தினமணி கவிதைமணி தந்த தலைப்பு ! செல்லாக் காசு ! கவிஞர் இரா .இரவி !

தினமணி கவிதைமணி தந்த தலைப்பு !


செல்லாக்   காசு !  கவிஞர் இரா .இரவி !

செல்லாது பணம் என்று அறிவித்து விட்டு
சென்று விட்டார் ஜப்பான் பயணம் !

சென்ற இடமெல்லாம் மக்கள் எங்கும்  
சீரழிந்து  அல்லல்பட்டு அவதிப் பட்டனர் !

யாரும் வாங்க மறுக்கவே மக்கள்
என்ன செய்வது தெரியாமல் தவித்தனர் !

இரண்டு நாட்கள் வங்கி விடுமுறை
என்பதும் திடீர்  அறிவிப்பு செய்தனர் !

ஆயிரம் ஐநூறு பணம் வைத்துக் கொண்டு
எங்கே நூறு கிடைக்கும் என்று அலைந்தனர் !

சாப்பிட வழியின்றி பட்டினி கிடந்தனர்
சாபம் விட்டு சபித்து திட்டினர் !

வெளிநாடுகளில் இருந்து  சுற்றுலா வந்தவர்கள்
வைத்திருந்த பணம் செல்லாது வேதனை அடைந்தனர்  !

இயல்பு வாழ்க்கை எங்கும் பாதித்தது
இந்தியா  முழுவதும்  வேதனையில் !

வாக்களித்த மக்கள் வெயிலில்
வரிசையில் நின்றனர் வங்கிகளில் !

மயங்கி விழுந்து உயிர் பலியும் ஆனது
மனம் இறங்கவில்லை அவர்கள் !

வங்கிகளின் வரிசைகளில் தேடித் பார்த்தேன்
வளமான பணக்காரர்கள் தென்பட வில்லை !

கோடிகள் குவிக்கும் நடிகர்கள் யாரும்
கண்ணிற்குப்  புலப்படவில்லை வரிசையில் !

சாதாரண மக்கள் தினமும் வங்கிகளில்
சலிப்போடு கால் வலிக்க நிற்கின்றனர் !

கால்  மட்டும் வலிக்கவில்லை அவர்களுக்கு
காலோடு சேர்த்து மனமும் வலிக்கின்றது !

இதற்காகவா வாக்களித்தோம் என்று
எல்லோரும் புலம்பித்  தவிக்கின்றனர் !

கருப்பணத்தின் கடல் கடன் வாங்கிக்
கட்டாத மல்லையாவை வழியனுப்பி வைத்தனர் !

சுவீஸ் வங்கியிலிருந்து கொண்டு வருவதாகச்
சொன்னவர்கள் ஒரு ரூபாயும் கொண்டு வரவில்லை !

கோடிகள் பதுக்கி இருக்கும் அரசியல்
கேடிகள் இரண்டாயிரமாக மாற்றி விட்டனர்

எந்த நேரமும் பணம் எடுக்கும் இயந்திரமோ
எந்த நேரமும் பூட்டியே இருக்கின்றன !

ஏழை எளிய நடுத்தர மக்கள் தினமும்
ஏக்கத்தோடு வங்கிகளில் காத்திருக்கின்றனர் !

வேலைக்குச்   செல்ல இயலாமல் தினமும்
வங்கியின் வாசலில் தவம் இருக்கின்றனர் !

வெந்த புண்ணில் வேல் பாய்ச்சும்
விதமாக வீர வசனம் வேறு பேசுகின்றனர் !

கருத்துகள்