குழந்தைகள் நிறைந்த வீடு . நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார். நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

குழந்தைகள் நிறைந்த வீடு .


நூல் ஆசிரியர் : திரைப்படப் பாடலாசிரியர் 
கவிஞர் நா. முத்துக்குமார்.
நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி.

மதி நிலையம், பிருந்தாவன் அடுக்க்கம், 4(39) தணிகாசலம் சாலை,
தி.நகர், சென்னை – 600 017.  
*****
       இன்று திரை உலகில் முன்னணிப் பாடலாசிரியராக வலம் வந்து கொண்டிருக்கும் கவிஞர் நா. முத்துக்குமார் அவர்கள் தொடக்கக் காலத்தில் ஹைக்கூ கவிஞர்.  பல்வேறு இதழ்களில் பிரசுரமான ஹைக்கூ கவிதைகளைத் தொகுத்து ‘குழந்தைகள் நிறைந்த வீடு’ என்ற பெயரில் நூலாக்கி டிசம்பர் 2000-ல் வெளியிட்ட இந்நூல் சமீபத்தில் தான் என் கவனத்திற்கு வந்தது.  இன்றும் பொருந்துவதாக சிறப்பாக உள்ளது.  பாராட்டுகள்.

       ஹைக்கூ கவிதைகளை முனைவர் பட்ட ஆய்வு செய்த  நிர்மலா சுரேஷ், திரு. அ. எக்பர்ட் சச்சிதான்ந்தம் ஆகியோரின் அணிந்துரையுடன் வந்துள்ளது.

       இந்நூலை கீஸ்லோ வஸ்க்கி, பாலு மகேந்திரா, மணிரத்னம் மூவருக்கும் காணிக்கையாக்கி உள்ளார்.  இந்நூல் கவிஞர் முத்துக்குமாரின் நான்காவது நூல்.  ஹைக்கூ கவிதையில் காட்சிப்படுத்துதல் என்பது ஒரு யுத்தி.  அந்த வகையில் அமைந்த ஹைக்கூ.

       பரட்டைத் தலையுடன் இலந்தை மரம்
       முடி வெட்டுகின்றன
       ஆடுகள்!

       ஆடுகள் இலந்தை மரத்தை மேய்வதை, உண்பதை வித்தியாசமான கோணத்தில் காட்சிப்படுத்தி வெற்றி பெறுகின்றார் நூலாசிரியர் கவிஞர் நா. முத்துக்குமார்.

       பிரபலமானவர்களின் வீடுகளுக்கு சென்று பார்த்தவர்களுக்குத் தெரியும், புரியும். படித்தவுடன் சிரிப்பு வரும் வகையில் எள்ளல் சுவையுடன் வடித்த ஹைக்கூ நன்று.

       பிரபலமானவர்களின் வீடு
       வரவேற்பறையில் பரிசுக் கடிகாரங்கள்
       எதுவும் ஓடவில்லை!

       (வரவேற்பரையில்) என்று அச்சாகி உள்ளது.அடுத்த பதிப்பில் திருத்தி வெளியிடுங்கள் .

       அனுபவங்களைப் பகிர்ந்து கொள்ளுதல் ஹைக்கூவில் ஒரு வகை.  படைப்பாளில் உணர்ந்த அனுபவத்தை வாசகருக்கும் உணர்த்துவது.

       நீலகிரித் தைலம் தீர்ந்து விட்டாலும், அந்தப் புட்டியில் தைல வாசனை இருந்து கொண்டு தான் இருக்கும். இவை நாம் அறிந்த, பார்த்த, நுகர்ந்த உண்மை. இதனை ஒரு ஹைக்கூவாக்கி உள்ளார்.

       காலியான தைல புட்டி
       நிரம்பியிருக்கிறது
       வாசனையால்!

       இயற்கை பற்றி ஹைக்கூ வடிப்பதில் ஜப்பானியர்கள் கை தேர்ந்தவர்கள் என்று ஒரு கருத்து உண்டு.
       தமிழக ஹைக்கூ கவிஞர்கள் இயற்கையைப் பற்றி ஹைக்கூ வடிப்பதில் ஜப்பானியக் கவிஞர்களை மிஞ்சி விட்டார்கள் என்றால் மிகையன்று.

       காற்று பறித்து போட்டது
       தரையெல்லாம் நட்சத்திரங்கள்
       வேப்பம் பூக்கள்!

       வேப்பம் பூக்களை நட்சத்திரங்களாகப் பார்த்த கவிப்பார்வை தான் இன்றைக்கு திரைப்படப்பாடல்கள் எழுதுவதற்கும் உதவி வருகின்றது என்றால் மிகையன்று.

       குழந்தைகள் அழும், ஏன்? என்று கேட்டால் கூடுதலாக அழும், யாரும் கவனிக்காமல் விட்டு விட்டால் அழுவதை நிறுத்தி விடும்.  இந்தக் காட்சியை ஹைக்கூவாக்கி உள்ளார் பாருங்கள்.

       யாரும் கவனிக்காததை
       உணர்ந்த சிறுவன்
       அழுகையை நிறுத்துகிறான்!

       ஏழைக்குடிசையை, கிராமத்தை, வறுமையை நினைவூட்டும் விதமாக வடித்த ஹைக்கூ, மிக நன்று.

