மாண்பு மிக்கவள் மண்ணில் மகத்தானவள் மகள் ! கவிஞர் இரா .இரவி !

மாண்பு மிக்கவள் மண்ணில்  மகத்தானவள் மகள் !

கவிஞர் இரா .இரவி !


இரண்டாம் பட்சமாக நினைத்தே வளர்க்கின்றனர்
முதல்பட்சமாக மகளே ஆகின்றாள் !

வேண்டாவெறுப்பாக சிலர் வளர்ப்பதுண்டு
விவேகத்தில் சிறந்தவளாக அவள் ஆவதுண்டு !

கொள்ளி போட மகனில்லையே வருத்தத்தில்
கனிவின்றி மகளை சிலர் வளர்ப்பதுண்டு !

மின்சாரத் தகனம் இங்கே வந்தபின்னே
மகன் கொள்ளி போட வேண்டிய அவசியமில்லை !

மகள் கொள்ளி வைத்தாலும் வேகும் பிணம் !
மயானத்தில் அனுமதிப்பதில்லை மாற வேண்டும் இந்நிலை !

ஆண் வாரிசு என்று செல்லத்தால் வளர்த்த மகன்
அவமானத்தை சிலருக்கு தந்து விடுவதும் உண்டு !

பெண்மகள் பாசத்தில் அன்பில் சிறந்தவள்
ஆண்மகன் பாசத்தில் அன்பில் குறைந்தவன் !

திருமணமாகி கணவன் வீடு சென்ற பின்னும்
தன் மனத்தைப் பெற்றோர் மீது வைத்திருப்பவள் மகள் !

திருமணமாகி விட்ட மகனோ மெல்ல மெல்ல
தன் பெற்றோரை மறக்கும் அவலமும் நடப்பதுண்டு !

மணமான பெண்ணிடம் அவளைத் திட்டினாள் பொறுப்பாள்
மங்கையின் பெற்றோரைத் திட்டினால் பொங்கி எழுவாள் !

மணமான ஆணிடம், அவன் பெற்றோரைத் திட்டினால்
மனம் கோணாமல் அவனும் சேர்ந்து திட்டுவதுண்டு !

எங்கேயும் எப்போதும் யாரிடமும் பெற்றோரை
என்றும் விட்டுக் கொடுக்காதவள் மகள் !

தன் மூச்சு உள்ளவரை தன் பெற்றோரை நேசிக்கும்
தீவிர பாசக்காரி நேசக்காரி மகள் !

பெண் பிறந்ததற்காக இனி யாரும் பேதலிக்க வேண்டும்
பெண் பிறந்தால் பெருமை கொள்ளுங்கள் !

பெண் பெற்றதற்காக பெற்றவளை வெறுக்கும்
பாசமற்ற தந்தைகள் உடன் திருந்த வேண்டும் !

ஆணா? பெண்ணா? முடிவு செய்வது பெண்ணல்ல
ஆணிடம் உள்ளது என்று அறிவியல் சொல்கிறது !

மகளைப் பெற்றவர்கள் பாக்கியவான்கள் உணருங்கள்
மகளுக்காக என்றும் எப்போதும் வருந்தாதீர்கள் !

மகளைப் பெற்றதற்காக பெருமை கொள்ளுங்கள் !
மாண்பு மிக்கவள் மண்ணில்  மகத்தானவள் மகள் !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

கருத்துகள்