வல்லினம் நீ உச்சரித்தால் ! நூல் ஆசிரியர் : கவிஞர் முகமது மதார் ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

வல்லினம் நீ உச்சரித்தால் !


  • நூல் ஆசிரியர் : கவிஞர் முகமது மதார் !


நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

கவிஞர் முகமது மதார் 98970 69069 kavipuyalmammu@gmail.com
வாசகன் பதிப்பகம், 11/96, சங்கிலி ஆசாரி நகர், 
சன்னியாசி குண்டு, சேலம் – 636 015. 
kavignareagalaivan@gmail.com     விலை : ரூ. 50 

*****
       ‘வல்லினம் நீ உச்சரித்தால்’ நூலின் தலைப்பே கவித்துவமாக உள்ளது நூலாசிரியர் கவிஞர் முகமது மதார் அவர்கள் நூல் முழுவதும் காதல் கவிதைகளாக எழுதி, இந்நூலை அவரது ஆசிரியர் திரு. அமல்ராஜ் அவர்களுக்கு காணிக்கையாக்கி இருப்பது வித்தியாசம்.  மதுரைக்கவிஞர் ஆத்மார்த்தி அவர்களின் அணிந்துரை நூலிற்கு வரவேற்பு தோரணமாக உள்ளது.

       நூலின் தலைப்பிற்காக எழுதிய முதல் கவிதையிலேயே காதலியின் உச்சரிப்பு உயர்வானது என்பதை உணர்த்தி விடுகிறார்.  உண்மை தான், காதலனுக்கு காதலியின் குரல் தனித்துக் கேட்கும்.  குரல் கேட்டவுடன் உடன் திரும்பி பார்த்து விடுவார்கள். 

       வல்லினம் நீ உச்சரித்தால் 
       மெல்லினமாய் மாறுதடி
       மெல்லினம் நீ உச்சரித்தால் 
       மயிலினமாய் வருடுதடி !

       தேவதை என்பது கற்பனை தான்.  யாரும் தேவதையைப் பார்த்த்து இல்லை. கவிதைக்கும் மட்டுமல்ல காதலுக்கும் கற்பனை அழகுதான் .ஆனால் காதலனுக்கு காதலி தேவதையாகவே தெரிவாள். 

       வெள்ளை சுடிதார் 
       நீ அணிந்தாய்?
       உண்மையைச் சொல் 
       இது நீ தானா?
       இல்லை, தேவதையா?

       திரைப்படப் பாடல்களிலும், கவிதைகளிலும், கொல்கிறாய், செத்துப் போகிறேன் என்று எழுதுவது வாடிக்கையாகி விட்டது.  அதே பாணியில் நூலாசிரியர் கவிஞர் முகமது மதார் அவர்களும் எழுதி உள்ளார்.

       ஜன்னல் வழியே ! 
       நீ சிரித்திடும் சிரிப்பினில்
       காய்ந்து, சாய்ந்து 
       சரிந்து செத்தே போகிறேன்
       நான் – தினம் தினம்!

       ஆள் பாதி, ஆடை பாதி என்பார்கள்.  ஆடை, ஆளை அழகுபடுத்துவதில் ஒரு காரணியாக உள்ளது. காதலனுக்கு காதலி எந்த ஆடை அணிந்தாலும் அழகாகவே தெரியும் என்பது உண்மை.

       எந்த ஆடை 
       உனக்கு அழகென்று 
       தெரியவில்லை
       நீ அணிந்தால் 
       எந்த ஆடையும் 
       அழகாகி விடுகிறது.

       தேநீரில் ஈ விழுந்து விட்டால் நாம் அந்தத் தேநீரை குடிக்க மாட்டோம், வைத்து விடுவோம்.  ஆனால் நூலாசிரியர் கவிஞர் முகமது மதார் அவர்கள் ஈ விழுந்த தேநீரை குடிக்கின்றார், என்ன காரணம் என்பதை அறிவோமா?

       உன் கன்னப் பகுதியில் 
       மொய்த்த ஈ விழுந்து
       இனிப்பானது – என் 
       குவளைத் தேனீர்.

       ஆம் காதலி, கன்னம் தொட்ட ஈ விழுந்தால் இனிக்குமாம், சீனி தேவை இல்லை போலும்.

       சிலர் காதலின் ஞாபகமாக ஏதாவது பொருள் வைத்து இருப்பார்கள்.  ஆனால் வெகு சிலர் காதலின் நினைவாக எந்தப் பொருளும் வைத்து இருப்பதில்லை.  ஆனால் காதல் நினைவுகளை உயிருள்ளவரை மறக்காமல் ஞாபகமாக வைத்து இருப்பார்கள்.

       உன் ஞாபகமாய் 
       எதுவுமில்லை என்னிடம்
       உன் ஞாபகங்களைத் தவிர...

       காதல் கவிதைகளுக்கு காதலி தான் கருப்பொருள், மூலப்பொருள், எல்லாம் அவள் தான்.  அந்த வகையில் வடித்த கவிதை ஒன்று.

