திருக்குறளில் வினாக்கள் ! உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி ! தொகுப்பு : கவிஞர் இரா. இரவி !

திருக்குறளில் வினாக்கள் !
உரை வீச்சு : முனைவர் பேராசிரியர் இ.கி. இராமசாமி !
தொகுப்பு :
கவிஞர் இரா. இரவி !

இடம் : மதுரை திருவள்ளுவர் கழகம்
*****
       திருக்குறளில் 142 வினாக்கள் உள்ளன.  ஒரு குறளில் ஒரு வினா, ஒரு சில குறளில் இரண்டு வினாக்கள், ஒரு சில குறளில் மூன்று வினாக்களும் உள்ளன.

       பிறன்மனை நோக்காத பேர்ஆண்மை சான்றோர்க்கு
       அறன்ஒன்றோ ஆன்ற ஒழுக்கு                                    148
       பிறன்மனைவியை விரும்பிப் பார்க்காத பெரிய ஆண்மை சான்றோர்க்கு அறம் மட்டும் அன்று, நிறைந்த ஒழுக்கமும் ஆகும்.

       திருவள்ளுவர், இராமாயணம், மகாபாரதம் படித்தவர்.  நன்கு கற்றவர்.  இராவணன் சிவபக்தன், அறநெறியாளன், நல்ல மன்னன் என்ற பல நற்குணங்கள் இருந்த போதும் சீதையை கவர்ந்த காரணத்தால் மரணம் அடைந்தான்.  அதனை உணர்த்திடும் திருக்குறள் இது.

       ஒழுக்கத்தில் சிறந்த ஒழுக்கம் பிறன் மனைவி நோக்காது இருத்தல்.  ஆண்மை என்பது போரிடுவது, வெற்றி காண்பது.  பேராண்மை என்பது பால்உணர்ச்சி அடக்குவது.  காமக்கண்ணுடன் பிறன்மனைவியைப் பார்க்காது இருத்தலே பேராண்மை. 

பேராண்மை என்ற பெயரில் ஒரு திரைப்படம் வந்தது. பார்த்து இருப்பீர்கள்.  அதில் வரும் கதாநாயகனும் பெண்களுடன் பேராண்மையுடன் திகழ்வான்.  ஜீலியட் சீசர் கிளியோபாட்ரா போன்ற கதைகளிலும் பல நாடுகளிலும் பல துன்பங்களுக்கு காரணமாக இருந்தது பிறன்மனைவி நோக்கியது ஆகும்.

       ஈத்துஉவக்கும் இன்பம் அறியார்கொல் தாம்உடைமை
       வைத்துஇழக்கும் வன்க
ணவர் .                                   228
       தாம் சேர்த்துள்ள பொருளைப் பிறர்க்கும் கொடுக்காமல் வைத்திருந்து பின் இழந்துவிடும் இரக்கமில்லாதவர்கள், பிறருக்குக் கொடுத்து மகிழும் மகிழ்ச்சியை அறிய மாட்டார்கள்.

       புரட்சிக்கவிஞர் பாடினார், பசி என்று வந்தவனை புசிக்க செய் என்பார்.

       மதுரை கோட்சு தொழிலாளர் சங்கத்தின் தலைவர் பொறுப்பில் இருந்தவர் வரதராச நாயுடு.  தனுஷ்கோடி புயல் வந்து மக்கள் துன்பம் அடைந்த போது, மதுரை கோட்சு பண்டகசாலையில் தொழிலாளர்களுக்கு வைத்திருந்த அரிசி, பருப்பு பண்டங்களை அனுப்பி வைத்த செய்தி அறிந்தேன்.

       திருவள்ளுவர் மகாபாரதமும் நன்கு கற்றுத் தேர்ந்தவர்.
       கர்ணன், கவசம் குண்டலத்துடன் பிறந்தவன். குண்டலம் எதிரே எதிரி வாள் சுழட்டும் போது கண் கூசுமாம்.  கர்ணன், கனவில் சூரியன் தோன்றி நாளை கவசகுண்டலம் கேட்பான் கொடுக்காதே என்கிறான்.  அதற்கு கர்ணன் சொல்கிறான் என் கொடை தரும் கொள்கைக்கு எதிரானது நீங்கள் சொல்வது.  என்னிடம் கேட்டு வந்தால் எதையும் மறுக்கும் பழக்கம் எனக்கில்லை என்கிறான்.  கேட்டு வந்தவுடன் கவசத்தையும், குண்டலத்தையும் அறுத்துத் தருகிறேன். புறத்தே வலி இருந்த போது அகத்தே மகிழ்ச்சி இருந்தது கர்ணனுக்கு.

       தருமன், சூது விளையாடுகிறான், தன்னை இழக்கிறான், சகோதரர்களை இழக்கிறான், மனைவியை இழக்கிறான், புறத்தே இழந்த போதும் அகத்தே வலி இருந்திருக்கும்.

