சலனக் கிரீடம் ! நூல் ஆசிரியர் மு .கோபி சரபோஜி ! அணிந்துரை கவிஞர் இரா .இரவி !

சலனக் கிரீடம் !

நூல் ஆசிரியர் மு .கோபி சரபோஜி !  nml.saraboji@gmail.com

அணிந்துரை  கவிஞர் இரா .இரவி !

நூல் ஆசிரியர் மு .கோபி சரபோஜி அவர்கள் சிங்கப்பூரில் வாழ்ந்து வருபவர் .இவரை நேரில் சந்தித்தது இல்லை .இவரது படைப்புகளை தமிழ் ஆதர்ஸ் டாட் காம் இணையம் உள்ளிட்ட பல்வேறு இணையங்களில் , இதழ்களில் படித்து இருக்கிறேன் .அவரும் என் படைப்புகளை படித்து இருக்கிறார் .அலைபேசி வழி தொடர்பு கொண்டு அணிந்துரை வேண்டினார் .எழுதி உள்ளேன் . ஹைக்கூ கவிதை படைக்கும் ஆற்றல் இன்று உலக அளவில் பரவி விட்டது என்பதற்கு எடுத்துக்காட்டு இந்த நூல் .

சலனக்கிரீடம் என்ற நூலின் தலைப்பே வித்தியாசமாக உள்ளது. மலர்க்கிரீடம் , முள் கிரீடம் கேள்விப்பட்டு இருக்கிறோம் சலனக்கிரீடம் இப்போதுதான் கேள்விப்படுகிறோம் .புதிய சொல்லாட்சி  பாராட்டுக்கள் .மூன்றடிகளில் ஒரு ஆரவாரம் என்பது முற்றிலும் உண்மை .


கடலுக்குள் எல்லை பிரிப்பது , பார்ப்பது மிகக் கடினம் ஒரு காற்று வீசினால் எல்லை கடந்து விடும் .தமிழக மீனவர்கள் காற்றின் காரணமாக திக்கு மாறி , நம் தானம் தந்த கச்சத்தீவு  பக்கம் தவறி சென்று விட்டால் சிங்கள இன வெறி பிடித்த மனித மிருகங்கள் சுட்டு விடுவார்கள், வலையை அறுப்பார்கள் ,கைது செய்வார்கள். இதனைத் தட்டிக் கேட்க நாதி இல்லை .பறவைக்கு உள்ள சுதந்திரம் கூட .மனிதனுக்கு இல்லை என்பதை சுட்டிக் காட்டும் ஹைக்கூ நன்று .
எல்லை தாண்டல்கள் 
ஏற்கப்படுகின்றன 
பறவைகளின் பயணம் !

ஹைக்கூ கவிதை பல பொருள் தரும் நுட்பம் மிக்கது .எழுதும்போது படைப்பாளி ஒரு பொருளை நினைத்து எழுதி இருப்பார் .அந்த ஹைக்கூ படிக்கும்போது நமக்கு ஒரு  பொருள் தரலாம் .நான் இந்த ஹைக்கூ படிக்கும்போது ஆட்டம் போட்ட மனிதன் ஒரு நாள் அடங்கி விட்டதாகவே பொருள் கொண்டேன் .குறியீடாகவும் மறை பொருளாகவும் ஹைக்கூ இருப்பதுண்டு .

சங்கமமாவதற்குள் 
ஓராயிரம் சலசலப்பு 
நதிகளின் ஓட்டம் !

படிக்கும் வாசகர் மனதில் காட்சிப் படுத்துதல்  ஹைக்கூ நுட்பம் .இந்த ஹைக்கூ படிக்கும் வாசகர்களை  அவரவரேயே  காட்சிப் படுத்தி வெற்றி பெறுகின்றது .

கூடவே வருகிறது 
கருப்பு வெள்ளை நகல் 
நிழல் !

ரத யாத்திரை என்ற பெயரில் ரத்த யாத்திரை நடத்திய முந்தைய மத வெறி அவலத்தைச் சுட்டும் விதமான ஹைக்கூ நன்று .'

