனும் நூல் !

கடவுளால் முடியாதது முயற்சியால் முடியும்  எனும் நூல் !
கற்ற கல்வியின் படி வாழ்வில் நடந்திடுக  எனும் நூல் !

முப்பால் வடித்து முத்திரைப் பதித்த நூல் !
முக்காலமும் பொருந்தும் முன்னேற்ற   நூல் !

மரத்தில் தேசிய மரம் ஆலமரம் உள்ளது !
மலரில் தேசிய மலர் தாமரை உள்ளது !

விலங்கில் தேசிய விலங்கு புலி உள்ளது !
பறவையில் தேசியப் பறவை மயில்  உள்ளது !

தேசிய  மரம் மலர் விலங்கு பறவை உள்ளன  !
தேசிய நூல் மட்டும் இல்லையே ஏன் ?

உலகப்பொது மறையை  தேசிய நூலாக்க !
உமக்கு தயக்கம் ஏன் ? காரணம் என்ன ?  

திருக்குறளுக்கு இணையான நூல் உலகினில் இல்லை !
தீர்க்கமாக அறிந்திட்ட உலகஅறிஞர்கள் சொன்ன உண்மை !

திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திடுக !
திருக்குறளை வாழ்வில் தினம் கடைபிடித்திடுக !

கருத்துகள்