உழைப்பில் உள்ளது உயர்வு ! நூல் ஆசிரியர் : கவிஞர் டி.வி.எஸ். மணியன் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

உழைப்பில் உள்ளது உயர்வு !
நூல் ஆசிரியர் : கவிஞர் டி.வி.எஸ். மணியன் !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

மணிமேகலை பிரசுரம், 7, தணிகாசலம் சாலை, தியாகராய நகர்,
சென்னை – 600 017.  விலை : ரூ. 50.  பேச : 044 24342926  
manimekalai1@dataone.in
*****
      நூலாசிரியர் கவிஞர் டி.வி.எஸ். மணியன் அவர்கள், மின்னியலில் பொறியாளர் பட்டப்படிப்பு முடித்து, மேலாண்மையில் முதுநிலைப் பட்டயப் படிப்பும் முடித்து, மின்சார வாரியத்தில் கூடுதல் தலைமைப் பொறியாளராகப் பணியாற்றி ஓய்வு பெற்ற  பின்  .ஒய்வுக்கு  ஓய்வு தந்துவிட்டு தொடர்ந்து படைத்து வரும் படைப்பாளி.  ‘நேரத்தைப் போற்றிடுவோம்’ என்ற முதல் நூலின் வெற்றியைத் தொடர்ந்து, இரணடாவது நூலான ‘உழைப்பில் உள்ளது உயர்வு’ வந்துள்ளது.  முதல் நூலை வெளியிட்ட புகழ்பெற்ற மணிமேகலை பிரசுரமே இரண்டாவது நூலையும் வெளியிட்டு உள்ளனர்.  தரமான அச்சுவடிவமைப்பு.  பாராட்டுக்கள்.

 தொய்வின்றி உழைப்பு!   

 நண்பனே 
 உனது திறமைகளை புரிந்து கொள் 
 புதுப்பித்துக் கொள் 
 பெரிதாக்கிக் கொள்
 நேரான வழியில் 
 சீராகச் செல்
 உண்மை, நேர்மை 
 கொள்வது நம் கடமை
 நண்பனே இது போதும்  
 எப்போதும்!
      உழைப்பை வலியுறுத்துவதோடு நிற்காமல், உண்மை,  நேர்மை என்ற அறநெறியும் வலியுறுத்துவது சிறப்பு.  நல்ல சிந்தனைகளை விதைக்கும் தன்னம்பிக்கை கவிதைகளின் தொகுப்பு.
      குழந்தைகளுக்கு புரியும் வண்ணம் மிக எளிமையாக குழந்தைப்பாடல் வடிவிலும் கவிதைகள் உள்ளன.
      உறக்கத்தில் வருவது கனவு 
 நேரினில் நடப்பது னவு  
      அடக்கமாக இருப்பது பணிவு 
 தைரியமாக வாழ்வது துணிவு
      அனைத்துச் செல்வது அன்பு 
 அன்புடன் வாழ்வது பண்பு
      கடல் நீர் தருவது உப்பு 
 கடலில் கிடைப்பது முத்து

      யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன் என்பார்கள். அதனை நினைவூட்டும் வண்ணம், உதிர்ந்தாலும் இறகு அழகு என்கிறார்.

 இருந்தாலும் உதிர்ந்தாலும் !

 சிறகிலிருந்து பிரிந்து விட்டால்
 மவுசு உண்டோ 
 இறகுக்கு ?...
 சிறகில் இருந்தாலும் 
 உதிர்ந்து விழுந்தாலும்
 அழகோ அழகு 
 மயில் இறகு ...

      விளைநிலங்கள் எல்லாம் வீடுகளாகி வருகின்றன. இந்நிலை இப்படியே தொடர்ந்தால் ஒரு காலத்தில் உண்பதற்கு அரிசி இல்லாத நிலை வந்து விடும்.

      தூறலைக் கொள்ள வயல் இல்லை. !

            வானம் பொழிந்தால் 
 வயல்கள் செழிக்கும்
            மக்கள் சிரிப்பர் 
 தூறல்களையும் எதிர்கொள்ள
            வயல்களே இல்லை இப்போது.

      இன்றைய இளையதலைமுறையினர், பெற்றோர்கள் செய்த தியாகம் பற்றியோ, உழைப்பு பற்றியோ சிந்திப்பது இல்லை,  உணர்வதும் இல்லை.  தன்னலமாகவே தன்னை மறந்து வாழ்ந்து வருகின்றனர். அவர்களுக்கு அறிவுரை கூறும் வண்ணம் கவிதைகள் உள்ளன.

      பெற்றவர்கள் செய்த தியாகத்தில் 
 வாழும் பிள்ளைகளே
      யோசியுங்கள் ஒரு நிமிடம்
 படிப்பென்ன பதவியென்ன 
      பணமென்ன – வாழ்வில்
 பெற்றவர்கள் மீது பாசம் இல்லாமல் ...?

