படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி !

படித்ததில்   பிடித்தது  ! கவிஞர் இரா .இரவி !
நன்றி மின் அஞ்சலில் அனுப்பிய இனிய நண்பர் ஹிமாயத் ( துபாய் )

  எமைப்பார்த்து நகைத்துவிடும் !
      ( எம். ஜெயராமசர்மா ... மெல்பேண் .. அவுஸ்திரேலியா )

       இலக்கியங்கள் இலக்கணங்கள் எவ்வளவு படித்தாலும்
       தலைக்கனங்கள் போகாமல் தடுமாறி நிற்கும்பலர்
       இருக்கின்றார் எம்மிடத்தில் எனநினைக்கும் வேளையிலே
       இலக்கியமும் இலக்கணமும் எமைப்பார்த்து நகைத்துவிடும் !

       பட்டங்கள் பலபெற்றும் பண்புதனைப் பறக்கவிட்டு
       துட்டகுணம் மிக்கோராய் தூய்மையற்று நிற்குமவர்
       பட்டங்கள் அத்தனையும் வட்டமிட்டு வானில்செல்லும்
       காகிதப் பட்டங்களாகவன்றோ கண்ணுக்குத் தெரிகிறது !

      பாடுபட்டுப் படிக்கின்றார் பலபதவி வகிக்கின்றார்
      கூடுவிட்டுப் பாய்வதுபோல் குணம்மாறி நின்கின்றார்
      கேடுகெட்ட செயலாற்றி கிராதகராய் மாறுமவர்
      பாடுபட்டுப் படித்ததெல்லாம் பயனற்றே போகிறதே !

     படிப்பறியார் பலபேர்கள் பண்புணர்ந்து வாழ்கின்றார்
     பட்டம்பெற்ற படித்தவர்க்கோ பண்புபற்றிக் கவலையில்லை
     மனம்போன போக்கிலவர் வாழவெண்ணி நிற்பதனால்
     நயமான கல்வியினை நாசம்பண்ணி நிற்கின்றார் !

     கீதையொடு குறள்படித்தும் பாதை தடுமாறுகின்றார்
     போதையிலே நாளுமவர் புரண்டுமே உழலுகின்றார்
     காதிலெவர் சொன்னாலும் கவனமதில் கொள்ளாமல்
     மோதியே மிதிப்பதையே முழுமையாய் நம்புகின்றார் !

     கற்றதனால் பயனென்ன எனக்கேட்ட வள்ளுவனார்
     கண்திறந்து பார்த்தவர்க்கு கருத்துரைக்க வந்ததாலும்
     கற்றகல்வி பட்டங்கள் காற்றிலவர் பறக்கவிட்டு
     காசையே அணைத்தபடி கண்ணியத்தை பாரார்கள் !

.

கருத்துகள்