நன்றி ! இனிய நண்பர் முதுவை ஹிதாயத்து துபாய் ! ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி - ஓர் அனுபவம் ! . துபாயிலிருந்து ராபியா குமாரன் !

நன்றி ! இனிய நண்பர் முதுவை ஹிதாயத்து துபாய் !

ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி - ஓர் அனுபவம் !
.
துபாயிலிருந்து ராபியா குமாரன் !

சென்னை புத்தகக் கண்காட்சியில் கடந்த ஐந்து ஆண்டுகளாகக் கலந்து கொண்டு பெற்ற அனுபவமும், ஆனந்தமும் என்றைக்கும் மறக்க இயலாதது. பொருளீட்ட வேண்டிய நிர்பந்தத்தின் காரணமாக விமானம் ஏறி துபாய் வந்தபோது, இனி வரும் காலங்களில் சென்னைப் புத்தகக் கண்காட்சியில் கலந்து கொள்ள இயலாமல் போய்விடுமே என்ற கவலைதான் மற்ற எல்லாக் கவலைகளையும் விட பெரும் கவலையாக மனதை ஆட்கொண்டிருந்தது.
அந்தக் கவலைக்கு அருமருந்தாக அமைந்தது ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி தந்த அனுபவம். உலகின் மிகப்பெரிய நான்கு புத்தகக் கண்காட்சிகளில் ஒன்றான ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியானது ஷார்ஜாவின் ஆட்சியாளர் மேதகு டாக்டர் ஷேக் சுல்தான் பின் முஹம்மது அல் காஸிமியின் வழிகாட்டுதலின்படி கடந்த 1982ஆம் ஆண்டு முதல் நடைபெற்று வருகிறது.
ஐக்கிய அரபு அமீரகத்தின் பல்வேறு விளம்பரப் பலகைகளை அலங்கரித்துக் கொண்டிருந்த சர்வதேச புத்தகக் கண்காட்சி பற்றிய அறிவிப்புகள் புத்தகக் கண்காட்சிக்குச் செல்ல வேண்டும் என்ற ஆர்வத்தை மேலும் அதிகப்படுத்தின. வெள்ளிக் கிழமை விடுமுறை எப்போது வருமெனக் காத்திருந்து கடந்த நவம்பர் 13ஆம் தேதி மாலை ஷார்ஜா கிளம்பிச் சென்று கண்காட்சி நடைபெறும் ஷார்ஜா எக்ஸ்போ சென்டரை அடைந்தேன். அனுமதிக் கட்டணம் ஏதும் இல்லாத அரங்கினுள் சென்று பார்த்தபோது வியப்பின் உச்சத்திற்கே சென்றேன்.
34வது ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி வழக்கம்போல் இந்த ஆண்டும் வெகு விமர்சையாக ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது. முன்னதாக கண்காட்சியைத் தொடங்கி வைத்த ஷார்ஜா மன்னர் புத்தகங்கள் வாங்கி கண்காட்சியில் பங்கெடுத்துள்ள பதிப்பாளர்களை ஊக்குவிக்கும் விதமாகவும், மனித அறிவு வளர்ச்சிக்கான நிதியாகவும் 4 மில்லியன் திர்ஹம்களை நன்கொடையாக வழங்கியது போற்றுதலுக்குரியதாகும்.
சுமார் 16000 சதுர மீட்டர் அளவிலான அரங்கில் 210 மொழிகளில் 15 இலட்சத்திற்கும் அதிகமான தலைப்புகளில் புத்தகங்கள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தது புத்தகப் பிரியர்களுக்கு பெரும் விருந்தாக அமைந்திருந்தது. சுமார் 64 நாடுகளிலிருந்து 1547 புத்தகப் பதிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்கள் கலந்து கொண்ட இந்த புத்தகக் கண்காட்சியில் இந்தியா, அமெரிக்கா, ஆஸ்திரேலியா, இங்கிலாந்து, ரஷ்யா, இத்தாலி உள்ளிட்ட சர்வதேச நாடுகளும் கலந்து கொண்டன.Arabic Section, Non-Arabic Section, Children’s Section, Official Exhibitors என நான்கு முக்கியப் பிரிவுகளாக கண்காட்சி அரங்கம் வடிவமைக்கப்பட்டிருந்தது.
