அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது ! நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா ! நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !

அந்த நாடோடியின் பாடல் நனைந்து விட்டது !



நூல் ஆசிரியர் : கவிஞர் மௌனன் யாத்ரீகா !

நூல் விமர்சனம் : கவிஞர் இரா. இரவி !


எழுத்து, 3
G, எல் டோராடோ, 112, நுங்கம்பாக்கம் ஹை ரோடு,
சென்னை – 600 034.  பக்கம் 112, பேச : 044 28270931 
ezhuttu@gmail.comவிலை : ரூ. 90
*****
       இந்த நூல் மதுரையில் நடந்த ‘எழுத்து’ நூல்கள் வெளியீட்டு விழாவில் வாங்கி வந்தேன்.  பரிசும் பாராட்டும் பெற்ற கவிதை நூல் இது.  நூல் ஆசிரியர் ‘மௌனன் யாத்ரீகா’ அவரது புனைப்பெயர் போலவே கவிதைகளும் வித்தியாசமானவை தான்.  இந்நூலை “பின்னிரவுகளில் விழித்திருப்பவர்-களுக்கு சமர்ப்பணம்”  ஆக்கி உள்ளார்.

  கவிஞருக்கும் பின்னிரவுக்குப் பின் விழித்திருக்கும் பழக்கம் இருக்கும் என்று கருதுகிறேன்.  அந்த நிசப்தமான தருணங்களில் மலர்ந்த கவிதையாக இருக்கலாம்.  ஆனால் இரவு விழித்து இருப்பது உடல்நலத்திற்கு நல்லது அல்ல என்று மருத்துவர்கள் சொல்கிறார்கள்.

       மரத்திலிருந்து பூ உதிர்வதை, இலை உதிர்வதைப் பார்த்தி இருக்கிறோம்.  அது குறித்து அவ்வளவாக யாரும் சிந்திப்பதில்லை.  ஆனால் நூலாசிரியர் கவிஞர் சிந்தித்து கவிதை வடித்துள்ளார்.  பாருங்கள்.

       இலையின் நடனம்!

       அந்த மஞ்சள் மலர் 
       நான் பார்த்துக் கொண்டிருக்கும்
       போது தான் உதிர்ந்தது
       முன்னுதிர்ந்த இலைகளின் மேல்
       அது வீழ்ந்த தருணத்தில் 
       ஒரு வெளிச்சம் வியாபித்தது
       காற்றுக்கு இடம் மாறும் 
       அம் மலரின் மிதப்பை
       அதை உதிர்த்த மரத்திலும் கூட 
       காண முடியவில்லை
       அவ்வளவு லேசான நடனம் அதில் !

       இயற்கை பற்றிய படப்பிடிப்பு நன்று.  பாராட்டுக்கள்.  இலையின் நடனம் என்று தலைப்பை விட, மலரின் நடனம் என்று இருந்தால் பொருத்தமாக இருந்திருக்கும் என்பது என் கருத்து.
       நூலாசிரியர் இயற்கை நேசர் காடுமலை சுற்றி மரம் காற்று ரசிக்கும் ரசிகர் என்பதை கவிதைகள் உணர்த்துகின்றன. 

       வாசித்தல்!
       இந்த உலகின் வியப்பை 
       வாசித்து விட அலைகிற நாடோடி நான்
       நதியில் உதிரும் இலை என் சாயல் 
       காற்றின் திசையற்ற சுவாசம் எமது
       மலையுச்சிக்க்கு வந்தமரும் கழுகின் 
       கூடிருக்கும் அடர்காடெனது
       நிலத்தின் ஆகிருதியை ஊடுருவிப் பாயும் 
       சிறுபுல் விறைப்பு என் உடல்
       இந்த நாடோடியின் பின்னலைகிறது காலம் !

       வாசிப்பு என்பது நூலை வாசிப்பது மட்டுமல்ல. இயற்கை ரசித்து மகிழ்வதும் ஒருவித வாசிப்பு தான் அவையும் மனதில் தங்கும் என்பதும் உண்மை.  வித்தியாசமான வாசிப்பு நன்று. 

       நூலின் தலைப்பிலான கவிதை இதுவாகத்தான் இருக்கும் என்று கருதுகிறேன்.  அந்த கவிதை இதோ!

       உலராத பாடல் !

       வழி நெடுகப் பாடிக்கொண்டே செல்லும்
       நாடோடியின் பாடல் துயரமானது
       ஊன்றிவிட்டு வந்த விதைகள்
       இந்நேரம் துளிர்க்கச் தொடங்கி இருக்கும்
       எம் மண்ணின் கொதிப்பை
       பச்சை இலைகள் தணித்திருக்கும் என்று
       பொருள்படும் சில வரிகளில்
       அத்துயரத்தை நான் உணர்ந்தேன்
       எதிர்ப்பட்ட ஆற்றில் இறங்கிச் சென்றவனை
       அழைத்துச் செல்வதாக வாஞ்சையுள்ள படகோட்டியிடம்
       என் தாய் தகப்பனின் கடைசி ஓலம்
       இந்த ஆற்றில் கலந்திருக்கிறது
       நான் அதைக் கேட்க வேண்டும் என்று
       கூறிய அவனது பாடல்
       எதிர்கரை வந்த போது நனைந்து கனத்திருந்தது
       அப்பாடலை உலர்த்தாமலே
       அப்படியே எடுத்துச் சென்றான் படகோட்டி!

