துளிர் விடும் விதைகள்! நூல் ஆசிரியர் : கவிஞர் வி. கிரேஸ் பிரதிபா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

துளிர் விடும் விதைகள்!


நூல் ஆசிரியர் : கவிஞர் வி. கிரேஸ் பிரதிபா !
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

அகரம், மனை எண் 1, நிர்மலா நகர், தஞ்சாவூர் 613 007. தொலைபேசி : 04362 - 239289

*****
       நூலாசிரியர் கவிஞர் வி. கிரேஸ் பிரதிபா அவர்கள் “தமிழை முதன்மைப் பாடமாக எடுத்து படிக்காதவர், தமிழ பாடத்தை (ஆங்கிலவழி) பள்ளியோடு விட்டு, கணினியில் முதுகலைப்பட்டம் பெற்றவர்” என்று அணிந்துரையில் கவிஞர் நா. முத்துநிலவன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.  ஆம், தமிழ் படித்தவர்களை விட தமிழ் படிக்காதவர்களே தமிழுக்கு அதிகப் பங்களிப்பு செய்து வருகின்றனர்.  கணினி படித்தவரின் தமிழ்ப்பற்று வியக்கும் வண்ணம் உள்ளது. 

       ‘எனக்காக என்னை நேசிக்கும் என்னவனுக்கும் ; என் நேசத்திற்குரிய ஆலன், ஆல்வின் இருவருக்கும் ; என் அன்பிற்குரிய பெற்றோருக்கும்’ 

என, நூலாசிரியர் இந்த நூலை காணிக்கையாக்கி இருக்கும் விதமே நூலாசிரியரின் குடும்பப்பற்றை பறைசாற்றும் விதமாக உள்ளது.
       நூலின் முதல் கவிதையே தமிழ் என்று தலைப்பிட்டு தொடங்கி உள்ளார்கள்.  பேச்சுவழக்கில் இல்லாமல் அழிந்த மொழிகள் ஏராளம்!

       தமிழ்!
இன்னுயிர்த் தமிழ் அன்றோ?
இடையில் துவங்கி இடையில் போன மொழி பல உண்டு
இடையூறு பல தாண்டித் தொன்று தொட்டு
என்றும் இளமையுடன் செம்மொழியாய் – இனிப்பினும்
இனிப்பது எம்தமிழ் அன்றோ!

       இலக்கியம் எதற்கு? என்று கேள்வி கேட்டு விடை சொல்லும் விதமாக வடித்த கவிதை நன்று. இலக்கியம் இதயத்தை இதமாக்கும்.  புத்துணர்ச்சி தரும்.  இலக்கியத்தின் நன்மை சொல்லும் கவிதை நன்று.
       அரிய இலக்கியம் படித்து!

       முன்னேறும் புவியில் 
       அறிவியல் வேண்டும் 
       இலக்கியம் எதற்கு?
       இலக்கியம் படித்துப்பார்ப்பீர் 
       அதிலுள்ள அறிவியலில் 
       அசந்து போவீர்
       இயற்கை, வரலாறு, அறிவியல்  வண்ணியல்,                  மருத்துவம், கணிதம்
       இலக்கியத்தில் எல்லாம் இருக்க 
       எதற்கு? என்ற வினா எதற்கு?
       அறியாமை வார்த்தைகள் விடுத்து 
       அறிவாய் முன்னேறு          
       அரிய இலக்கியம் படித்து!                                                                     
       ஆண் குழந்தைகளை விட பெண் குழந்தைகள் பெற்றோர்கள் மீது மிகவும் பாசமாக இருப்பார்கள். மணமாகி விட்டாலும் மறக்காமல் பெற்றோரை நினைத்துக் கொண்டே இருப்பார்கள்.  நூலாசிரியர் கவிஞர் வி. கிரேஸ் பிரதிபா அவர்கள் அப்பா பற்றியும், அம்மா பற்றியும் கவிதை எழுதி உள்ளார்கள்.  தந்தை என்பதை தந்தாய் என் புதிய சொல்லாட்சி பயன்படுத்தி இருப்பதற்கு பாராட்டுக்கள். 

       வாழ்த்துகள் ! என் அன்புத் தந்தாய்!
  தந்தையர் தினமாம் – இன்று 
  என்றென்றும் நீ தந்த அன்பல்லவா?
  என்றென்றும் நீ தந்த வாழ்வல்லவா? 
  ஒரே நாளில் எப்படிச் சொல்ல?
  என் தந்தாய் 
  நான் எதைத் தருவேன் 
  சூரியனுக்கு ஒரு சுடர் தருவதா?
  கடலுக்கு ஒரு துளி தருவதா? 
  இருந்தாலும் தருகிறேன் 
  என் அன்பை.
       உறவுகள் ஆயிரம் இருந்தாலும் அம்மா என்ற ஒப்பற்ற உறவுக்கு ஈடு இணை உலகில் இல்லை. தன்னை வருத்தி குழந்தையை வளர்க்கும் தியாகத்தின் திருவுருவம் அம்மா. அம்மா பற்றிய கவிதை நன்று.