இரதங்கள் கிளம்பின 
வதங்கள் செய்ய 
அரசியல் யாத்திரை !

இன்றைக்கு பல சாமியார்கள் 'ஆசையே அழிவுக்கு காரணம் 'என்று அருளுரை ஆற்றி விட்டு அவர்கள் பேராசையோடு அலையும் நிலை காண்கிறோம் . சாமியாரை பார்க்க ஒரு கட்டணம் ,பேச ஒரு கட்டணம் , யோகா கற்க ஒரு கட்டணம்,மூச்சுப் பயிற்சிக்கு ஒரு கட்டணம் என்று வசூல் இராஜா போல வலம் வந்து கோடி கோடியாகக்  கொள்ளை அடித்து வரும் அவலம்.,சாமியார்களின் பேச்சுக்கும் , செயலுக்கும் உள்ள முரண்பாட்டை தோலுரிக்கும் விதமாக உள்ள ஹைக்கூ நன்று .

ஆயிரம் ஏக்கர் மடத்தில் 
பகட்டாய் தொடங்கியது 
பற்றற்று இரு வகுப்பு !

வருடா வருடம் தீபாவளி வருகின்றது .வருடா வருடம் பட்டாசு ஆலை தீ விபத்தும் வருகின்றது .உயிர் பலியும் நடக்கின்றது. அதனை உணர்த்தும் ஹைக்கூ ஒன்று மிக  நன்று .

நரகாசூரனை   அழிப்பதற்குள்
கிருஷ்ணர்கள் பலி 
பட்டாசு ஆலை விபத்து !

திருநங்கைகளை கேலியாகப் பார்க்காதீர்கள்.மனித நேயத்தோடு பாருங்கள் .அவர்களுக்கு வாய்ப்புகள் வழங்கினால் சாதனைகள் நிகழ்த்துவார்கள் என்பது உண்மை .நர்த்தகி நடராஜ் எனும்   திருநங்கை உலக அளவில் நடனம் ஆடி பிறந்த ஊரான மதுரைக்கு பெருமை சேர்த்து வருகிறார்கள் .சில திருநங்கைகள்  தனது ஆற்றல் அறியாமல் தெருவில் வலம் வருகின்றனர் .

ஆலயக் கடவுள் 
அற்பமாய் தெருவில் 
திருநங்கை !

முதியவர்கள் ,பெண்கள் ,குழந்தைகள் ,ஆலயம் ,தேவாலயம் , மருத்துவமனை  என்றும்  பாராமல் ஈவு இரக்கமின்றி, மனிதாபிமானமின்றி சொந்த நாட்டு மக்கள் மீதே குண்டு மழை பொழிந்த கொடூரம் இலங்கையைத் தவிர உலகில் வேறு எந்த நாட்டிலும் நடந்தது இல்லை .

பதுங்கு குழியிலேயே  சமாதி கட்டிய  தமிழ் இனப் படுகொலை உணர்த்தும் ஹைக்கூ .

குழிகளுக்குள் 
குவிந்து கிடக்கிறது 
ஈழம் !

ஹைக்கூ என்பது வானில் பார்க்கும் நட்சத்திரம் போன்றது .தூரத்தில் இருந்து பார்க்க சிறிதாக இருக்கும் .அருகே நெருங்க நெருங்க பெரிதாகும் .அதுபோலவே ஹைக்கூ படிக்கும்போது சிறிதாக இருக்கும் .வாசிக்க வாசிக்க அதன் பொருள் , ஆழம் நன்கு புலப்படும்.

ஹைக்கூ எழுதிய படைப்பாளியின் உணர்வை படிக்கும் வாசகருக்கும் உணர்த்துவது ஹைக்கூ .அந்த வகையில்  நூல் ஆசிரியர் மு .கோபி சரபோஜி அவர்கள் தான் உணர்ந்த உணர்வை நமக்கும் உணர்த்தி வெற்றி பெற்றுள்ளார் .பாராட்டுக்கள் .முதல் நூலே முத்தாய்ப்பாக வந்துள்ளது .தொடர்ந்து பல நூல்கள் படைத்திட  வாழ்த்துக்கள் .


 

.

கருத்துகள்