11 நாட்கள் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் கல்வி, கலை, கலாச்சாரம் மற்றும் அறிவுசார் நிகழ்ச்சிகள் என சுமார் 900 நிகழ்ச்சிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. இந்நிகழ்ச்சிகளில் உலகின் பல நாடுகளிலிருந்து பல்வேறு முக்கியப் பிரமுகர்களும் ஆளுமைகளும் கலந்து கொண்டனர்.
குறிப்பாக நைஜீரியாவின் எழுத்தாளரும் கவிஞருமான Ben Okri, அயர்லாந்து எழுத்தாளர் Darren Shan, பிபிசி தொலைக்காட்சியின் தொகுப்பாளரும் எழுத்தாளருமான John McCarthy, பாகிஸ்தான் எழுத்தாளரும் கவிஞருமான Fatima Bhutto, எகிப்து நடிகர் Mohammad Sobhy, எகிப்தின் தூதுவர் மற்றும் அரசியல் எழுத்தாளர் Dr. Mostafa Al Faqi, மலையான நடிகர் Mohan Lal, இந்திய எழுத்தாளர் K. Sachidanandan, இந்தியாவைச் சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் Sudha Murthy, கவிஞர் வைரமுத்து உள்ளிட்டோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.
கண்காட்சி அரங்கில் குழந்தைகளைக் கவர்வதற்காக ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ஏற்பாடுகளும், குழந்தைகளுக்கான அறிவுசார் விளையாட்டுப் பொருட்களும், காமிக்ஸ் ஓவியம் உள்ளிட்ட புத்தகங்களும் குழந்தைகளைப் பெரிதும் கவர்ந்திருக்கும் என்பதை மறுப்பதற்கில்லை. சிறுவயதிலேயே குழந்தைகளுக்கு புத்தகம் மற்றும் வாசிப்பின் மீதான ஆர்வத்தை ஏற்படுத்த இதுபோன்ற ஏற்பாடுகளை அனைத்து புத்தகக் கண்காட்சிகளிலும் அவசியம் செய்ய வேண்டும் என்பதை உணர்த்தும் விதமாக குழந்தைகள் பிரிவு வடிவமைக்கப்பட்டிருந்தது. குழந்தைகள் ஆர்வத்தோடு புத்தகத்தைப் புரட்டிப் பார்த்த காட்சிகளும், கையில் புத்தகப் பைகளோடு வீடு திரும்பிய காட்சிகளும் பார்ப்பதற்கு கண்கொள்ளாக் காட்சியாக இருந்தன.
இந்தியாவிலிருந்தும் ஏராளமான பதிப்பகங்கள் மற்றும் புத்தக விற்பனையாளர்கள் ஷார்ஜா புத்தகக் காண்காட்சியில் பங்கெடுத்திருந்தனர். ஆங்கிலம், ஹிந்தி, மலையாளம் உள்ளிட்ட மொழிகளில் ஏராளமான ஸ்டால்கள் அமைக்கப்பட்டிருந்தன. ஆனால் இத்தனை பிரம்மாண்டமாய் நடைபெற்ற கண்காட்சியில் ஒரு தமிழ் பதிப்பகம் கூட கலந்து கொள்ளாதது மிகுந்த வருத்தத்தை அளித்தது. தமிழர்கள் வாசிப்பிலும், புத்தகம் மீதான ஆர்வத்திலும் எந்த அளவிற்கு பின்தங்கி உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்கவே மிகவும் வேதனையாக இருந்தது.
தமிழ் உள்ளிட்ட இந்தியாவின் பல்வேறு மொழிகளில் நூல்களை வெளியிடும் நேஷனல் புக் டிரஸ்ட் மற்றும் சாகித்ய அகாடமி ஆகிய ஸ்டால்களில் கூட எந்தவொரு தமிழ் நூலும் இல்லை. நேஷனல் புக் டிரஸ்ட் ஸ்டாலில் மிகக் குறைந்த அளிவலான புத்தகங்களே காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தன. அந்நூல்களைப் பார்த்துக் கொண்டிருந்தபோது, அங்கு வந்த ஒரு தம்பதியினர் சில ஹிந்தி நூல்களை எடுத்து ஸ்டாலில் இருந்தவர்களிடம் நீட்டினர். நூல்களை வாங்கியவர்கள் நீங்கள் தான் இந்த வருட புத்தகக் கண்காட்சியில் முதல் முதலாக இங்கு புத்தகம் வாங்குகிறீர்கள் என்றனர். அதைக் கேட்ட அத்தம்பதியினர் மிகுந்த மகிழ்ச்சியோடு, அப்படியா..? சென்ற வருடமும் நாங்கள்தான் இந்த ஸ்டாலில் முதன் முதலாகப் புத்தகம் வாங்கினோம் என்றனர். இதில் வருந்தத்தக்க விஷயம் என்னவெனில், 11 நாட்கள் நடைபெற்ற புத்தகக் கண்காட்சியில் 10ஆவது நாளில்தான் நேஷனல் புக் டிரஸ்ட் ஸ்;டாலில் முதல் புத்தகம் விற்பனையாகியுள்ளது. இந்த அளவிற்குத்தான் நம் நாட்டு அரசு சார்ந்த நிறுவனங்களின் செயல்பாடுகள் இருக்கின்றன.