      அவள் அன்புக்கு முன்
அம்மா 
அவள் தான் கருவில் சுமந்தாள் 
சுமையென்று நொடி கூட                                                 நினைக்காமல்!
அளவிட முடியாத அவள் அன்புக்கு முன்
நன்றியில் அடைக்க முடியாத
அவள் அன்புக்கு முன் 
வணங்குகிறேன் 
நேசிக்கிறேன்
அவள் அன்புக்கு முன் 
என்ன செய்தாலும் நிகராகாது அன்றோ!

       பெற்றோர்களிடம் பகிர்ந்து கொள்ள முடியாதவற்றையும், நண்பர்களிடம் பகிர்ந்து கொள்வோம்.  நட்பால் உயர்ந்தவர்கள், சிறந்தவர்கள் உலகில் உண்டு.  நட்பை உயர்த்தும் கவிதை இதோ!  நானும் நட்பில் சிறந்தவன்.

       நட்பு இல்லையேல் ...
       நட்பு இல்லையேல் 
       இல்லையே உவப்பு 
       நட்பு பாராட்டி மகிழ்வது சிறப்பு
       நண்பர்தினம் ஓர் தினம் ஆனாலும் 
       நண்பருடந் தான் அனைத்து தினமும்
       அருகிலோ அயலிலோ எங்கிருந்தாலும் 
       நட்புகள் அனைவருக்கும் வாழ்த்து!                                                                                      நூலாசிரியர் ஆங்கிலவழி முதுகலை பட்டம் பெற்றவர் என்ற போதும், ஆங்கிலச் சொல் கலப்பின்றி தமிங்கிலம் இன்றி, தமிழை தமிழாகவே எழுதி இருப்பதற்கு பாராட்டுகள்.  சிலர் புதுக்கவிதை என்ற பெயரில் தமிங்கிலம் எழுதி வருகின்றனர்.  அவர்கள் இந்த நூல் படித்து உணர வேண்டும்.  ஆங்கிலக் கலப்பின்றி எழுத வேண்டும்.

       நூலாசிரியர் கவிஞர் வி. கிரேஸ் பிரதிபா அவர்களுக்கு அவரது கணவர் திரு. ஆல்பர்ட் வினோத் அவர்களே அட்டைப்பட வடிவமைத்து கவிதை நூல் வெளியிட ஊக்கப்படுத்தியதை நூலாசிரியர் என்னுரையில் குறிப்பிட்டுள்ளார்கள். எனவே அவருக்கும் பாராட்டுகள்.  ஆணாதிக்க சிந்தனையின்றி துனணயின் கவித்திறமை உலகறிய உதவியமைக்கு பாராட்டுகள். திரு. ஆல்பர்ட் வினோத் உள்ளம் போல எல்லா ஆண்களும் உள்ளம் பெற வேண்டும். 

  சுற்றுச்சூழல் ஆர்வம் மிக்கவராக உள்ளார்கள்.  மரம், மழை குறித்தும் கவிதைகள் உள்ளன. இன்று மணல் கொள்ளை நடக்கிறது.  அதனால் ஆறுகள் காணாமல் போகின்றன.  அது குறித்தும் கவிதை உள்ளது.

       ஆறுகள் காணாமல் போனால் !

       ஆறுகள் காணாமல் போனால் 
       ஆழியும் என்ன ஆகுமோ?
       வானம் எங்கிருந்து முகருமோ? 
       உயிர்கள் எங்ஙனம் தழைக்குமோ?

       தண்ணீரை விரையம் செய்பவர்களைக் கண்டால் எனக்கு கோபம் வரும்.  சிக்கனமாக செலவு செய்யுங்கள் என்று கடிந்து கொள்வதும் உண்டு.  நூலாசிரியரும் அதே மனநிலையில் வடித்த கவிதை நன்று. தண்ணீரை விரையம் செய்வது அடுத்த தலைமுறைக்கு அல்லல் தரும் செயலாகும்.

       நானும் தான்!

       ஒரு கரண்டி கழுவ 
       ஒரு சட்டித் தண்ணியா? 
       என்றேன் நான்
       அடப்போம்மா 
       நீ தான் பூமியக் காப்பாத்தப் போறியா?
       என்றாள், அவள்
       நான் தான் இல்லை 
       நானும் தான் 
       என்றேன், நான்.

நானும்தான் என்பதில் நானும்தான் என்று சொல்லிக் கொள்ள விரும்புகின்றேன் .நான் தண்ணீரை மிக சிக்கனமாகவே பயன் படுத்தி விருகிறேன் .

       மானே, தேனே, மயிலே என்றால் சராசரிப் பெண்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.  ஆனால் ஆற்றல் மிக்கவர்கள், வித்தியாசமானவர்கள், போலியான புகழுரைக்கு மகிழ்வதில்லை, மயங்குவதில்லை, இயல்பாக இருந்தால் போதும்.  அந்த உண்மையை உணர்த்தும் விதமான கவிதை மிக நன்று!

