இயக்குனர் லிங்குசாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !




இயக்குனர் லிங்குசாமி அவர்களின் பிறந்த நாளை முன்னிட்டு அவரது நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
லிங்கூ !
கவிதையும் ஓவியமும் கவிஞர் லிங்குசாமி !
நூல் விமர்சனம் கவிஞர் இரா .இரவி !
விகடன் பிரசுரம் ,757,அண்ணா சாலை ,சென்னை .600002
விலை ரூபாய் 90. தொலைபேசி 044- 28524074.
.
கவிதையும் ஓவியமும் இயக்குனர் , தயாரிப்பாளர் , கவிஞர் லிங்குசாமி திரைப்படத்துறையில் இருந்துகொண்டு ஹைக்கூ தடத்திலும் கால் பதித்ததமைக்கு பாராட்டுக்கள் .நூலின் தலைப்பே லிங்கூ என்று வித்தியாசமாக வைத்தது சிறப்பு .
நூலில் உள்ள ஓவியங்கள் கிறுக்கல் போல இருந்தாலும் நவீன ஒயியம் போல தோற்றம் அளிக்கின்றன .இந்த நூலில் ஹைக்கூ கவிதைகள் உள்ளன .ஹைக்கூ அல்லாத கவிதைகளும் உள்ளன .ஹைக்கூ கவிதைக்கு குறைந்தபட்ச இலக்கணம் மூன்று வரிகள் .இந்த நூலில் மூன்று வரிகளில் ஹைக்கூ கவிதைகள் பல இருந்தாலும் ,சில கவிதைகள் இரண்டு வரிகளிலும் ,சில கவிதைகள் நான்கு , அய்ந்து வரிகளிலும் , 12 வரிகளிலும் உள்ளன. கவிதைகள் நன்றாக உள்ளன .பாராட்டுக்கள் .
கவிஞனுக்கு கற்பனை அழகு , சிந்தனை அழகு ,வெளிப்பாடு அழகு, ஒப்பீடு அழகு , உவமை அழகு , குறியீடு அழகு .ஹைக்கூ கவிதையில் காட்சிப் படுத்துதல் ஒரு நுட்பம் .அந்த வகை ஹைக்கூ நன்று .இந்த ஹைகூவைப் படிக்கும் போது வாசகனுக்கு பனைமரமும் , மயிலும் மனக்கண்ணில் வந்து விடும் .படைப்பாளியின் வெற்றி
மொட்டைப் பனை மரத்தில்
தோகை விரித்தபடி
மயில் !
.நமது ஏழ்மையை பிச்சைக்காரன் கூட புரிந்து கொண்டானோ ? என வருத்தப்படவைக்கும் விதமான சிந்தனை ஒன்று
என்னிடம் கேட்காமல் கடந்து செல்கிறான்
பிச்சைக்காரன் !
செல்போன் கோபுர கதிர் வீச்சுகள் பெருகி குருவிகள் இனத்தையே கருவறுத்து வருகின்றன .குருவிகளை நினைவூட்டும் ஹைக்கூ .
இன்னும் கட்டி முடிக்கப்பட வில்லை
அதற்குள் குடிபுகுந்து விட்டன
குருவிகள் !
காதலி கடைக்கண் காட்டி விட்டால் மாமலையும் சிறு கடுகு என்றார் புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் .அதுபோல காதலி கடைக்கண் காட்டி விட்டால் காதலன் சுருப்பாகி விடுவான் என்பது உண்மை .அதனை வழிமொழிந்து ஒரு ஹைக்கூ !
நீ வடம் பிடிப்பதற்கு
முன்னதாகவே
நகர ஆரம்பித்துவிடுகிறது தேர் !
இங்கே தேர் என்பது குறியீடு !
ஒருதலைக் காதலில் காதலியின் மீதுள்ள் பயத்தை உணர்த்தும் ஹைக்கூ .
ஒரு சிங்கத்தைக்
காதலித்திருந்தால் கூட இந்நேரம்
சொல்லியிருப்பேன் !
முன்பு வந்த ஹைக்கூ ஒன்று .
இளநீர் விற்கிறான்
தாகத்துடன்
இளநீர் வியாபாரி
என்பதுபோன்ற ஒன்று மிக நன்று .
இஸ்திரி போடும் தொழிலாளியின்
வயிற்றில் சுருக்கம் !
காதலனுக்கு காதலியைப் பார்ப்பதுதான் திருவிழா .காதலி இல்லாத திருவிழா இனிக்காது காதலனுக்கு .அதனை உணர்த்தும் ஹைக்கூ .
நீ ஊரில் இல்லை
அதுதெரியாமல்
திருவிழா கொண்டாடுகிறார்கள் !
ஆசையை அறவே அழி .ஆசையே அழிவுக்கு காரணம் என்றார் புத்தர். புத்தரை வணங்குபவர்கள் அவர் சொன்ன போதனைகளை மறந்து பேராசைப் பட்டு அழிவுக்கு வழி வகுத்து வருகின்றனர் .இப்படி பல சிந்தனை விதைக்கும் இரண்டே வரி மிக நன்று .
ஆசையாய் வாங்கினேன்
புத்தர் சிலை !
காக்கை சத்தமிட்டால் விருத்தினர் வருவர் என்ற சிந்தனையை மாற்றி யோசித்து உள்ளார் .சித்தர்கள் போல தத்துவம் போல வாழ்வின் நிலையாமையை உணர்த்தும் ஹைக்கூ நன்று .
மயான கூரையின் மேல்
காக்கையின் சத்தம்
யார் வரப்போகிறார்கள் !
காதலி அங்கும் இங்கும் அலைந்து படிப்பதைப் பார்த்த மலரும் நினைவுகளை புதுக்கவிதை ஆக்கி உள்ளார் .
நீ தினமும்
பால்கனியில் அங்குமிங்கும்
நடந்தபடி படிப்பாயே
அது வரலாறு !
காதலியுடன் கோவில் செல்லும் காதலன் காதலி கண்ணை மூடி கடவுளை வணங்கும்போதேல்லாம் காதலியை ரசிக்கும் இயல்பை உணர்த்து ஹைக்கூ ஒன்று .காதலியுடன் கோவில் சென்றவர்கள் உணர்ந்து ரசிப்பார்கள் .
இன்னும் கொஞ்ச நேரம்
கண்களை மூடி
வேண்டக் கூடாதா !
குருவிகள் அழிந்து வருவதையும் உணர்த்தி உள்ளார் .நமது வருங்கால சந்திதிகள் குருவிகள் என்ற பறவைகளையே முடியாமல் போகலாம் .என்ற வருத்தத்தை பதிவு செய்யும் விதமாக உள்ளது .
இப்போதெல்லாம்
ரிங் டோன்களில் மட்டுமே
கேட்க முடிகிறது
குருவிகளின் சத்தம் !
எதிர்காலத்தில் ஹைக்கூ கவிதைகள் பற்றிய புரிதலுடன் எழுதினால் இன்னும் சிறப்பாக இருக்கும் . இயக்குனர் லிங்குசாமியின் இலக்கிய ஆர்வத்தை ,படைப்பாற்றலைப் பாராட்டலாம் .

கருத்துகள்