தமிழ் விருந்து . கவிஞர் இரா .இரவி !

தமிழ் விருந்து . கவிஞர் இரா .இரவி !



உலக மொழிகளின் மூலம் தமிழ்மொழி                                                                     கவிஞர் இரா.இரவி
  
இலக்கண இலக்கியங்களின் குவியல் தமிழ்மொழி 
இனிய உச்சரிப்பின் இனிமை தமிழ்மொழி 
உலகப் பொதுமறையை உலகிற்கு தந்திட்ட தமிழ்மொழி 
உலகமொழிகளின் மூலம் ஒப்பற்ற தமிழ்மொழி 
காவியங்களும் காப்பியங்களும் நிறைந்த தமிழ்மொழி 
கனிச்சாறையும் கற்கண்டையும் மிஞ்சிய தமிழ்மொழி 
எண்ணிலடங்கா சொற்கள் கொண்ட தமிழ்மொழி 
எண்ணத்தை உயர்வாக்கும் உயர்ந்த தமிழ்மொழி 
பழமைக்கு பழமையான தொன்மைமிகு தமிழ்மொழி 
புதுமைக்கு புதமையான புத்துணர்வுமிகு தமிழ்மொழி 
இணையத்தில் கொடிகட்டிப் பறக்கும் தமிழ்மொழி 
இணையில்லாப் புகழ்மிக்கக உயர்தனித் தமிழ்மொழி 
முதல் மனிதன் பேசிய முதல்மொழி தமிழ்மொழி 
மூத்தோரை மதிக்கும் மரியாதை மிக்க தமிழ்மொழி 
உலகிற்கு பண்பாட்டை பறைசாற்றும் தமிழ்மொழி 
உலக இலக்கியங்களில் முதன்மையானது தமிழ்மொழி 
மனிதநேயத்தை முன்மொழியும் மொழி தமிழ்மொழி 
மனிதனை மனிதனாக மதிக்கும் நல் தமிழ்மொழி 
பல்லாயிரம் ஆண்டுகளாக நிலைத்திருக்கும் தமிழ்மொழி 
பல நூறு மொழிகளில் சிறந்திருக்கும் தமிழ்மொழி 
புலவர்கள் பலரை உருவாக்கிய தமிழ்மொழி 
அறிஞர்கள் பலரை செதுக்கிய தமிழ்மொழி 
விஞ்ஞானிகள் பலரை வளர்த்த தமிழ்மொழி 
மெஞ்ஞானிகள் பலரை வழங்கிய தமிழ்மொழி 
இயல்,இசை,நாடகம் சிறந்து விளங்கிடும் தமிழ்மொழி 
எத்திக்கும் முத்தமிழிலும் முத்திரை பதித்திடும் தமிழ்மொழி 
அகமும் புறமும் அழகாக விளங்கும் தமிழ்மொழி 
அற்புத உறவுகளுக்கு தனித்தனி சொல்லழகு தமிழ்மொழி 
முல்லை,மருதம்,குறிஞ்சி,நெய்தல்,பாலை பாடிய தமிழ்மொழி 
மூச்சாக உலகத் தமிழருக்கு விளங்கிடும் தமிழ்மொழி 
மனதை இளமையாக்கும் இனிய தமிழ்மொழி 
மமதையை அழித்து ஒழித்திடும் தமிழ்மொழி 
தாலாட்டு தொடங்கி ஒப்பாரி வரை இனிய தமிழ்மொழி 
தமிழனின் பிறப்பு முதல் இறப்பு வரை தொடரும் தமிழ்மொழி 
ஒரு எழுத்தில் பொருள் கூறும் தமிழ்மொழி 
ஒரு எழுந்து மாறினால் பொருள் மாறும் தமிழ்மொழி 
காந்தியடிகள் மனதார புகழ்ந்திட்ட தமிழ்மொழி 
தமிழனாக பிறந்திட ஆசைப்பட வைத்த தமிழ்மொழி 
கவிஞர்கள் கட்டித் காத்த கரும்பு தமிழ்மொழி 
கவிதைகள் கட்டித்தங்கம் போன்ற தமிழ்மொழி 
உலகம் உள்ளவரை என்றும் நிலைக்கும் தமிழ்மொழி 
உலகில் ஈடு இணையற்ற உன்னதமொழி தமிழ்மொழி

தனித்தியங்கும்    தமிழ்மொழிக்குத்   தகுந்ததென்றும் தமிழ் எழுத்தே ! கவிஞர் இரா .இரவி !