       கர்ணனையும், தருமனையும் நினைத்து இந்த திருக்குறளை திருவள்ளுவர் வடித்து இருக்க வேண்டும்.

       அன்பிற்கும் உண்டோ அடைக்கும்தாழ்? ஆர்வலர்
       புன்கண்நீர் பூசல் தரும்.                                            71
       அன்புக்கு அடைத்து வைக்கும் தாழ் ஏதேடும் உண்டோ? அன்புடையாரின் சிறிதளவு கண்ணீரை அவர் அன்பைப் பலர் அறிய வெளிப்படுத்தி விடும்.

       உற்றார் உறவினர் நண்பர் இறந்த போது பலருக்கு கண்ணீர் வரும்.  ஆனால் சங்க இலக்கியத்தில் புறத்திணையில் ஒரு பாடல் வரும்.  இரண்டு கைகளை வெட்டி விட்டு பார்த்துக் கொள் என்பது போல.  பாரிக்கு இரண்டு மகள்கள்.  பாரி தோல்வியுற்று நாட்டை விட்டு விரட்டி விட்டனர். பரம்புமலை பற்றி அற்றைத்திங்கள் பாடல் வரும்.  தந்தை இல்லை, நாடு இல்லை – சென்ற முழு நிலவு நாளில் இவையாவும் இருந்தது.  இந்த முழு நிலவு நாளில் எதுவும் இல்லை. 

பாரியின் நண்பன் கபிலர் கண்ணீர் விட்டு அழுகிறார்.  கபிலர் இரண்டு பெண் குழந்தைகளைப் பார்த்து அழுகிறார்.  கம்ப இராமாயணத்திலும் அழும் காட்சி வருகின்றது.  அவை கற்பனை.  ஆனால் நண்பனுக்காக, நண்பனின் குழந்தைகளுக்காக கபிலன் கண்கலங்கி நின்றான். 

       அணங்குகொல் ஆய்மயில் கொல்லோ கணங்குழை
       மாதர்கொல் மாலும் என்
நெஞ்சு!                       (காமத்துப்பால் 1081)

       அடர்ந்த அழகிய கூந்தலை உடைய இப்பெண் தேவமகளோ? மயிலோ? மானிடப் பெண்ணோ?  என என் நெஞ்சம் மயங்குகின்றது.

       ஒரே திருக்குறளில் மூன்று வினாக்கள் வரும்.  ஆனால் விடை இல்லை.

       யாரினும் காதலம் என்றேனா ஊடினாள்
       யாரினும் யாரினும் என்று.                                         1314
       மற்றவர்களை விட நாம் மிக்க காதல் கொண்டிருக்கிறோம் என்று சொன்னேன்.  யார் அந்த மற்றவர் என்று கேட்டு ஊடல் கொண்டாள்.

       வினாக்கள் இந்த குறளிலும் உண்டு.

அறிவினான் ஆவேது உண்டோ பிறிதின்நோய்
        
தம்நோய் போல்போற்றாக்கடை                                  315
       மற்றோம் உயிர்க்கு உண்டாகும் துன்பத்தைத் தமக்குற்ற துன்பமாகக் கருதி அதனை நீக்கிக் காக்க முற்படாவிட்டால், ஒருவர் பெற்ற அறிவினால் வரக்கூடிய பயன் உண்டோ?

       மருத்துவர்கள் கடைபிடிக்க வேண்டிய திருக்குறள்.

       ரமணா திரைப்படத்தில் வருவது போல நடந்து கொள்ளும் மருத்துவர்கள் இருக்கிறார்கள்.  சர்க்கரை அளவு பார்க்க வந்த நோயாளியை உள்நோயாளியாக்கி பணம் பறிக்கின்றனர்.  திருவள்ளுவர், மனிதன் என்று சொல்லாமல் உயிர் என்ற சொல்லைப் பயன்படுத்தி எல்லா உயிர்களிடத்தும் அன்பு செலுத்துக என்கிறார்.

       மனித வாழ்க்கை வளமானதாக நலமானதாக அமைந்திட இயற்கை, மரம், மலர், செடி, கொடி எல்லாம் வாழ வேண்டும்.  விலங்குகள், பூச்சிகள் என்று எல்லா உயிர்களும் வாழ வேண்டும்.  பிராணிகள் நல வாரியம் அமைத்து உள்ளனர்.  நாகரிகம் தோன்றிய இடத்தில் பிற உயிர்களுக்கு தீங்கு செய்யாதீர்கள் என்கிறார் திருவள்ளுவர்.  மற்ற உயிர்களின் துன்பத்தை தன் துன்பமாகக் கருதி உதவி செய் என்கிறார்.  




நன்றி


.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி


http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்