       காதல்!
  என்னை நானாகவே !
  மலரென்றும் நிலவென்றும் 
  மானென்றும் தேனென்றும்                               மயக்கச்சொல் வேண்டாம்                                            
  உயிரென்றும் உள்ளமென்றும் 
  உளறலாய்  அல்லாமல் என்பெயரை         
  உரியவள்
  என்றுணர்ந்தே சொல் போதும்.
  எதனோடும் உருவகிக்க வேண்டாம் 
  ஏதேதோ உவமையிலும்           புகழ வேண்டாம்                                             என்னை நானாகவே விரும்பிடு – என் பாதியே!                                                                      
       புற அழகு நிரந்தரமன்று.  அக அழகே நன்று என்று உணர்த்தும் விதமாக வடித்த கவிதை மிகவும் வித்தியாசமாக உள்ளது.  பெண்ணே வடித்துள்ள விழிப்புணர்வுக் கவிதை இது.

       எனக்காகவே என்னை நேசி!
 என் கண்களுக்காக நேசிக்கிறாயா? வேண்டாம் 
 ஒரு நாள் அவை  ஒளி                                                       இழக்கக்கூடும் !
 என் புன்னகைக்காய நேசிக்கிறாயா? வேண்டாம் 
 ஊழிக்காலமோ  அது                                                       வசீகரிக்கும்
 கன்னக்குழிகளை நேசிக்கிறேன்? வேண்டாம் 
 வயதோடு மங்கி  மறைந்து   விடுமே!                                        என் அன்பே! நேசத்தின் நித்தியத்திற்காகவும் 
 எனக்காகவும்  மட்டுமே                                                   என்னை நேசி!                     

       இல்லறம் நல்லறமாக விளங்கிட குடும்ப வாழ்க்கை எப்படி? வாழ வேண்டும்?, உண்மையான காதல் எது? இப்படி பல கேள்விகளுக்கு விடை சொல்லும் விதமாக வடித்த கவிதைகள் நன்று.  சமுதாயத்தை நெறிப்படுத்திட உதவிடும் வண்ணம் கவிதைகள் உள்ளன.

       கனவுக் கணவனே!
 எனக்கு நீ உனக்கு நான் எந்நிலையிலும் தாங்கிடவேண்டும்     
 கனவில் சில கலைந்தாலும் கலையாக் காதல் வேண்டும்
 கனவுக் கணவனே! என் கனவைக் கேளாயோ
 கணக்கில் சேர்க்காமல் நேசிப்பேன் அறிவாயோ ?

       சங்க இலக்கியப் பாடல்கள் நடையில் செம்பருத்தி அவிழ  வாராரோ! என்ற கவிதை நன்று!

       கவிதை எழுதுவதில் காட்சிப்படுத்துதல் ஒரு யுக்தி.  இந்தக் கவிதை படிக்கும் போது படிக்கும் வாசகர்களுக்கு மனக்கண்ணில் கடல் வந்து விடும் என்று உறுதி கூறலாம்.

       கடற்கரை !
       நுரைக்கும் வெள்ளியைக் கொலுசாய் அணிவிக்க
       காலை வருடும் அலைகள்
       அவற்றிடம் பொறாமை கொண்டு கால்களைப்
       புதையச் செய்யும் மணல்!

       நூல் விமர்சனத்தில் மேற்கோள் என்பது பதச் சோறாகவே இருக்க வேண்டும்.  மற்றவை வெள்ளித்திரையில் காண்க! என்பது போல மற்ற கவிதைகளை நூல் வாங்கிப் படித்துப் பாருங்கள்.  இறுதியாக புத்தகம் பற்றிய கவிதை ஒன்று.

       புத்தகம்!

 சத்தமில்லாமல் பல தகவல் சொல்கிறான் 
 சீராகச் சிந்திக்க வைக்கிறான்
 எதிர்பார்ப்பில்லாமல் 
 எனக்காகப் பக்கம் துடிக்கும் 
 அன்புக்காதலன் புத்தகம்!

                                                         


       நூலாசிரியர் கவிஞர் வி. கிரேஸ் பிரதிபா அவர்களுக்கு பாராட்டுகள்.  இன்னும் எழுதிட வாழ்த்துகள்.தங்களின் அடுத்த நூலையும் ஆவலோடு எதிர் நோக்குகின்றேன் .

கருத்துகள்

  1. ஈன்ற தாயை மறக்காமல் தந்தையை மறக்காமல் இருப்பது இயல்பு என்றாலும். தாய்மொழியை மறக்காது அதன் மீது கொண்ட பற்றினால் விளைந்த இப்புத்தகத்தை அழகாக விமர்சித்த உங்களுக்கு நன்றியையும். தோழிக்கு வாழ்த்தையும் தெரிவித்துக்கொள்கிறேன். இன்னும் பல நூல்கள் வெளியிட தோழிக்கு வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு
  2. நூல் வெளியீட்டு விழாவில் நான் கலந்துகொண்டேன். அவரது நூலைப் பற்றிய மதிப்பீட்டினை அப்போதே அறிந்தேன். தற்போது தங்களின் எழுத்து மூலமாக அவருடைய கவிதைகள் தங்கள் மீது ஏற்படுத்திய தாக்கத்தினை உணர்ந்தேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக