சுவடுகள் நெய்த பாதை ! நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன். paaki55@yahoo.com, நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

சுவடுகள் நெய்த பாதை !



நூல்ஆசிரியர் : கவிஞர் பா. கிருஷ்ணன். paaki55@yahoo.com,

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

தகிதா பதிப்பகம், 4/833, தீபம் பூங்கா, கே.வடமதுரை,
கோவை-641 017.
பேச : 94437 51641. மின்னஞ்சல் :
dhakitha@gmail.com பக்கங்கள் :68, விலை: ரூ.60.
*****
       நூல் ஆசிரியர் கவிஞர் பா. கிருஷ்ணன் அவர்களைப் பற்றி நூலை வெளியிட்ட தகிதா பதிப்பகம் பதிப்புரையில் குறிப்பிட்டுள்ளது, குறிப்பிடத் தகுந்தது.

       “தமிழகத்தின் தலைநகர் தொடங்கி தாயகத்தின் தலைநகர் வரையில் தன் ஊடகத்துறையின் மூலம் உன்னதப் பங்களிப்பை இவர் வழங்கியிருக்கிறார்.  பன்மொழி அறிவும், படைப்பாக்கச் சிறப்பும், சமூக அறிவியல் ஞானமும் ஒருங்கே பெற்றிருக்கும்.  இவர் தன் அச்சு, ஊடக எழுத்துக்களின் மூலம் பல லட்சம் தமிழர்களின் இதயங்களை ஊடுருவி இருக்கிறார்.

       ஆம், உண்மைதான். பத்திரிக்கைத் துறையில் பல ஆண்டுகளாக தனி முத்திரைப் பதித்தவர் கவிதை உலகிலும் ‘சுவடுகள் நெய்த பாதை என்ற இந்த நூலின் மூலம் தடம் பதித்து உள்ளார்.  பாராட்டுக்கள்.  கவிஞர் ஜெயபாஸ்கரன் அணிந்துரை தோரணவாயிலாக வரவேற்கின்றது.

       ‘சுவடுகள் நெய்த பாதை என்ற நூலின் தலைப்பே சிந்திக்க வைத்தது.  சுவடுகள் உருவாக்கிய பாதை என்றால் சாதாரணம்.  சுவடுகள் நெய்த பாதை எனும் போது கவித்துவமாகின்றது.  சுவரொட்டி பற்றி எழுதிய கவிதை மிக வித்தியாசமானது.

       போஸ்டர் நான்!
காற்று தான் போர்வையாகும்
கைகளே ஆடையாகும்
ஏழையின் வீட்டில் நானோர்
காகித மஞ்சம் ஆனேன்
மாடுகள் உண்ணும் போது
சுவர்களின் புல்வெளியானேன்
வயிற்றிலே பசியே நிரம்பும்
பாமரன் எழுத்து கற்க
பாடமாய சுவரின் விரிவேன்.
சுவர்மரம் சாயும் போது
விழுதென ஒட்டி நிற்பேன்
கிழிந்தபின் பிளாட்பாரத்தின்
கூரையாய் ஆகி காப்பேன்
அவதாரம் செய்யும்
ஆண்டவன் தானே நானும்!

       நம் கண்ணில் படும் சுவரொட்டிகள் பற்றி ஓர் ஆய்வே நடத்தி கவிதை வடித்துள்ள கவித்துவம் மிக்க உள்ளத்திற்கு பாராட்டுக்கள்.

       மனிதர்களில் நல்லவர்கள், “தூங்குபவர்களும், இறந்து போனவர்களும் என்ற பொன்மொழியை நினைவூட்டும் விதமாக, தத்துவம் சொல்லும் விதமாக உள்ள கவிதை நன்று.

       செத்துப் போனவன்
       செத்துப் போனவன் தந்த சுகம்
       சும்மா இருப்பவன் தருவதில்லை
       கல்லறைக்க்குள்ளே இருப்பவன் போல
       நல்லதை எவனும் செய்வதில்லை
       மூச்சு நிறுத்தியவன் செய்த பணியை
       முழுசாய் இருப்பவன் புரிவதில்லை
       கண் மூடியவன் பார்த்த வாழ்வை
       மண்ணில் இருப்பவன் பார்ப்பதில்லை
       விழுந்து விட்டவன் காட்டும் குணத்தை
       வாழ்பவன் எவனும் காட்டவில்லை
       இத்தனை புகழும் கிடைப்பதற்கேனும்
       ஒருமுறை செத்தால் பாவமில்லை.

       எதுகை, மோனை மட்டுமல்ல ; இயைபும் வரும் விதமாக பல புதுக்கவிதைகள் நூலில் உள்ளன.  கவிதைகளுக்கு பொருத்தமான புகைப்படங்கள் அச்சிட்டிருப்பதால் படிக்க சுவை கூட்டுகின்றன. 

       பட்டிமன்ற நடுவர் தமிழறிஞர் சாலமன் பாப்பையா அவர்கள், தினமணி வைர விழாவில் பாராட்டிய கவிதை, நூலில் உள்ளது.  பாராட்டுக்கள்.