வடமொழி எழுத்துக்கள் என்றும் வேண்டாம் !
வளமான உலகின் முதல் மொழி தமிழுக்கு !
நடக்க முடியாதவருக்கு  ஊன்றுகோல் தேவை !
ஓட முடிந்தவருக்கு ஊன்றுகோல் தேவையன்று !
.தனித்தியங்கும்    தமிழ்மொழிக்குத் தமிழ் எழுத்து போதும் !
தன்னிகரில்லா மொழிக்கு பிறமொழி எழுத்து  வேண்டாம் !
பொருளில் கலப்படம் உடலுக்குக் கேடு தரும் !
தமிழில் கலப்படம் தமிழுக்குக் கேடு தரும் !
ரோஜா என்று எழுதவதை நிறுத்துங்கள் !
ரோசா என்று எழுதிப் பழகுங்கள் !
இராஜா  என்று எழுதவதை நிறுத்துங்கள் !
இராசா  என்று எழுதிப் பழகுங்கள் !
ரமேஷ்  என்று எழுதவதை நிறுத்துங்கள் !
ரமேசு என்று எழுதிப் பழகுங்கள் !
எழுத்துக்குப் பற்றாக்குறை தமிழில் இல்லை !
ஏன் கையை ஏந்த வேண்டும் வடமொழியில் !
இல்லாதவன்தான்  பிட்சை எடுத்து வாழ்வான் !
இருப்பவன் ஏன் பிச்சை எடுக்க வேண்டும் !
வளமான எழுத்துக்களின் களஞ்சியம் தமிழ் !
வடமொழி எழுத்துக்களை கலப்பவரை இகழ் !
திட்டமிட்டு எழுத்துக் கலப்பை செய்கின்றனர் !
தடுத்திட திட்டம் வகுத்துத் தடுத்திடுவோம் !
அனைத்து மொழிகளின் தாய் நம் தமிழ்மொழி !
அனைவரும் தமிழ்மொழி காக்க அணி வகுப்போம் !
தமிழ் எங்கள் உயிருக்கு மேல் ! கவிஞர் இரா .இரவி !
தமிழுக்காக உயிர் நீத்த வரலாறு உண்டு 
தமிழை உயிருக்கு மேலாக மதிப்பது நன்று 
மற்றவர்களுக்கு உயிர்தான் மேல் 
மறத் தமிழனுக்கோ தமிழ்தான் மேல் 
தமிழருக்கு ஒரு தீங்கு என்றால் உடன் 
தரணியில் முதல்க்குரல் தமிழன் குரலாக இருக்கட்டும் 
தமிழைப் பழிப்பவர்களை நாங்கள் 
தாயே தடுத்தாலும் விடமாட்டோம் 
உலகின் முதல்மொழி நம் தமிழ் மொழி 
உலகின் முதல் மனிதன் பேசியது தமிழ்மொழி 
அனைத்து மொழிகளின் தாய் தமிழ்மொழி 
ஆராய்ச்சி அறிஞர்களின் முடிவான முடிவு 
இலக்கண இலக்கியங்களின் களஞ்சியம் தமிழ்மொழி 
எண்ணிலடங்கா சொற்களின் சுரங்கம் தமிழ்மொழி 
உலகப் பொதுமறையை வழங்கியது தமிழ்மொழி 
அவ்வையின் ஆத்திச்சூடியை அருளியது தமிழ்மொழி 
பாரதியின் புதிய ஆத்திசூடியை தந்தது தமிழ்மொழி 
பாவேந்தரின் குடும்பவிளக்கை ஏற்றிறயது தமிழ்மொழி 
பாவலர்களை தரணிக்குத் தந்து மகிழ்ந்தது தமிழ்மொழி 
பாடல்களால் நிறைந்து விளங்கும் தமிழ்மொழி 
தேவ மொழிக்கும் மூத்தது எம் தமிழ்மொழி 
தேவநேயப் பாவாணர் கூற்று முற்றிலும் உண்மை 
தமிழின் மகுடமான திருக்குறளுக்கு 
தேசியநூல் என்ற மகுடத்தை சூட்டியே தீருவோம்
தமிழா நீ பேசுவது தமிழா !   கவிஞர் இரா .இரவி 
தமிழா நீ பேசுவது தமிழா !