       இறந்த பாட்டியின் மருந்து புட்டியில்
       மண்ணெண்ணெய் விளக்கு
       ஞாபகங்கள் எரிகின்றன!

       ஆறுகள் எல்லாம் பாலைவனங்கள் ஆகி வருகின்றன. வைகையில் வெள்ளம் கரைபுரண்டு ஓடிய காலம் இருந்ததாக சங்க இலக்கியம் சொல்கின்றது.  ஆனால் இன்று வைகை ஆற்றில் அழகர் இறங்கும் விழாவிற்கு லாரியில் கொண்டு வந்து தண்ணீர் ஊற்றும் நிலையும் வந்தது.அந்த நிகழ்வை நினைவூட்டிய ஹைக்கூ. 

       பறவைகள் முகம் பார்க்க
       கண்ணாடியின்று திரும்பின
       வறண்டு போனது நதி!

       இக்கால நகரத்துப்  பாட்டிகள் யாரும் பாம்படம் அணிவதில்லை.  ஆனால் அக்காலப் பாட்டிகள் பாம்படம் அணிந்தார்கள்.  அதனைப் பார்த்தவர்கள் உணர்வார்கள்.  காதை ஆட்டி ஆட்டி பேசும் பழக்கம் உண்டு.இன்றும் சில கிராமங்களில் பாட்டிகளின் காதில் பார்க்கலாம் 

       ஆயிரத்து சொச்ச அசைவுகளுக்குப் பிறகு
       அடகுக் கடையில் முடங்கி விட்டது
       பாட்டியின் பாம்படம்.

       இக்காலத்து குழந்தைகள் பாம்படம் என்றால் என்ன என்று கேட்பார்கள்.  பாம்படத்திற்கு தண்டட்டி என்ற பெயரும் உண்டு.

       உழவனின் நண்பன் மண்புழு என்று படித்து இருக்கிறோம். அப்படிப்பட்ட  நண்பனையே நிலத்தை உழும் போது கொன்று விடுகிறோம் என்பதை உழவன் அறிவதில்லை.  அதனை மண்புழு நேயத்தோடு ஹைக்கூவாக வடித்துள்ளார் பாருங்கள்.

       உழுது முடித்த வயல்.
       அங்கங்கே துடித்துக் கொண்டிருக்கின்றன
       உடல் அறுந்த மண்புழுக்கள்!

       பேப்பர் வெயிட், கேமிராமென், லிப்ட், ஷாக்ஸ் இப்படி பல ஆங்கிலச்சொற்கள் ஹைக்கூ கவிதைகளில் வந்துள்ளன.  அடுத்த பதிப்பு வெளியிட்டால் தமிழ்ச் சொற்களாக்கி வெளியிடுங்கள்.

     ஹைக்கூ கவிதை இலக்கணத்தில் சொற்க்களின் சிக்கனம் மிகவும் முக்கியம் .அந்த வகையில் அமைத்த ஹைக்கூ .மீன் பற்றி ரத்தினச் சுருக்கமாக வடித்த ஹைக்கூ நன்று.

       கடலுக்குள் தொடங்கி
       குடலுக்குள் முடித்தது
       வாழ்க்கையை மீன்!

நூலின் தலைப்பில் உள்ள கவிதை

       குழந்தைகள் நிறைந்த வீடு
       சத்தமாக ஒலியெழுப்புகிறது
       ஐஸ் வண்டி!

       உண்மை தான்.  குழந்தைகள் உள்ள வீடு அருகே வந்தால் விற்பனையாகும் என்ற ஆர்வத்தில் ஒலிஎழுப்புவார்கள்.

       ஹைக்கூ கவிதையின் மூலம் பகுத்தறிவுக் கருத்துக்களையும் விதைக்க முடியும்.  நானும் பல ஹைக்கூ கவிதைகள் எழுதி உள்ளேன்.  இதோ கவிஞர் நா. முத்துக்குமாரின் ஹைக்கூ.

       நண்பன் அடிபட்ட
       லாரியின் நெற்றியில்
       விநாயகர் துணை!

       மலையிலிருந்து அருவி பற்றி பலரும் கவிதை எழுதியுள்ளனர்.   நீர்வீழ்ச்சி அல்ல நீர் எழுச்சி என்பார்கள்.  அருவி பற்றிய ஹைக்கூ மிகநன்று.

       வயதான மலைக்கு
       தாடி நரைத்திருக்கிறது
       அருவி!

       தொலைக்காட்சி அயல் நாடுகளிலும் உண்டு.  அவர்கள் ஊறுகாய் போல பயன்படுத்துகின்றனர்.  ஆனால் நம் நாட்டில் தொலைக்காட்சியை சோறு போல பயன்படுத்துகின்றனர். விடுமுறை என்றால் காலையிலிருந்து இரவு வரை ஓடும்.  இன்றைய இளைஞர்களுக்கு தனிஅறை கிடைத்து விட்டால் விடிய விடிய தொலைக்காட்சியில் தவம் இருக்கிறார்கள்.

       தூக்கமற்ற இரவு
       சுவர்க்கோழி கத்த
       தொலைக்காட்சியை நிறுத்தினேன்.

       திரைப்படப் பாடலாசிரியரின் இன்னொரு முகமான ஹைக்கூ கவிஞர் என்பதும் சிறப்பாக உள்ளது.  பாராட்டுகள், வாழ்த்துகள்.


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்