       அம்மா, அப்பா-வை தண்ணீரில் இழந்த ஒருவனின் சோகப் பாடலை நன்கு வடித்துள்ளார்.  இழந்தவர்களுக்குத் தான் இழப்பின் வலி தெரியும்.  இக்கவிதை படித்த போது ஈழத்தில் இலட்சக்கணக்கில் படுகொலை செய்த போது எழுந்த ஓலம் என் நினைவிற்கு வந்தது.  இது தான் படைப்பாளியின் வெற்றி. 

 ஒன்று படிக்கும் போது அது தொடர்பான மற்றொன்று வாசகன் நினைவிற்கு வர வேண்டும்.  இக்கவிதையின் முடிப்பு நன்று.  படகோட்டி பாடலை மறக்காமல் மனனம் செய்து விட்டான் என்ற கருத்தை, ‘உலர்த்தாமலே அப்படியே எடுத்துச் சென்றான் படகோட்டி’ என்ற முடிப்பு நன்று.

       வாழ்ந்து வந்த மரங்கள் வெட்டப்பட்ட பின்பும் பறவைகள்ம் மனிதர்கள் போல, புலம்பெயர்ந்து வாழ்ந்து கொண்டு இருக்கின்றன் என்ற கருத்தை பறவைகளின் இருப்பை உணர்த்திடும் கவிதை நன்று.  பல மரங்கள் உருவானதே பறவைகள் இட்ட எச்சத்தால் என்பதை மனிதர்கள் உணர்வதில்லை.  வெட்டிச் சாய்த்து பணம் பார்த்து வருகின்றனர்.

       பறவைகள் இருக்கின்றன!
       மரங்கள் முழுமையாக வெட்டிய பிறகும்
       பறவைகள் இருக்கின்றன.
       கூடுகள் கட்ட கிளைகள் இல்லை
       கலவி நடத்தவும் முட்டையிடவும்
       கூடுகள் இல்லை என்ற போதும்
       பறவைகள் இருக்கின்றன !

       கவிதைக்கு உவமை அழகு தான். பொருத்தமான உவமையாக இருந்தால் கவிதையின் தரத்தை மேலும் உயர்த்தி விடும் என்பது உண்மை. இங்கே உவமை கூட இயற்கை நேசமாகவே வெளியிடுகின்றது பாருங்கள்.

       காத்திருத்தல் !

       அவன் காத்திருந்தான் 
       எல்லா இலைகளையும்
       உதிர்ந்து விட்டு நிற்கும்  
       மரத்தில் காத்திருக்கும்
       பறவையைப் போல.
       தனிமையைப் பாட முடியாத  
       பறவையின் வலி அவனிடமும்
       இருந்தது 
       கதறி அழ முடியாத 
       நெருக்கடியான துயரம் அது !

இப்படியே நீள்கின்றது  இக்கவிதை. 

       காதல் பாடாத கவிஞன் இல்லை.  காதல் பாடவில்லை என்றால் கவிஞனே இல்லை.  நூலாசிரியரும் காதல் பாடி விட்டார்.  பாருங்கள்.

       காதல் கிழத்திக்கு !

       பொய் சொல்ல விருப்பமில்லை
       உன் உடல் வனப்பு கண்டு
       பித்துற்ற என் காமம் தான்
       என் இச்சைக் கூத்தை மறைத்து
       உன்னிடம் நாயக பாவம் காட்டியது
       உன்னைத் துய்க்க விரும்பும்
       மோகத் தொனியை
       காதலென்று விண்ணப்பத்தில் குறிப்பிட்டேன் !

       காதலியிடம் ஒளிவு மறைவு இன்றி உன் மீது எனக்கு காமம் இருப்பது உண்மை என்று ஒப்புதல் வாக்குமூலம் தந்து விடுகிறார்.  வித்தியாசமான கவிதை நன்று .
       ஒரு கவிதை எழுத !
       கசங்கி சுருண்ட 
       ஒரு காகிதத்தை வரைந்திட முடிந்தால்
       காற்றில் இடம் மாறிப் பறக்கும் 
       ஒரு சருகைக் கோடுகளாக்க
       முடிந்தால் 
       அடர் பச்சைத் தாவரத்தின் 
       உள்ளடுக்கில்
       அமைந்த இலையில் 
       நுண்ணுயிர் இட்டு வைத்த
       சிறு முட்டைகளைக் கவனப்படுத்தினால்
       இதுவெல்லாம் போதாது 
       ஒரு கவிதை எழுத
       இதனினும் ஆழச் செல்ல வேண்டும் !

       மேலோட்டமாக எழுதுவது கவிதை அல்ல, ஒரு நல்ல கவிதை என்பது ஆழச் செல்ல வேண்டும் என்பது உண்மை. நூல் ஆசிரியர் கவிஞர் மௌனன் யாத்ரீகா அவர்களுக்கு பாராட்டுகள் .கவிதை நூல் எழுத்தின் பரிசு பெற்றது என்ற மகிழ்வோடு  நின்று விடாமல் தொடர்ந்து எழுதுங்கள் .வாழ்த்துகள் .
  
நன்றி
அன்புடன்
கவிஞர் இரா .இரவி

http://tamil.pratilipi.com/kavignar-eraravi

கருத்துகள்

  1. நன்றி. எனது கவிதை நூல் பற்றிய தரமான கருத்துரை வழங்கியுள்ளீர்கள். எனக்கான வாசகப் பரப்பை அதிகரிக்கச் செய்துள்ள தங்கள் விமர்சனப் பணி யாவருக்கும் கிடைக்கட்டும்.

    மிக்க அன்புடன்

    மௌனன் யாத்ரீகா

    பதிலளிநீக்கு

கருத்துரையிடுக