தமிழா இப்படிப்  பேசுவது தகுமா ?
காலைப் பொழுதை மார்னிங் என்றாய் 
மதியப் பொழுதை ஆப்ட்ரநூன்  என்றாய்
மாலைப் பொழுதை ஈவ்னிங் என்றாய்
நல்ல பொழுதை ஆங்கிலத்தால் கொன்றாய் 
பாட்டை சாங் என்றாய்
வீட்டை ஹவுஸ் என்றாய்
படுக்கை அறையை பெட்ரூம்   என்றாய்
கழிவறையை டாய்லெட் என்றாய்
தமிழை டமில்  என்றாய்
தண்ணீரை வாட்டர் என்றாய்
சோற்றை ரைஸ் என்றாய்
உப்பை சால்ட் என்றாய்
கடற்கரையை பீச் என்றாய்
காதலியை   லவ்வர் என்றாய்
கண்களை அய்ஸ்     என்றாய்
கடிதத்தை லெட்டர்  என்றாய்
பள்ளியை ஸ்கூல் என்றாய்
கல்லூரியை காலேஜ்  என்றாய்
மாணவனை ஸ்டுடென்ட் என்றாய்
ஆசிரியரை  டீச்சர் என்றாய்
வானொலியை ரேடியோ என்றாய்
விமானத்தை பிளைன் என்றாய்
தொலைக்காட்சியை டிவி என்றாய்
தொலைபேசியை போன்  என்றாய்
பணத்தை மணி என்றாய் 
குணத்தை கேரக்டர் என்றாய்
வஞ்சியை கேர்ள் என்றாய்
விபத்தை ஆக்ஸிடென்ட்  என்றாய்
இப்படிப் பேசியே தமிழைக் கொல்கிறாய்
எப்போது வரும் உனக்கு தமிழ் உணர்வு !
தமிழா உன்னிடம் ஒரு கேள்வி சிந்தித்துப் பார் 
ஆங்கிலேயன் தமிழ் கலந்து ஆங்கிலம் பேசுவானா ? 
ஈழத் தமிழர்களின் உச்சரிப்பைப் பார் 
சோகத்திலும் சுந்தரத் தமிழ் பேசுகின்றனர் 
தமிழைச் சிதைப்பது தமிழனுக்கு அழகா ?
தமிழா !சிந்தித்து தமிழிலேயே பேசு ! 
தமிழா ! பேசுவது தமிழா சொல் !கவிஞர் இரா .இரவி
.