       நதி நீரில் நிலா விழுந்தால் 
       கற்பனையாகி விடுகிறது !
       என் கற்பனையில் நீ விழுந்தால் 
       கவிதையாகி விடுகிறாய்!

       காதலியைப்ப் பார்த்தால் கவிதை எழுத வரும்.  அதையும் தாண்டி இவர் காதலியே ஒரு கவிதை என்கிறார் பாருங்கள்.

       நான் எழுதினேன் 
       ஏதோ கவிதையாகியது
       நீ எழுதினாய் 
       கவிதை ஏதோ எழுதியது !

       திருநெல்வேலியில் இருட்டுக்கடை அல்வா கடை உண்டு.  மிகவும் பிரபலமான கடை அது.  அந்த கடை பற்றிய பிரபலத்தோடு காதலியையும் பிரபலப்படுத்துகின்றார்.

       இருட்டுக் கடை 
       தாண்டி வந்த
       வெளிச்ச் அல்வா 
       நீதானா?
       நவீன யுகத்தில் காதல் கடிதங்களுக்கு வேலை இல்லை.  அலைபேசியில் அலைஅலையாக குறுஞ்செய்தி அனுப்பி காதல் தொடர்கின்றார்.

       நான் குறுஞ்செய்தி 
       அனுப்பும் போதெல்லாம்
       தாமதித்து பதில் அனுப்புகிறாய் 
       அந்த நிமிடங்களில்
       நின்று துடிக்கிறது 
       என் இருதய அலைவரிசைகள் !

       புவி வெப்பமயமாதல், மலைகளை வெட்டுதல், மண்ணை அள்ளுதல், நிலத்தடி நீரை உறிஞ்சி எடுத்தல் – இவை தான் நிலநடுக்கம் வருவதற்கு காரணம் என்று இருந்தேன்.  நூலாசிரியர் கவிஞர் முகமது மதார் அவர்கள் வேறு காரணம் சொல்கிறார் பாருங்கள்.

       அடிக்கடி 
       தலைகுனிந்து சிரிக்கிறாய்
       பாவம் பூமி 
       நிலநடுக்கம் வராமல் 
       என்ன செய்யும்
       மனதில் காதல் வந்து விட்டால் அடிக்கடி கண்ணாடி பார்த்து அழகுபடுத்திக் கொள்வார்கள். அது ஆணாக இருந்தாலும் சரி, பெண்ணாக இருந்தாலும் சரி, இருபாலரும் அப்படித்தான்.  அதனை உணர்த்திடும் புதுக்விதை.
       காதல் வயப்பட்டவர்கள் உணர்ந்து ரசிக்கும் கவிதையாக உள்ளது.  பாராட்டுக்கள்.
       நீ என்னைப் பார்த்த 
       ஒரு நிமிடம் முன்பு
       நூறு நிமிடம் பார்த்திருப்பேன் 
       நிலைக் கண்ணாடியை
       காதலியை காதலன் நிவோடு ஒப்பிட்டு கவிதை எழுதுவது காலம்காலமாக தொடர்ந்து கொண்டே தான் இருக்கும்.

       நீயில்லா இரவுகளில் 
       உன்னை நிலவில் வைத்துப் பார்க்கிறேன்!
       நிலவில்லாத இரவுகளில் 
       உன்னை நினைவில் வைத்துப் பார்க்கிறேன்!

       குழந்தையின் சிரிப்பு என்றும் அழகு தான்.  காண கண்கள் இரண்டு போதாது.  இவர் குழந்தையின் சிரிப்போடு காதலியின் சிரிப்பை ஒப்பிட்டு கவிதை வடித்துள்ளார்.

       குழந்தையின் புன்னகை 
       உன்னை ஞாபகப்படுத்துகிறது
       உன் ஞாபகம் 
       என்னை குழந்தையாக்கி விடுகிறது.

       நூலாசிரியர் கவிஞர் முகமது மதார் அவர்களுக்கு பாராட்டுகள்.  கவிதை எழுதிடத் தொடங்கும் போது பலரும் முதலில் காதல் கவிதைகள் எழுதுகின்றனர்.  கவிதை கைவரப்பட்டவுடன் அதோடு நின்று விடாமல், காதலையும் தாண்டி உலகின் முதல்மொழியான தமிழ்மொழி பற்றி, நாட்டு நடப்பு பற்றி, சமுதாயம் பற்றி விழிப்புணர்வு கவிதைகள் எழுதிட முன்வர வேண்டும்.காதலைத்  தாண்டி கவிதைகள் எழுதினால்தான் இலக்கிய  உலகில் பெயர் பெற இயலும் .அடுத்த நூலில் சமுதாயம் பற்றிய கவிதைகள் எழுதுங்கள் .

நூல் ஆசிரியர்  கவிஞர் முகமது மதார் போன்று பல புதிய கவிஞர்களின் நூலை பதிப்பித்து வரும் , பதிப்பாளர் இனிய நண்பர் கவிஞர் ஏகலைவன் அவர்களுக்கும் பாராட்டுகள் .



.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்