      சித்தர்கள் போல வாழ்வியல் கருத்துக்கள் கூறும் விதமாக சில கவிதைகள் உள்ளன.  பதச்சோறாக ஒன்று.

      ஒரு தரம் வந்த மேகம்!

            காற்று 
டிக்கும் பக்கம் 
 காற்றாடி பறக்கும்
            காசு இருக்கும் பக்கம் 
 கால்கள் நடக்கும்
            மற்றவர் இன்பம் அடைதலில் 
 மகிழ்தல் வேண்டும்
            மற்றவர் துன்பப் படுகையில் 
 உதவுதல் வேண்டும் !

      மனிதநேயம் கற்பிக்கும் விதமாகவும், ஊக்கம். ஆக்கம் தரும் விதமாகவும் நேர்மறை சிந்தனைகளை விதைக்கும் விதமாகவும் கவிதைகள் உள்ளன.  5 பகுதிகளாகப் பிரித்து 58 கவிதைகள் உள்ளன.

      இன்றைய இளைஞர்களுக்கு உத்வேகம் தரும் விதமாக நல்லபல அறிவுரைகள் சொல்லும் விதமாக கவிதைகள் வடித்துள்ளார்.

      செயலைச் சாதனையாக்கு!

            தோல்வியை மறந்திடு 
 விவேகத்தைக் கைக்கொண்டு
            வேகமாகச் செயலாற்று 
 வேதனைகளைச் சமாளித்திடு
            போதனைகளைப் பின்பற்றி 
 சோதனைகளை வென்றிடு
            சவால்களைச் சாத்தியமாக்கு 
 சாத்தியங்களைச் செயலாக்கு
            செயல்களைச் சாதனையாக்கு!

      ஹைக்கூ வடிவிலும் கவிதைகள் உள்ளன.  சிந்திக்க வைக்கின்றன.  விடுகதை போன்ற வடிவிலும் உள்ளன.

      கால் ஒன்று
      சுற்றுவது வேகமாக
      பம்பரம்.!

            மனிதன் ஒருவன்
            பறப்பது அதிவேகமாக
            மனம் !

      விதை ஒன்று
      வளர்வது பெரிதாக
      மரம் !

      வெப்பமயமாகி வருகின்றது. ஓசோனில் விழுந்த ஓட்டை பெரிதாகி வருவதனால், சூரியன் பூமிக்கு நேரடியாக வருவதனால், வெப்பம் கூடி, தட்பவெப்பம் மாறி பனிப்பாறைகள் வேகமாக உருகி, பெருகி, வெள்ளம் ஒருபக்கம், வறட்சி மறுபக்கம், தோல் நோய்கள், புதிய நோய்கள் வந்தவண்ணம் உள்ளன.  எபோலா என்ற நோய் புதிதாக வந்துள்ளது.  மனிதன், சுற்றுச்சூழல் மாசு குறைத்து வாழ வேண்டும் என்பதை வலியுறுத்தும் ஓசோன் பற்றி வடித்த கவிதை நன்று.

      ஓசோனில் ஓட்டை!
            அக்கினிச் சூரியன் 
 வக்கிரம் ஆனதோ
            அக்கிரமமான வெப்பம் 
 உதயத்திலே ஆரம்பம்
            கத்திரி அத்திரி பத்திரியோ 
 இனிமேலும் தாக்கும்
            இன்னும் அதிகம் கூடும்.
            பூமிக்கு மேலே 
 ஓசோன் அடுக்கில் 
            ஓட்டை போட்டு
 வளி மண்டலத்தில் 
          வழி செய்து விட்டோம் !

      பல்வேறு கவிதைகள் நூலில் உள்ளன. கதம்ப மாலை போல கவிதை மாலை பல்சுவை விருந்தாக வடித்துள்ளார்.
      தமிழ் படிக்காதவன், தமிழுக்குச் செய்யும் அணிகலன் இது.  பாராட்டுக்கள்.  கேள்வி கேட்டு சிந்திக்க வைக்கும் விதமாகவும் கவிதைகள் உள்ளன.

      பாறையை உழுதால் !

            பாறையை உழுதால் 
 பயிரா வளரும்
            மரத்தை அறுத்தால் 
 பழமா கிடைக்கும்
            வேலியை உடைத்தால் 
 பாதுகாப்பா கிடைக்கும்.

      நூலாசிரியர் கவிஞர் டி.வி.எஸ். மணியன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.  தொடர்ந்து எழுதுங்கள். வாழ்த்துக்கள்.  முதல் நூல் விமர்சனத்தில் வைத்த வேண்டுகோளையே திரும்பவும் வைக்கிறேன். பெயரின்முன் எழுத்துக்களைத் தமிழ் எழுத்தாக்குங்கள்.

.


கருத்துகள்