தமிழா தமிழா சொல் தினமும் நீ
தரணியில்  பேசுவது தமிழா சொல்
உலகின் முதல் மொழி தமிழ் உணர்
உலக மொழிகளின் தாய் தமிழ்
ஊடகத்தில் நாளும் நடக்குது தமிழ்க்கொலை
உலகமே பார்த்துச் சிரிக்குது தமிழின் நிலை
நாளிதழ் வானொலி தொலைக்காட்சி அனைத்திலும்
நாளும் சிதைக்கின்றனர் நல்ல தமிழை
அழகு தமிழில் அம்மா இருக்கையில்
ஆங்கிலத்தில் மம்மி என்றழைக்கும் மடமை
அற்புதத் தமிழில் அப்பா இருக்கையில்
ஆங்கிலத்தில் டாடி என்றழைக்கும் கொடுமை
தமிழோடு பிற மொழி கலந்துப் பேசுவது பிழை
தமிழை தமிழாகப் பேசிட நீ பழகு
ஆங்கிலத்தில் பேசும்போது தமிழ் கலந்து
ஆங்கிலேயன் என்றும் பேசுவதில்லை
தமிழன்தான் தமிழ் பேசும்போது
தமிங்கிலம் பேசி உளறுகின்றான்
இரு கரம் குவித்து வணக்கம் சொல்
ஒரு கரம் தூக்கி குட்மோர்னிங் நிறுத்து !
சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! 
கவிஞர் இரா .இரவி 
சாகாமல் காக்கும் மருந்து 
அமுதம் என்றார்கள் ! 
அமுதம் நாங்கள் பார்தது இல்லை ! 
அமுதம் நாங்கள் பருகியது இல்லை ! 
அமுதம் தேவர்களுக்கு கடவுள்வழங்கியதாக 
அன்று புராணக்கதை கதைத்தது ! 
இன்பமாக வாழ வேண்டுமா ? 
இனிய தமிழ் படியு்ங்கள் ! 
துன்பம் தொலைய வேண்டுமா ? 
தீ்ந்தமிழ் படியு்ங்கள் ! 
சோகங்கள் ஒழிய வேண்டுமா? 
சந்தத்தமிழ் படியு்ங்கள் ! 
கவலைகள் போக வேண்டுமா? 
கற்கண்டுத்தமிழ் படியு்ங்கள் ! 
விரக்தி நீங்க வேண்டுமா ? 
வளம் மிக்க தமிழ் படியு்ங்கள் ! 
ஒழுக்கமாக வாழ வேண்டுமா ? 
ஒப்பற்றத் தமிழ் படியு்ங்கள் ! 
பண்பாடாக வாழ வேண்டுமா ? 
பைந்தமிழ் படியு்ங்கள் ! 
நெறிகளை அறிந்திட வேண்டுமா ? 
நிதமும் தமிழ் படியு்ங்கள் ! 
வீரம் அறிந்திட வேண்டுமா ? 
விவேகத்தமிழ் படியு்ங்கள் ! 
சாதி மத வெறி அகற்ற வேண்டுமா? 
சீர்மிகு தமிழ் படியு்ங்கள் ! 
மனிதம் மலர்ந்திட வேண்டுமா ? 
மயக்கும் தமிழ் படியு்ங்கள் ! 
முத்திரை பதிக்க வேண்டுமா ? 
முதல்மொழி தமிழ் படியு்ங்கள் ! 
கற்பனைத்திறன் வேண்டுமா ? 
கனித்தமிழ் படியுங்கள் ! 
சுயமாகச் சிந்திக்க வேண்டுமா ? 
சுந்தரத்தமிழ் படியுங்கள் ! 
வாழ்வியலை உணர வேண்டுமா ? 
வற்றாதத் தமிழ் படியுங்கள் ! 
மனிதன் மனிதனாக வாழ வேண்டுமா ? 
முத்தமிழ் படியு்ங்கள் ! 
மரணத்திற்கு மரணம் தர வேண்டுமா ? 
மாண்புமிகு தமிழ் படியு்ங்கள் ! 
இறப்புக்கு இறப்பு தர வேண்டுமா ? 
இனிமையான தமிழ் படியு்ங்கள் ! 
சாகாமல் வாழ வேண்டுமா ? 
சங்கத்தமிழ் படியு்ங்கள் ! 
சாகாமல் காக்கும் மருந்து தமிழ் ! 
சாதாரணம் தமிழ் முன் அமுதம் !
