பாவாணர் பாட்டரங்கம் தந்த தலைப்பு ! தனித்தமிழ் பொங்கல் ! கவிஞர் இரா .இரவி !

பாவாணர்    பாட்டரங்கம்  தந்த  தலைப்பு !

பாவாணர்    பாட்டரங்கம்  தந்த  தலைப்பு !

தனித்தமிழ் பொங்கல்  ! கவிஞர் இரா .இரவி !

தனித்தமிழ்  இயக்கம் நூற்றாண்டு கண்ட காலமிது 
தனித்தமிழ் காக்க தமிழர்கள் அணி வகுப்போம் !

தமிங்கிலம் பேசிடும் அவலத்தை நிறுத்துவோம் 
தனித்தமிழ்  பேசாவிடினும் தமிழாவது பேசுவோம் !

வடசொல் கலப்பின்றி பேசிப் பழகுவோம் 
வந்திட்ட ஆங்கிலக் கலப்பின்றி பேசுவோம் !

ஊடகங்களின் தமிழ்க்கொலைக்கு முடிவு கட்டுவோம்
உணர்வோடு நல்ல தமிழில் பேசி மகிழ்ந்திடுவோம் ! 


நடந்தவைகள் நடந்தவைகளாக இருக்கட்டும் இனி 
நடப்பவைகளை தமிழுக்கு நன்மையாகட்டும் !

தமிழர்களின் அடையாளம் முதல்மொழி தமிழ் 
தமிழர்களே நல்ல தமிழ் பேசுவோம் எழுதுவோம் !

அன்னைத் தமிழை அரியணை ஏற்றி மகிழ்வோம் 
அகிலம் முழுவதும் ஒலிக்கும் மொழி நம் தமிழ் !

ஆலயங்களில் இனி தமிழ் மட்டுமே ஒலிக்க வேண்டும் 
அந்நியமொழி இனி ஆலயத்தில் ஒலிக்க வேண்டாம் !

உயர்நீதி மன்றத்திலும் இனி தமிழ் ஒலிக்க வேண்டும் 
உயரதனிச் செம்மொழி   தமிழ் சிறப்புற வேண்டும் !

உயர்கல்விகளும் இனி தமிழில் வர வேண்டும் 
உரிய உயர்ந்த இடம் தமிழுக்கு வழங்கிட வேண்டும் !

தாய் மொழியிலேயே அனைத்துக் கல்வியும் 
தரமாக வழங்கியதால் சிறந்தது சப்பான் நாடு !

தமிழர் திருநாளாம் தை திங்கள் நன்னாளில் 
தமிழர்கள் யாவரும் தமிழை வளர்க்க உறுதி ஏற்போம் !

கருத்துகள்