படித்ததில் பிடித்தது ! கவிஞர் இரா .இரவி.

படித்ததில் பிடித்தது !  கவிஞர் இரா .இரவி.

முது முனைவர் இறைஅன்பு இ .ஆ .ப,அவர்களின் "நெஞ்சைத் தொட்டதும் …சுட்டதும்" நூலில் தாய் என்ற கட்டுரையிலிருந்து சில துளிகள்.

தாய்
தாய் ஈரெழுத்து திருக்குறள்
ஒரு சொல் காவியம்
அம்மா என்ற சொல் உயிர் எழுத்தில் தொடங்கி,மெய்யை மையப்படுத்தி உயிர் மெய்யில் முடியும் உன்னதம் கொண்டது .

நான் சின்ன வயதில் இருந்தே என் அம்மாவிடமிருந்து கற்றுக் கொண்டது எதையும் செம்மையாகச் செய்ய வேண்டும் என்பதுதான் .
தாயிடம் இருந்து மனப்பாட சக்தியையும் ,தந்தை இடமிருந்து படைக்கிற திறனும் பெற்றதாய்த் தெரிந்தவர்கள் அடையாளப் படுத்துவார்கள் .
உறவுகள் பல வளர்ச்சியால் விளைவன.தாயின் உறவே வளர்ச்சியைத் தருவது .
மிதிவண்டியோட்டி விழுந்தபோது ஏற்பட்ட முதல் காயத்தில் அழுத அதே தாய் .வாகன விபத்தில் அடிபட்டு இரு கைகளிலும் கோலுன்றி நடந்தபோது ,இப்படி உன்னைப் பார்க்க நேர்ந்ததே ,உன் நடையின் வேகமல்லவா உனக்கு அழகு சேர்த்தது .என்று வாய் பொத்தி அழுதபோது அந்த ரணதிற்க்காவாவது கால் விரைவில் குணமாகி விட வேண்டும் என்று தோன்றியது .

தங்கள் மகன்கள் மகள்கள் நேர்மையுடனும், அறிவுடனும்,ஒழுக்கத்துடனும், உண்மையுடனும் ,சமூகப் பொறுப்புடனும் ,அன்புடனும் ,பண்புடனும் திகழ வேண்டும் என்று சின்ன வயதில் இருந்தே கதைகளைச் சொல்லி மகன் வகுப்பிற்கே ஆசிரியராகவும் இருந்தும் மதிப்பெண்களில் கண்டிப்புக் காட்டி ,வளர்கிற நாட்களில் பொறுப்பினை ஊட்டி வளர்ந்த பிறகும் நிதானத்தை சொல்லி இன்றும் என் சொற்களிலும் எழுத்துக்களிலும் அந்த தாயே வெளிப்படும் அளவிற்கு வாழ்ந்து கொண்டிருக்கும் என் தாய் என்னை இயக்கும் அதிசய சக்தி .

கருத்துகள்