பிறமொழி கலந்து பேசக் கூசு ! – கவிஞர் இரா .இரவி !
.இயல் இசை நாடகம் முத்தமிழ் முத்திரை தமிழ் !
ஈடு இணையற்ற உயர்தனிச் செம்மொழி தமிழ் !
திருக்குறளால் பெருமை பெற்ற மொழி தமிழ் !
திருவள்ளுவரால் உலகம் அறிந்த மொழி தமிழ் !
எண்ணிலடங்காச் சொற்களின் சுரங்கம் தமிழ் !
எண்ணிட இனித்திடும் மொழி நம் தமிழ் !
உலகின் முதல் மொழி தமிழ் உணர்ந்திடுக !
உலகில் பன்னாட்டு மொழி தமிழ் அறிந்திடுக !
உலகம் முழுவதும் ஒலிக்கும் நம் தமிழ் !
உலக நாடுகளை வியப்பில் ஆழ்த்தும் தமிழ் !
இலக்கியங்களின் இமயம் நம் தமிழ் !
இலக்கணங்களின் இருப்பிடம் நம் தமிழ் !
எழுத்திலும் பேச்சிலும் நிலைத்த ஒரே செம்மொழி !
இனிமையான செம்மொழி சிதைப்பதை நிறுத்துக !
தமிழா தமிழை, தமிழாகப் பேசு !
தமிழா தமிழை, தமிழாக எழுது !
ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு !
ஒப்பற்ற தமிழுக்கு, பிறமொழி நஞ்சு !
என்ன வளம் இல்லை தமிழ் மொழியில் !
ஏன் கையை ஏந்த வேண்டும் பிறமொழியில் !
ஆங்கிலச் சொற்கள் கலப்பது மடமை !
ஆங்கிலக் கலப்பின்றி பேசுவது கடமை !
தமிழில் பிறமொழி கலந்து பேசக் கூசு !
தமிழில் பிறமொழி கலவாமல் பேசு !
பிறமொழி எழுத்தும் , சொல்லும் !
தமிழ்மொழி வளர்ச்சியைக் கொல்லும்!
திருவள்ளுவர் !                         கவிஞர் இரா .இரவி !
புலவர்களின் புலவர் 
கவிஞர்களின் கவிஞர் 
திருவள்ளுவர் !   
  
உலகப்பொதுமறைப் படைத்த 
உலகப்பெரும்  புலவர்  
திருவள்ளுவர் !   
பெயரிலேயே திருவைப் பெற்ற 
திருவாளர்  
திருவள்ளுவர் !   
அறநெறிப்  போதிக்கும்
அற்புத இலக்கியம் வடித்தவர் 
திருவள்ளுவர் !
அவ்வையின் உதவியால் 
அரங்கேற்றம் ஆனவர்  
திருவள்ளுவர் !   
அழைத்ததும் ஓடிவரும் 
அன்பு மனைவியைப் பெற்றவர்  
திருவள்ளுவர் !   
உலகில் அதிக மனிதர்கள் 
வாசித்த இலக்கியம் படைத்தவர்  
திருவள்ளுவர் !

ஈராயிரம்  வயது கடந்தும் 
இளமையாக இருப்பவர்  
திருவள்ளுவர் !   
மரபு அன்று என்றவர்களையும்
ஏற்க வைத்தவர் 
திருவள்ளுவர் !   
வாசுகியின் கணவர் 
வாசகர்களின் கண் அவர்  
திருவள்ளுவர் !   
