தினமணி . கவிதைமணி ! தந்த தலைப்பு ! வான மழை நீ யெனக்கு ! கவிஞர் இரா .இரவி !

தினமணி . கவிதைமணி ! தந்த தலைப்பு !

வான மழை நீ யெனக்கு ! கவிஞர் இரா .இரவி !

நீரின்றி அமையாது உலகு உரைத்தார் திருவள்ளுவர் 
நீயின்றி அமையாது என் வாழ்வு என்பேன் நான் !

வானிலிருந்து வரும் அமுதம் மழை என்றார் 
வஞ்சி நீ என்னை வாழ்விக்கும் அமுதம் என்பேன் !

மூன்று பக்கம் கடலால் சூழ்ந்தது இந்தியா 
முழுவதுமே உன்னால் சூழப்பட்டவன் நான் !

வான்மழை பொய்த்தால் பூமி வாடி வதங்கிவிடும் 
வடிவழகி உன் பார்வை பொய்த்தால் நான் வாடிடுவேன் !

மண்ணில் பயிர்கள் வளர்ந்திட வேண்டும் வான்மழை 
மண்ணில் நான் வாழ்ந்திட வேண்டும் உன் பார்வைமழை !

மழை பொய்த்தால் எங்கும்  வறட்சி வந்துவிடும் 
மங்கை நீ வராது பொய்த்தால் மனக்கவலை வந்துவிடும் !

நல்ல மழை பொழிந்தால் உள்ளவர்கள் மகிழ்வார்கள் 
நங்கை உன் பார்வை மழை பொழிந்தால் மகிழ்வேன் நான் !

மழை பெய்தால் நீர் நிலைகள் நிரம்பி வழியும் 
மங்கை நீ வந்தால் மகிழ்வில் பொங்கிடுவேன் நான் !

உழவர்கள் உயர்வாக எண்ணுவது வான்மழையை 
உன்னை உயரவாக என்றும் எண்ணுவது என்  நிலையே !

' மாமழை  போற்றுதும் 'என்பார்கள் இலக்கியத்தில் 
'மங்கை உன்னைப் போற்றுதும்' என்பேன் நான் !

கண்கள் இரண்டு போதாது  வான்மழை  ரசிக்க 
கண்கள் இரண்டு போதாது  கள்ளி உன்னை  ரசிக்க !

மழை பொழிந்திட மரங்கள் வளர்க்க வேண்டும் 
மங்கை நீ மகிழ்ந்திட அன்பை விதைக்க வேண்டும் !

வளம் செழிக்க பூமிக்குத் தேவை வான்மழை 
வஞ்சி நீ என்னை செழிக்க வைக்கும் பூமி மழை !


நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்