வாசிப்பில் ஆர்வமுடைய தமிழர்களுக்கு ஆறுதல் தரும் விதமாக அமைந்தது வைரமுத்துவின் சிறுகதைகள் நூல் வெளியீட்டு விழா மட்டுமே. இந்தப் புத்தகக் கண்காட்சியில் நடைபெற்ற ஒரே தமிழ் நிகழ்ச்சியான இந்நிகழ்ச்சியில் இந்திய துணைத் தூதரகத்தின் பத்திரிகை, தகவல், கல்வித்துறை அதிகாரி சுமதி வாசுதேவ் வைரமுத்துவின் சிறுகதைகள் நூலை வெளியிட்டார். முதல் பிரதியை ஈடிஏ பிபிடி நிறுவனத்தின் செயல் இயக்குநர் அன்வர் பாஷா பெற்றுக் கொண்டார்.
வைரமுத்துவின் வருகையையொட்டி ஒரு சில ஸ்டால்களில் வைரமுத்துவின் சில புத்தகங்கள் மட்டும் கண்ணில்பட்டன. அத்தோடு மலையான பதிப்பக ஸ்டாலில் சில இஸ்லாமிய தமிழ் நூல்களும் விற்பனைக்கு வைக்கப்பட்டிருந்தன. அரபு மக்களுக்கு இணையாக கேரள மக்களும் குடும்பம் குடும்பமாக, குழந்தைகளோடு புத்தகக் கண்காட்சிக்கு வருகைதந்து ஆர்வத்தோடு புத்தகங்களை வாங்கிச் சென்றது மிகுந்த ஆச்சர்யத்தைத் தந்தது. ஆனால்; விரல்விட்டு எண்ணக்கூடிய அளவிலேயே தமிழர்கள் புத்தகக் கண்காட்சிக்கு வருகை தந்த வண்ணம் இருந்;தனர். அவர்களில் ஒற்றை எண்ணிக்கையிலான சிலரே குடும்பத்தோடு வந்திருந்தனர்.
இதற்கு முன்னர் ஒரு சில தமிழ் பதிப்பகங்கள் ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சியில் கலந்து கொண்டதாக சிலர் தெரிவித்தனர். இலட்சக்கணக்கான தமிழர்கள் அமீரகத்தில் இருந்தாலும் வாசிக்கும் பழக்கத்தில் பின்தங்கியிருக்கும் தமிழர்கள் கண்காட்சியில் பங்கேற்ற பதிப்பகங்களுக்கு கொடுக்க வேண்டிய ஒத்துழைப்பைத் தர மறுத்த தவறைப் புரிந்து செயல்பட்டால் இனிவரும் காலங்களில் ஷார்ஜா புத்தகக் கண்காட்சியில் தமிழுக்கும் இடமிருக்கும் என் நம்பிக்கையிலும், அண்டை மாநிலமான கேரள மக்களிடம் இருக்கும் புத்தகம் மீதான பிரியத்தில் பத்து சதவிகிதம் கூட நம் தமிழ் மக்களுக்கு இல்லையே என்ற கனத்த இதயத்தோடும் புத்தகக் கண்காட்சி நடைபெற்ற அரங்கை விட்டு வெளியேறினேன். மொத்தத்தில் 1.22 மில்லியன் பார்வையாளர்கள் பங்கேற்ற, 135 மில்லியன் அமீரக திர்ஹம் அளவிற்கு புத்தகங்கள் விற்பனையான 34ஆவது ஷார்ஜா சர்வதேச புத்தகக் கண்காட்சி மறக்க முடியாத அனுபவமாக அமைந்தது என்பதில் மாற்றுக் கருத்து இல்லை

கருத்துகள்