       விதையின் தவறல்ல !
       முளைத்த நாற்றுகள் காய்ப்பதுண்டா?
              காய்க்கும், இந்த மண்ணில்!
       குஞ்சுகள் கூட்டைச் சுமப்பதுண்டா?
              சுமக்கும், இந்த தேசத்தில்!
       கன்றுக்குட்டிகள் உழுவதுண்டா?
              உழும், இந்த நாட்டில்
       முதிர்ந்த பயிர்களுக்கு
       மூளை மழுங்கினால்
       சிறகுள்ள பறவையே
       சோம்பேறிகளானால்
       காளைகள் வயல் உழ  
       கௌரவம் பார்த்தால்
       கல்வியைத் தேடும் வயதில்
       காசுக்குத் தேய்கிறேன் நான்!
       தவறினை மரங்கள் செய்ய
       தண்டனை விதைகளுக்கா?

       இக்கவிதையை கூர்ந்து இரண்டு முறை படித்தால், பொருள் நன்கு புலப்படும்.  மேலோட்டமாகப் படித்தால் சாதாரணமாகத் தோன்றும்.  ஆழ்ந்து படித்தால் நுட்பமான பொருள் விளங்கும்.

       உழைக்க வேண்டிய குடும்பத் தலைவன், உழைக்காமல் குடித்து பணம் அழித்து, சோம்பேறியாக வாழ்ந்தால், மகன் சிறியவனாக இருந்தாலும், படிக்க வேண்டிய வயதில், படிப்பைத் தியாகம் செய்து விட்டு, குழந்தைத் தொழிலாளியாக உழைத்து பணம் ஈட்டி குடும்பத்தைக் காக்க வேண்டிய நிலை வரும் என்பதை மிக அழகாக புதுக்கவிதையில் சுட்டியுள்ள நூலாசிரியியர் கவிஞர் பா. கிருஷ்ணன் அவர்களுக்கு பாராட்டுக்கள்.

       பா. கிருஷ்ணன் என்பதை பா வடிக்கும் கிருஷ்ணன் என்றும் பொருள் கொள்ளலாம்.

       உலகமயத்தின் காரணமாக நகர வாழ்க்கை இன்று நரக வாழ்க்கை ஆனது. இயந்திரமயமான வாழ்க்கையே இன்று இயல்பு வாழ்க்கையாகி விட்டது.  உறவுகளோடு உறவாட நேரமின்றி பணத்தாசையில் ஓடி ஓடி உழைக்கின்றனர்.  இயந்திரம் கண்டுபிடித்த மனிதன் இயந்திரமாக மாறி வருகின்றான்.  இனி வாழ்கின்றவர்களில் மனிதர் யார்? என்று கண்டுபிடிக்க ஓர் இயந்திரம் கண்டுபிடிக்க வேண்டும்.  இந்நிலை உணர்த்தும் கவிதை நன்று.

       யந்திரமானாய்!
       மனிதா! மனிதா! / வெளிச்ச வாழ்வை
       அமைத்துக் கொண்டாய் / இருட்டே எனக்கு
       மிச்சமானது / மாட மாளிகை
       அமைத்துக் கொண்டாய் / மணல் குடில்களைப்
       பெற்றுக் கொண்டோம் / நேரமே உனக்கு எஜமான ஆனது
       நிதானம் எங்கள் சொத்தாய் போச்சு
       வசதியைத் தேடி / நகர வாழ்க்கையில்
       யந்திரமானாய் / வாழ்க்கையைத் தேடி
       கிராம வாழ்க்கையில் / மானுடன் ஆனேன்.

       உண்மை தான்.  இன்னும் கிராமங்களில் தான் மானுடம் வாழ்கின்றது.

       உலகப் பொதுமறை வடித்த திருவள்ளுவர் யாருக்கும் தீங்கு இல்லாத பொய் என்றால் வாய்மையாகக் கருதப்படும் என்றார். இதனை சிலர் தவறாகப் புரிந்து கொண்டு, வள்ளுவரே பொய் சொல்லலாம் என்று சொல்லி விட்டார் என்று சொல்லி, வாயைத் திறந்தாலே பொய்யாகவே பேசி வருகின்றனர்.  அதிலும் குறிப்பாக அரசியல்வாதிகள், போட்டிப் போட்டு பொய் பேசி வருகின்றனர்.  அதனை உணர்ந்து வடித்த கவிதை நன்று.

       பொம்மைகள் !
       இந்த உலகத்தில் / எல்லோரும் இனிமேல்
       பொம்மையாகி விடுங்கள் / அப்போது தான்
       நீங்கள் பொய் சொல்ல மாட்டீர்கள்.
       இன்னொருவரை விட தனக்குத் தான்
       எல்லாம் வேண்டும் என்று / நினைக்க மாட்டீர்கள்
       மற்றவர் தனிமையை / உணர்வினை, மனசினை
       புரிந்து கொள்ளாமல் / புண்படுத்த மாட்டீர்கள்.

       பொய் பேசினால் ஊமையாகி விடுவீர்கள் என்ற நிபந்தனை இருந்தால் மட்டும் மனிதர்கள் பொய் பேசாமல் இருப்பார்கள்.

       சுவடுகள் நெய்த பாதையில் வடித்த கவிதைகள் நன்று! நூல்ஆசிரியர் கவிஞர் பா. கிருஷ்ணன் அவர்களுக்கு  பாராட்டுக்கள்!  தொடர்ந்து எழுதுங்கள், வாழ்த்துக்கள்...    


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://www.eraeravi.blogspot.in/
.


இறந்த பின்னும்
இயற்கையை ரசிக்க
கண் தானம் !

கருத்துகள்