தமிழ் இலக்கியத்தின் மணிமகுடம் திருக்குறள் – கவிஞர் இரா.இரவி
தமிழ் இலக்கியத்தின் மணிமகுடம் திருக்குறள்
தனிப்பெரும் இடம்பெற்ற இலக்கியம் திருக்குறள்
தமிழ் என்ற சொல்லே இடம் பெறாத திருக்குறள்
தமிழன் என்ற சொல்லே இடம் பெறாத திருக்குறள்
கடவுள் என்ற சொல்லே இடம் பெறாத திருக்குறள்
கற்கண்டை மிஞ்சும் கனிச்சுவை மிக்க திருக்குறள்
வாழ்வியல் நெறியை பயிற்றுவிக்கும் திருக்குறள்
வாழ்வின் அர்த்தம் உணர்த்தும் திருக்குறள்
உலக இலக்கியங்களின் உன்னதம் திருக்குறள்
உலகிற்கு அறநெறி அறிவிக்கும் திருக்குறள்
உலக மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்ட திருக்குறள்
உலக மக்கள் யாவரும் அறிந்த திருக்குறள்
அழியாப் பெருமையுடன் நிலைத்திருக்கும் திருக்குறள்
அறியாமை நீக்கிடும் அறிவுடைமை திருக்குறள்
மனிதநேயம் மனத்தில் விதைக்கும் திருக்குறள்
மடமை நீக்கி பகுத்தறிவைப் போதிக்கும் திருக்குறள்
ஈடு இணையற்ற இனிய இலக்கியம் திருக்குறள்
எண்ணிலடங்கா கருத்துப் புதையல் திருக்குறள்
காந்தியடிகளின் குரு டால்ஸ்டாய் என்ற அறிஞர்
டால்ஸ்டாயின் குரு செந்நாப்புலவர் திருக்குறள்
சொக்க வைக்கும் சொற்களின் சுரங்கம் திருக்குறள்
சோகத்தை மறக்க வைக்கும் சுகம் திருக்குறள்
தமிழுக்கும் செம்மொழி பெற்றுத் தந்த திருக்குறள்
தமிழருக்குப் பெருமை ஈட்டித் தந்த திருக்குறள்
திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும் – கவிஞர் இரா.இரவி
திருக்குறள் வழி வாழ்ந்தால் வாழ்க்கை இனிக்கும்
திருக்குறள் வழி நடந்தால் வாழ்க்கை சிறக்கும்
தான் என்ற அகந்தையை அகற்றுவது திருக்குறள்
நான் என்ற செருக்கை அழிப்பது திருக்குறள்
உயர்ந்த ஒழுக்கத்தை உணர்த்திடும் திருக்குறள்
ஓயாத உழைப்பைப் போதிக்கும் திருக்குறள்
முயற்சியை முன் நிறுத்திடும் திருக்குறள்
அயற்சியை உடன் அகற்றிடும் திருக்குறள்
ஆறாவது அறிவை பயிற்றுவிக்கும் திருக்குறள்
ஆராய்ச்சி அறிவை வளர்த்திடும் திருக்குறள்
மனிதனை மனிதனாக வாழவைக்கும் திருக்குறள்
மனிதனின் மிருகக்குணம் போக்கிடும் திருக்குறள்
மனிதனை அறிஞனாக ஆக்கிடும் திருக்குறள்
மனிதனின் அறியாமையை நீக்கிடும் திருக்குறள்
மனிதனை சான்றோனாக செதுக்கிடும் திருக்குறள்
அறிவியல் அறிவை உருவாக்கும் திருக்குறள்
அப்துல்கலாமை உயர்த்தியது திருக்குறள்
உலக இலக்கியத்தின் இமயம் திருக்குறள்
உலகில் ஈடு இணையற்ற நூல் திருக்குறள்
உலக மனிதர்கள் யாவருக்கும் வாழ்க்கையை
உணர்த்தும் ஒப்பற்ற உயர்ந்த திருக்குறள்
இல்லறம் நல்லறமாக விளங்கிட வேண்டும்
அன்பும் அறனும் அவசியம் வேண்டும்
உயர்ந்த தவத்தை விட சிறந்தது
ஒழுக்கமாக இல்லறத்தில் வாழ்வது
பிறர் பழிக்கும் தீமைகள் இன்றி
பிறர் போற்றும் வாழ்க்கை இல்லறம்
பூ உலகில் செம்மையாக வாழ்பவன்
வானுலக தேவர்களை விட சிறந்தவன்
வாழ்வது எப்படி என்பதை அறிய
வளமான திருக்குறளைப் படியுங்கள்
பாடாத பொருள் இல்லை திருக்குறளில்
சொல்லாத கருத்து இல்லை திருக்குறளில்
1330 திருக்குறள் மனப்பாடம் செய்வதைவிட
10 திருக்குறள் வழி நடப்பது நன்று !திருக்குறளை தேசிய நூலாக்குக !       கவிஞர் இரா .இரவி !
