காதல் மாயா நூலாசிரியர் : கவிஞர் ஆத்மலிங்கன் நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி


காதல் மாயா
நூலாசிரியர் :  கவிஞர் ஆத்மலிங்கன்
நூல் விமர்சனம் : கவிஞர் இராஇரவி
மின்னல் கலைக்கூடம், 117, எல்டாம்ஸ் சாலை, சென்னை-18.
அலைபேசி 98414 36213 விலை : ரூ. 75.
*****
நூலாசிரியர் கவிஞர் ஆத்மலிங்கன் தன்னுரையில் குறிப்பிட்டுள்ளது மிக நன்று.  “இவ்வுலகில் நாம் உயிர் வாழ காற்று எவ்வளவு அவசியமோ அவ்வளவு அவசியம் காதல்.  காதல் ஓர் கானல் நீர்.  நம் கண்களுக்குப் புலப்படுபவை.  ஆனால் அவை தாகம் தீர்க்காது.  கானல் நீரையும் பருக முடியும் ;  கையாளும் யுக்தி தெரிந்தால்”.
காதலுக்கான விளக்கம் சொல்லி நூலைத் தொடங்கி நூலில் அட்டை முதல் அட்டை வரை காதல் ரசம் சொட்டச் சொட்ட காதல் கவிதை வடித்துள்ளார்.  பாராட்டுக்கள்.  நூலிற்கு திரைப்பட நடிகர் எழுத்தாளர் ஜோ மல்லூரி அணிந்துரை வழங்கி உள்ளார்.  மிக நன்று.  காதல் கவிதைகள் என்றால் முத்தம் பற்றி இல்லாமல் இருக்குமா?  இருக்கிறது.  முத்தத்தின் வகை பற்றி வித்தியாசமாக எழுதி உள்ளார்.
முத்த(ம்) நிலை மொத்தம் மூன்று நிலை
       முத்த நிலை மூன்றாம் நிலை
       முத்தம் நெஞ்சில் கொடுக்கும் போது – அவள்
       காதலில் உயர்ந்தாள்
       முத்த நிலை இரண்டாம் நிலை
       முத்தம் இதழில் கொடுக்கும் போது – அவள்
       காமத்தில் உயர்ந்தாள்
       முத்த நிலை முதல் நிலை
       முத்தம் நெற்றியில் கொடுத்தாள்
       அவள் அன்பில் உயர்ந்தாள்
மின்னல் கலைக்கூடம் மிக நேர்த்தியாக அச்சிட்டுள்ளனர்.  அட்டைப்பட வடிவமைப்பு, உள் அச்சு புகைப்படங்கள் இணையத்தில் உள்ள செவியங்கள் என்று நூலை படிக்க ஆர்வமூட்டும் விதமாக அச்சிட்டுள்ள கவிஞர் வசீகரன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.  இயற்கை ரசிக்கும் பழக்கம் நூலாசிரியர் கவிஞர் ஆத்மலிங்கன் அவர்களுக்கு உள்ளது.
பட்டாம்பூச்சியெல்லாம் பறக்கிறது
       பருத்தி மலர்கிறது... உன் கன்னம் சிவக்கிறது
       என் நெஞ்சு துடிக்கிறது உன்னையே நினைக்கிறது
       இராப்பகலாய் விழித்திருந்தேன் உன் நினைவில்
       மயிலிறகாய் வருடுகிறது உன் தாவணி.
இன்று தாவணி வழக்கொழிந்து வருகின்றது.  நாம் துப்பட்டா என்று பொருள் எடுத்துக் கொள்ளலாம். இன்னும் சிலரிடம் துப்பட்டாவும் வழக்கொழிந்து வருகின்றது.
கவிஞருக்கு காதல் பார்வையோடு  இலக்கியப் பார்வையும் உள்ளது என்பது எடுத்துக்காட்டு.
அவள் இத(ழ்)ழென்ன வள்ளுவன் குறளா
       அவள் செவ்வாய் இதழ்களுக்கும் இரண்டடி
       வள்ளுவன் குறளும் இரண்டடி
       அங்கே அமுதம் இங்கே அமிர்தம்
காதலர்களின் பொழுதுபோக்கு இமைக்காமல் பார்ப்பது.  கண்களால் பசியாறுவது.  அதனை உணர்த்தும் கவிதை நன்று. 
கண்விழிகள் சிமிட்டாத உன் ஏகாந்த பார்வை
       வாய்பேசாத மௌன மொழி...
       கொடிமரத்தில் தொங்கும் மா... பலா...
       உன்னழகு மயில் தோகை பசு கூந்தல் ஜடை பின்னழகு
தங்கம் விற்கும் விலைக்கு நடுத்தர மற்றும் ஏழைக்குடும்பங்கள் தங்க நகை வாங்கித்தர முடியாத நிலை நீடிக்கின்றது.  அதனை வித்தியாசமாக வடித்துள்ள கவிதை நன்று.
உன் புன்னகையை விடவா பொன்நகை மேலானது
       இல்லை... எங்கே? இன்னும் ஒரு முறை புன்னகை.
காதலியை வர்ணிக்க காதலனுக்கு சலிப்பதே இல்லை.  திகட்டத் திகட்ட எழுதி விடுவார்கள்.
கம்பன் கள்ளிக்காட்டில் ஆட்டுப்பாலும்
       மாட்டுப்பாலும் பருகிய உன் செவ்வாய் இதழ்தனில்
       ஆதிமொழி செந்தமிழ்தேன் பருகவா
       முக்கனி மொழியே.
காதலில் வென்றால் கொஞ்சம் கவிதை வரும்.  காதலில் தோற்றால் அதிகம் கவிதை வரும்.  வந்து கொண்டே இருக்கும்.
விரும்பிச் சென்றேன் விலகிச் சென்றாள்
       நெருங்கிச் சென்றேன் தொலைவில் சென்றாள்
       நிலவாக... அவள் நிழலாக நான்.
நவீன உலகத்தில் கொலுசு அணியும் பழக்கமும் வழக்கொழிந்து வருகின்றது.  நூலாசிரியர் காதலி கொலுசு அணியும் பழக்கம் உள்ளவர் போலும், அவர் வடித்த கவிதை மிக நன்று.
ஆலயமணி ஓசைக் கேட்டால்
       கோபுரவாசல் திறந்திருக்கும்
       உன்பாதம் கொலுசு ஒலிக்கேட்க
       என் இருதய வாசல் திறந்தே இருக்கும்.
நூலாசிரியர் ஆத்மலிங்கன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.  அடுத்த நூலில் காதல் கவிதையை ஊறுகாய் போல கொஞ்சமாக எழுதி விட்டு சமுதாய விழிப்புணர்வுக் கவிதைகளை சோறு போல நிறைய எழுதுங்கள்.
*****


கருத்துகள்