பாடாத பொருளில்லை சொல்லாத விளக்கமில்லை !
பண்பைப் பயிற்றுவிக்கும் பகுத்தறிவைப் போதிக்கும் !
மனிதன் மனிதனாக வாழ்ந்திட கற்பிக்கும் நூல் ! 
மனிதனின் மகத்துவம் மனிதனுக்கு உணர்த்தும் நூல் !
வாழ்வின் அர்த்தம் விளக்கிடும் அற்புத நூல் !
வசந்தம் அடையும் ரகசியம் கூறும்  நூல் !
தாய் பசித்திருந்தாலும் தவறு செய்யாதே எனும் நூல் !
தரணிக்கு அறநெறி விளக்கிய அறிவு விளக்கு நூல் !.
தமிழென்ற சொல்லின்றி  பெருமை சேர்த்த  நூல் ! 
தீங்கிழைத்த தீயவருக்கும் நன்மைசெய் எனும் நூல் ! 
நன்றி மறக்காமல் நன்றியோடு வாழ்க  எனும் நூல் !
நெறி பிறழாமல் நேர்மையோடு வாழ்க  எனும் நூல் !
ஆள்வோரின் கடமையை அறிவுறுத்திடும் அற்புதநூல் !
ஆணவத்தை அகற்றி அன்பைப் புகட்டிடும் அழகியநூல் !
பயனற்ற சொல் என்றும் சொல்லாதே எனும் நூல் !
பயனுற வாழ்க்கை  வாழ்ந்திட வழி சொல்லும்  நூல் !
வானிலிருந்து வரும் மழை அமிர்தம்  எனும் நூல் !
வானம் பொய்த்தால் வாழ்க்கைப் பொய்க்கும் எனும் நூல் ! 
இனிய முகத்துடன் வரவேற்க வேண்டும் எனும் நூல் !
இனிய சொல்லிருக்க வன்சொல் வேண்டாம் எனும் நூல் !
கடவுளால் முடியாதது முயற்சியால் முடியும்  எனும் நூல் !
கற்ற கல்வியின் படி வாழ்வில் நடந்திடுக  எனும் நூல் !
முப்பால் வடித்து முத்திரைப் பதித்த நூல் !
முக்காலமும் பொருந்தும் முன்னேற்ற   நூல் !
மரத்தில் தேசிய மரம் ஆலமரம் உள்ளது !
மலரில் தேசிய மலர் தாமரை உள்ளது !
விலங்கில் தேசிய விலங்கு புலி உள்ளது !
பறவையில் தேசியப் பறவை மயில்  உள்ளது !
தேசிய  மரம் மலர் விலங்கு பறவை உள்ளன  !
தேசிய நூல் மட்டும் இல்லையே ஏன் ?
உலகப்பொது மறையை  தேசிய நூலாக்க !
உமக்கு தயக்கம் ஏன் ? காரணம் என்ன ?  
திருக்குறளுக்கு இணையான நூல் உலகினில் இல்லை !
தீர்க்கமாக அறிந்திட்ட உலகஅறிஞர்கள் சொன்ன உண்மை !
திருக்குறளை தேசிய நூலாக அறிவித்திடுக !
திருக்குறளை வாழ்வில் தினம் கடைபிடித்திடுக !
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.

இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்

கருத்துரையிடுக